Tuesday, May 16, 2017

தர்மத்தின் சாரம்

பிராமணன் வேறு, தமிழன் வேறா?



Saturday, February 25, 2017

சோ - பெயர்க்காரணம்

எங்க அம்மா ராஜலட்சுமி. எல்லோரும் "ராஜம்மா' என்றுதான் கூப்பிடுவோம். அவரை மாதிரி ஒரு பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்குப் பொறுமை.
தாய்வழிப் பாட்டியும் ஆச்சாரமா அத்தனை வேலையையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு சர்வசாதாரணமாகச் செய்வார். அவர் அதிர்ந்து பேசி நான் பார்த்தது இல்லை. அந்தக் காலப் பெண்களில் பலர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த மாதிரி இருந்தார்கள். அப்படித்தான் எங்க அம்மாவும் இருந்தார். எதையும் சட்டென்று கிரகித்து கொள்கிற கற்பூர புத்தி. சாமியார்களையோ, ஜோதிடர்களையோ நம்ப மாட்டார். சந்நியாசிகளில் அவர்கள் நம்பி மதித்தது மகா பெரியவாளை மட்டும்தான்.
நான் எப்பேர்ப்பட்ட தப்புப் பண்ணினாலும் "ஏன்டா... இப்படி முட்டாளா இருக்கே'' என்பதைத் தாண்டி எதையும் பேச மாட்டார். அதுதான் அவர்களுடைய அதிகபட்ச கண்டிப்பு.
அவர் எனக்கு வைத்த பெயர்தான் "சோ''. அதற்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கிறது. ராஜராஜ சோழனுக்கு ஒருசமயம் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து தப்பித்து கோயிலுக்கு அவர் ஓடினார். ஓடினபோது முன்னால் இருந்த விநாயகர் சோழனிடம், "நீ பின் வழியா உள்ளே ஓடிப்போயிடு. நான் பிரம்மஹத்தி வந்தா பிடிச்சு வச்சிக்கிறேன்'' என்று சொல்லி விட்டார். அது சோழனைப் பிடித்த பிரம்மஹத்தி.
அதை நினைவில் வைத்து எங்க அம்மா என்னை "சோழன் பிரம்மஹத்தி' என்று கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிடுற அளவுக்கு அப்போது சேட்டை, வம்பு, தொந்தரவு எல்லாம் பண்ணியிருக்கிறேன் போலிருக்கிறது...
"சோழன் பிரம்மஹத்தி' என்று முதலில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் அதைச் சுருக்கி "சோழன்' என்று கூப்பிட்டார்கள்.
பிறகு "சோழா.. சோழா..'' என்று கூப்பிட்டுப் பிறகு அது இன்னும் சுருங்கி "சோ'' என்றாகிவிட்டது!
அப்புறம் மற்றவர்களும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி எனக்கு வந்த பெயர் "சோ''. அப்ப, எங்க அம்மா வைத்த அந்தச் சுருக்கமான பெயர்தான் நான் பிரபலம் ஆவதற்கு மிகவும் உதவியது என்று சொல்ல வேண்டும்!
இப்படிப் பலருக்கு நான் "சோ' ஆகிவிட்டாலும் எங்க தாத்தா அருணாசல அய்யர் மட்டும் என்னை, "டேய்.. ராமஸ்வாமி'' என்றுதான் கூப்பிடுவார். என்னுடைய தம்பி அம்பியையும் "ராஜகோபால்' என்று முழுப்பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அது அவருடைய வழக்கம்.
என்னுடைய தம்பிக்கு "அம்பி' என்று எங்க அப்பா பட்டப்பெயர் வைத்த மாதிரி என்னுடைய சகோதரி விஜயாவுக்கு "விக்டர்'' என்று பெயர் வைத்து விட்டார். "அட்வகேட்'', "பொயட்'', "கோர்ட் ஃபீஸ்'' - இப்படியெல்லாம் எங்க உறவுக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர் பட்டப் பெயர்கள் வைத்திருந்தார்.
எனக்குச் "சோ' என்று பெயர் சூட்டிய எங்க அம்மா கடைசிவரை நான் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால் நான் நடித்த சினிமாக்கள் எதையும் பார்க்க மாட்டார்.
நான் நாடகங்களில் நடிப்பதை முதலில் விரும்பாவிட்டாலும் பிறகு என்னுடைய நாடகங்களுக்கு வந்து பார்த்திருக்கிறார்.
எனக்கு முதல் சினிமா வாய்ப்பு வந்த சமயம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்த
"பார் மகளே பார்' படத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தார்கள்.
அப்பாவிடம் சொன்னேன். அவர் படு ஜோவியல். "நல்லா போய்ப் பண்றா... ஜமாய்டா'' என்று கை காட்டி விட்டார். மற்ற உறவினர்களும் வரவேற்றார்கள்.
ஆனால் அம்மா "நடிக்கக் கூடாது'' என்று மறுத்துவிட்டார்!
"இவ சம்மதிக்கல்லைன்னா விடுடா.. அவளுக்கு வயிற்றெரிச்சல். அதனால சொல்றா..'' என்று அப்பா எனக்கு சமாதானம் சொன்னாலும் சினிமாவில் நான் நடிப்பதை அம்மா விரும்பவே இல்லை!
••••••••••••••••••••••••
பிரபல நடிகர் வி.கே.ஆர் (வி.கே.ராமசாமி) பயங்கர ரேஸ் பிரியர். ஒருமுறை ரேஸில் அவருடைய குதிரை ஜெயித்துவிட்டது. அதற்காக "கப்' வாங்கப் போயிருக்கிறார். "கப்'பை வழங்கியவர் ஜெமினி எஸ்.எஸ். வாசன்.
கப்பைக் கொடுத்துவிட்டு, "நீதானே ராமசாமி. நாளைக்கு வந்து என்னை ஸ்டுடியோவில பாரு'' என்று சொல்லியிருக்கிறார்.
வி.கே.ஆர். மறுநாள் சென்றபோது வாசன் சொல்லியிருக்கிறார், "இந்தக் குதிரையை வித்திடு. இனி ரேஸ் பக்கம் போகாதே. நான் ரேஸில் நிறையப் பணம் சம்பாதிச்சு படம் எடுத்திருக்கேன். அதுக்குப் பிறகு ரேஸுக்குப் போறதில்லை. அது எங்கோ உன்னை இழுத்து விட்டுடும். இதை இன்னைக்கோட நிறுத்திடு''.
அதைக் கேட்டதும் அன்றுடன் ரேஸுக்குப் போவதையே நிறுத்திவிட்டார் வி.கே.ஆர். அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
தன்னிடம் உள்ள தவறான பழக்கத்தை ஒருவர்
உரிமையுடன் கண்டித்துச் சொல்கிறபோது அதை ஏற்று நடக்கிற பெருந்தன்மை வி.கே.ஆரிடம் இருந்தது. அவரைப்போல் நல்ல எதிர்காலம் கொண்ட ஒரு நடிகர் பாழாகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் எஸ்.எஸ்.வாசனுக்கு இருந்தது.
எவ்வளவு அற்புதமான மனிதர்கள்!
"அனுபவத் தொடரில்' சோ.ராமசாமி

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2017/feb/19/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2651890.html

Sunday, December 25, 2016

சோ - நீங்காத நினைவுகள் — குருமூர்த்தி

சோ - நீங்காத நினைவுகள் — குருமூர்த்தி

சோஅவர்களை நான் முதலில் சந்தித்தது 1975-ஆம் ஆண்டு. அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டு, நான் தலைமறைவாக இருந்த சமயம். துக்ளக், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மட்டுமே சர்வாதிகாரத்துக்குத் தலைவணங்காமல் போராடி வந்த நேரம். அப்போது என்னுடைய புனைப்பெயர் ‘நசிகேதஸ்’. அதுவும் சோ வைத்த பெயர் தான். அன்றிலிருந்து துவங்கிய அந்த உறவு,உணர்வு பூர்வமாக ஒருவரை ஒருவர் நேசித்தும், மதித்தும் மேலும் மேலும் வளர்ந்து, 1980 - களில் நாங்கள் இருவரும் பல விஷயங்களில் இரட்டையர்கள் போல் ஆனோம் என்றால் அது மிகையாகாது.

1980-களிலிருந்து துவங்கி,நானோ அவரோ, எந்த முக்கியமான விஷயமாக இருந்தாலும் ஒருவரையொருவர் கலந்தாலோசிக் காமல் செய்ததே கிடையாது. 1985-ல் துவங்கி ரிலையன்ஸ் கம்பெனியின் அடாவடி வியாபாரத்தையும், லஞ்ச- லாவண்யங்களையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை வெளிக் கொண்டு வரத்திட்டமிட்டது. அப்போது, அது வரை அதன் அதிபர் ராம்நாத் கோயங்காவுக்குப் பல விஷயங்களிலும் ஆலோசகனாக இருந்த நான், பத்திரிகையாளனாகவும் மாற வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.

காரணம் - சட்டம், கணக்கு, நிதி, மற்றும் பொருளாதாரம் எல்லாவற்றையும் இணைத்து எழுதுவதற்கு, குறிப்பாக அவையெல்லாம் சுவாரஸ்யம் இல்லாத விஷயம் என்பதாலும், எந்த பத்திரிகையாளரும் வெளியிடத் தயார் இல்லாத நிலை என்பதாலும், கோயங்கா அவர்கள் ‘நீதான் எழுத வேண்டும்’ என்று கட்டளையிட்டார். நான் சோவிடம் நிலைமையை விளக்கி என்ன செய்வது என்று கேட்டேன். அப்போது, அவர், ‘குடத்தில் குத்து விளக்கான நீங்கள் பல வகையிலும் பிரபலமாவதற்கு கடவுள் ஒரு வாய்ப்பை உருவாக்கியுள்ளார். தயங்காதீர்கள்’ என்று கூறினார். எவ்வளவு தீர்க்க தரிசனமான வார்த்தைகள்? அப்படியே நடந்தது. அது பற்றி பின்பு நான் அவரிடம் கேட்டேன்.

சோ, என் நிதி நிலவரம் உங்களுக்குத் தெரியும். நான் வருமானம் ஈட்டியாக வேண்டும். எங்கள் குடும்பம் பெரியது. எவ்வளவு நெருக்கமாக நாங்கள் இருந்தாலும், நிதி விவகாரத்தில் கோயங்கா அவர்களைச் சார்ந்து நான் இருக்க விரும்பவில்லை. நான் எழுத ஆரம்பித்தால் என் வருமானம் மிகவும் குறையும். குடும்பத்தில் மற்றவர்கள் மேல்பாரம் அதிகமாகும். என்ன செய்வது?" என்று கேட்டேன். அவர், உங்களுடைய வாழ்க்கை எளிமையானது. வருமானம் குறைந்தால் கூட உங்களால் சமாளிக்க முடியும்" என்றார். அவர் அப்படிஊக்குவிக்கவில்லையென்றால், நான் பத்திரிகையாளனாகி பிரபலமாகியிருப்பேனாஎன்பது சந்தேகமே. அப்படி நான் ஆகவில்லையென்றால், என் வாழ்க்கையில் பொதுநலனுக்கு ஒன்றுமே செய்திருக்க முடியாது.

பத்திரிகையாளனாகி லஞ்ச ஊழலை வெளிப்படுத்திய தனால் எனக்கு கைமேல் பலன் கிடைத்தது. 1987 மார்ச் 13-ஆம் தேதி நள்ளிரவில் நான் கைது செய்யப்பட்டேன். சாட்டப்பட்ட குற்றம்? தேசத் துரோகம்! ஜனவரி 1987-லேயே காஞ்சி மஹா ஸ்வாமி அவர்கள், என்னிடம், ‘நான் உன் மேல் தேசத் துரோகக் குற்றம் சாட்டினால் என்ன செய்வாய்?’ என்று கேட்டு என்னை தயார் செய்திருந்தார். இது பற்றி துக்ளக் பத்திரிகையில் நான் விவரமாக ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம்’ தொடரில் முதல் கட்டுரையில் எழுதியிருக்கின்றேன். அந்தத் தொடருக்கு அப்படி பெயர் சூட்டி என்னை எழுத வைத்தது சோ தானே!

நான் கைது செய்யப்பட்ட பிறகு மாலை செய்தி பத்திரிகைகளில், ‘சி.ஐ.ஏ. உளவாளி’ கைது என்று அரசு தரப்பில் கூறப்பட்ட செய்தி வெளிவந்தது. இப்படி குடும்பத்துக்கு அவமானம் வந்து விட்டதே என்று துடிதுடித்தது கூட்டுக் குடும்பமான என் குடும்பம். என் அம்மா சாப்பிடுவதை நிறுத்திவிட்டார். உற்றார் உறவினர்கள், நண்பர்கள் யாரும் அருகே வரவில்லை. ஊரே ஒதுக்கியது. சோ அவர்களும், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், என்னுடைய நண்பருமான ஐராவதம் மகாதேவன் இருவர் மட்டுமே வந்து, 20 பேர் நிறைந்த எங்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். 10 நாட்களில் அரசாங்கத்தின் சாட்சியம் பொய் என்கிற குட்டு வெளிப்பட்டு என்னை நீதிமன்றம் விடுதலை செய்த போது, முதலில் வந்து என்னை பாராட்டியது சோ அவர்கள்தான்.

நான் தினசரி கூட சோவை சந்திப்பேன். நானும் ராம்நாத் கோயங்காவும் மாதம் இரண்டு முறையாவது சோவைச் சந்திப்போம். கோயங்காவுக்கு சோவை மிகவும் பிடித்து விட்டது. அவரை செல்லமாக ’'Intellectual Goonda' (அறிவுஜீவி கூண்டா) என்று அழைப்பார் கோயங்கா.

1989 முடிவில் அதுவரை ஆனந்த விகடன் சம்பந்தப்பட்டவர்கள் நடத்தி வந்த துக்ளக் பத்திரிகையை, சோ அவர்களே ஏற்று நடத்தும்படி செய்த கோயங்கா,என்னையும் துக்ளக் பத்திரிகையில் பங்குதாரராக ஆக் கினார். கோயங்கா மறைந்த பிறகு சோவிடம் நான், துக்ளக்கின் வருமானத்தில் பங்கு பெறுவது சரியல்ல என்று அடித்துக் கூறி, பங்கிலிருந்து விலகினேன். காரணம், நான் துக்ளக்கிற்கு எதுவுமே செய்ய வில்லையே - எழுதுவது கூட இல்லையே!

பின்புதான் சோ, ‘ஆங்கிலத்தில் எழுதும் நீங்கள், ஏன் தமிழில்எழுதக் கூடாது?’ என்று கேட்டு, திரும்பத் திரும்ப என்னை ஊக்குவித்து, ‘நமது பொருளாதாரம்’ என்கிற தலைப்பில் பல கட்டுரைகளை எழுதினேன். அப்படித்தான் என்னை துக்ளக் வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தினார் ‘சோ’. ஆனால், பல வேலைகளின் காரணமாக என்னால் துக்ளக்கில் தொடர்ந்து எழுத முடியவில்லை. ஆனாலும், சோ என்னை விடவில்லை. பொருளாதாரம், அரசியல், கலாசாரம், சமயம் - எல்லாவற்றைப் பற்றியும் நீங்கள் எழுத வேண்டும் என்று ஊக்குவித்து, தொடர்ந்து பல ஆண்டுகள் என்னை துக்ளக் பத்திரிகையில் எழுத வைத்தார். அதனால் துக்ளக் வாசகர்கள் பலர் மனதில் எனக்கு இடம் கிடைத்தது.

அது மட்டுமல்லாமல், தமிழ் பத்திரிகை உலகுக்கும் என்னை அறிமுகப்படுத்தினவர் சோ. அவர் என்னிடம் கட்டுரையை எழுதிப் பெற, வாரா வாரம் ஃபோன் செய்வார். கடைசி நேரத்தில் தான் நான் கொடுப்பேன். அது பெரியதாக வேறு இருக்கும். அதைப் பிரசுரிப் பதும் கடினம். இருந்தும் எல்லா சிரமங்களையும் ஒதுக்கிவிட்டு, விடா முயற்சி செய்து என்னை தமிழில் எழுத வைத்தவர் சோ.

பின்பு மறுபடியும் சோ, ‘நீங்கள் துக்ளக்கில் பங்குதாரராக ஆக வேண்டும். காரணம் எனக்குப் பிறகு துக்ளக் நடக்க வேண்டும் என்றால், இது அவசியம்’ என்று கூறினார். நான், ‘சோ உங்களுக்குப் பிறகு துக்ளக் பத்திரிகையை யார் நடத்த முடியும்?’ என்று கேட்டேன். ‘அதற்கான டீம் இருக்கிறது. தலைமைதான் தேவை. நீங்கள் அதற்குத் தயாராக வேண்டும்’ என்று கூறினார். நானும் நீங்களும் பாதி பாதி என்று கட்டாயப்படுத்தி மீண்டும் துக்ளக்கை நடத்தும் கம்பெனியில் 50 சதவிகிதம் பங்குதாரராகவும், டைரக்டராகவும் சேர்த்தார். அப்படித்தான் எனக்கும் அவருக்கும் இருந்த ஆத்மார்த்தமான அந்த உறவை துக்ளக்கிற்கும் எனக்கும் பந்தமாக மாற்றினார். ஆனாலும் என்னால் துக்ளக்கிற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறும் போதெல்லாம், ‘உங்களுடைய பயணங்களைக் குறைத்துக் கொண்டால் துக்ளக்கிற்கு நேரம் ஒதுக்க முடியும்’ என்று கூறுவார்.

அவர் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் அவரைச் சந்தித்த போதெல்லாம், துக்ளக் எப்படி நடக்கும் என்கிற விஷயத்தை தவிர்த்து தான் நான் பேசுவேன். கடந்த இரண்டரை ஆண்டுகளில் பலமுறை எமனை வென்ற சோ,கடைசியில் நம்மை விட்டுச்சென்று விட்டார்.காஞ்சி மஹா ஸ்வாமி மறைந்த போதும் என் தாயார் காலமான போதும் எப்படி எனக்கு ஒரு பெரிய இடைவெளி ஏற்பட்டதோ, அதே இடைவெளியை சோ மறைந்த பிறகு நான் அனுபவப்படுகிறேன்.அது மறையக்கூடிய இடைவெளி அல்ல.

சோ அவர்களைப் பற்றிய நினைவுகள், நீங்கா நினைவுகள். அந்த நினைவுகளை அகலாமல் பார்த்துக் கொள்வது நம்மை சரியான வழியில் கொண்டு செல்லும். சோவின் நினைவுகளும்,சிந்தனைகளும்,அவருடன் நெருங்கிப் பழகிய போது ஏற்பட்ட அனுபவமும் எனக்கு இந்த புதிய சவாலான துக்ளக் ஆசிரியர் என்கிற பொறுப்பை நிர்வகிக்க பெரும் துணையாக இருக்கும் என்று நம்புகிறேன்.

(தொடரும்)
S. குருமூர்த்தி

Thursday, December 15, 2016

"நண்பனுக்கும் மேலானவராக..." - ரஜினிகாந்த்

"நண்பனுக்கும் மேலானவராக..." - ரஜினிகாந்த்
சோ அவர்களை நான் முதன் முதலில் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ ஷூட்டிங்கில் தான் சந்தித்தேன். அதுவரை அவரைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்தது, அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடைய படங்களில், அவர்களோடு இணைந்து நடித்தவர் என்பது தான். ஆனால் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள், சோ ஸாரைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னார். அவற்றுள் ஒன்று என்னை பிரமிக்க வைத்தது.
‘சோ பேசுகிறார்’ என்று மட்டும் ஒரே வரியில் போஸ்டரில் விளம்பரம் செய்யப்பட்டு, மெரீனாவில் அவர் பேசிய பொதுக்கூட்டத்திற்கு, ஒரு லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள் - என்பது தான் அந்த தகவல். எந்தக் கட்சியின் பின்புலமும் இல்லாத அவருடைய பேச்சைக் கேட்க இத்தனை பேர் திரண்டார்கள் என்ற அந்த விஷயம், அவர் பால் எனக்கு மதிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
பிறகு வெவ்வேறு படங்களில் சேர்ந்து நடிக்கும் போது நெருங்கிப் பழகி, நிறைய பேசும் வாய்ப்பு வந்தது. அவரது அணுகுமுறை எளிமையானது. அவர் ‘செட்’டில் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ஸீனியர் - ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல், கலாட்டா செய்து கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.
‘குரு-சிஷ்யன்’ படத்தின் போது, மைசூரில் 20-25 நாட்கள் பல காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நானும், அவரும் சேர்ந்து பங்குபெற வேண்டிய காட்சிகளும் அதில் அடக்கம். அப்போது தான், ‘அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு எல்லாம் அவர் வருவது கஷ்டம்; ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று கேள்விப்பட்டேன். எஸ்.பி.எம். அவர்களும், பஞ்சு அருணாசலம் ஸாரும் என்னிடம், ‘சோ ஸார் 10 நாட்களாவது வந்தால் தான் சரியாக இருக்கும். நாங்கள் அவரிடம் கேட்கிறோம். நீங்களும் அவரிடம் ஒரு வார்த்தை பேசினால் பரவாயில்லை’ என்று சொன்னார்கள். நானும் சோ ஸாரைத் தொடர்பு கொண்டு, ‘ஸார் இந்த மாதிரி நிலைமை இருக்கிறது. நீங்கள் வர வேண்டும்’ என்றதும், அவர், துக்ளக் பணிகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் சிரமம் பற்றியும் என்னிடம் விளக்கினார். ஆனாலும் 15 நாட்கள் அங்கு வந்து இருந்தார்.
மைசூரில் ‘குரு - சிஷ்யன்’ படப்பிடிப்பு சமயத்தில், அந்த 15 நாட்களும் தினமும் அவரோடு ஒன்றாகப் பயணிப்பது, ஒன்றாகச் சாப்பிடுவது, நிறையப் பேசுவது என்று நேரம் வாய்த்தது. அந்த 15 நாட்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ‘பகவத் கீதை’ உட்பட ஆன்மீகம் தொடர்பான பல விஷயங்களை அச்சமயத்தில் அவரோடு விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஸம்ஸ்க்ருதத்தில் பகவத்கீதை ஸ்லோகமும், அதற்கு தமிழில் சோ அவர்கள் கூறிய விளக்கமும் ஆடியோ கேஸட்டாக வெளிவந்திருக்கிறது என்று அவர் சொன்னார். எனக்கு அந்த கேஸட் வேண்டும் என்றதும், உடனே வரவழைத்து அளித்தார். அதை திரும்பத் திரும்ப பலமுறை கேட்கிறேன். அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய பிறகு, அவ்வப்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஃபோனிலும், நேரிலும் பேசுவோம். என் வீட்டு நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வந்திருக்கிறார்.
1995-ல் ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி நான் பேசி, அது பெரிய சர்ச்சையாகி விட்டது. அரசியலுக்கு நான் வருவேனா, இல்லையா, என்ன செய்யப் போகிறேன் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்துவிட்டன. அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் அவர்கள், ‘அரசியலுக்கு நான் வர வேண்டும்’ என்று கூறினார்.
அந்த காலகட்டத்தில், ‘முத்து’ பட வேலைகளில் நான் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று ஒரு நாள் காலை சோ ஸார், அவரே காரை ஓட்டிக் கொண்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். ‘என்ன ஸார், என்னென்னமோ பேச்சு கிளம்புகிறது. அதுபற்றி உங்களோடு பேச வேண்டும். அதான் வந்துவிட்டேன்’ என்றார். நான் ‘முத்து’ ஷூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்ததும், ஷூட்டிங் நடக்கும் அடையாறு வரை அவரே காரை ஓட்டி வந்து, என்னை அங்கே விட்டுவிட்டு, ‘எத்தனை நேரமானாலும் ஷூட்டிங் முடிந்ததும் வாருங்கள். பேச வேண்டும்’ என்றார். அன்று இரவு அவரைச் சந்தித்த போது, நீண்ட நேரம் பேசினோம்.
‘மக்களிடம் உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதே சமயம் அரசியல் கட்சி நடத்துவது சுலபமான விஷயம் அல்ல. நல்லவர்களும் வருவார்கள்; தப்பானவர்களும் வருவார்கள். அது ஒரு பெரிய சுமையாகவும் இருக்கும். யோசித்து ஜாக்கிரதையாக அணுக வேண்டும்’ - என்றெல்லாம் சாதக, பாதகங்கள் பற்றி நிறைய சொன்னார். அன்றும், அதைத் தொடர்ந்தும் அவர் பேசியதை, அப்படியே என் கையைப் பற்றி என்னை அழைத்துச் செல்வதைப் போல, அர்ஜுனனை கிருஷ்ணர் வழி நடத்தியது போல உணர்ந்தேன். எது நல்லது, எது கெட்டது, ஒரு விஷயம் எப்படிப்பட்டது, அதை எப்படி அணுகுவது - இவற்றில் எல்லாம் ஒரு தெளிவை காட்டுவது போல அவர் பேசியது அமைந்திருந்தது. அவர் அந்த சமயத்தில் அப்படி எல்லாம் கூறியிருக்காவிட்டால், நான் என்ன முடிவு எடுத்திருப்பேன், என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது. ஒரு வாரம் தொடர்ந்து பேசாவிட்டால், பட வேலைகளில் மூழ்கி இருந்தால், அவரிடம் இருந்து ஃபோன் வந்துவிடும். ‘என்ன ஸார் மறந்து விட்டீர்களா?’ என்று கலாட்டா செய்வார். எனக்கும் அவரைச் சந்திப்பதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விட்டால் ஏதோ குறை தெரியும்.
ஒருமுறை அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பல ஜாம்பவான்களுடன் பழகி இருக்கிறீர்கள். என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?’ என்று கேட்டேன். அவர் உடனே, ‘ஆன்மீகம் தான்’ என்றார். ‘உங்களுடைய ஆன்மீகத் தேடல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உங்களுடைய செயல்பாடுகளுக்கும், இந்த சப்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று சொன்னார். எனது இமயமலைப் பயணங்களைப் பற்றி நிறைய கேட்பார். ‘உங்களோடு ஒரு முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று 2, 3 முறை சொல்லி இருக்கிறார். ஆனால், வராமலே போய் விட்டார்.
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சமீப காலமாகத் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். துக்ளக் வாசகர்களுக்கும், அவருக்கும் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை, வாசகர்கள் கருத்துக்கு அவர் அளிக்கும் மதிப்பு, ஆண்டுவிழா கூட்டங்களில் பல பிரச்னைகள் பற்றிய அவரது தெளிவான கண்ணோட்டம் - இவை எல்லாம் என்னை வியக்க வைத்திருக்கிறது.
என் மனைவியிடமும், குழந்தைகளிடமும் பேசாத விஷயங்களைக் கூட, அவரோடு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் ஒரு நண்பருக்கும் மேலாக அவர் இருந்திருக்கிறார். என் குடும்ப விவகாரம், என் நிதி நிலை உட்பட பல விஷயங்கள். என் மனதில் இருக்கும் ஆதங்கங்களை அவரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். அந்த மாதிரி இன்னொருவரிடம் இனி பேசும் வாய்ப்பை நான் இப்போது இழந்திருக்கிறேன்.
சமீப காலமாக அவர் நோய்வாய்ப்பட்டது முதல் அவ்வப்போது போய் உடல்நிலை விசாரிப்பேன். உடம்பு முடியாத அந்தச் சூழ்நிலையிலும் அவர் படுகிற அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து தான் பேசுவார். சிங்கம் மாதிரி இருந்தவர், இப்படி உருக்குலைந்து விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டேன். அவர் அன்பு வைத்திருந்த முதலமைச்சர் மரணித்ததும், அடுத்த நாள் இவரது மறைவும் நிகழ்ந்து விட்டது. அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருந்ததால், அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆனால், பெரும் இழப்பை உணரச் செய்திருக்கிறது. என் வாழ்க்கையில் அவருக்கு இருந்த இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியும் என்று நான் கருதவில்லை. அவர் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. நிறைய பேருக்கு உதவி தான் செய்திருக்கிறார். நேர்மையாக வாழ்ந்திருக்கிறார். அதனால், அவர் ஆத்மா சாந்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் இருக்கும் போது ‘துக்ளக்’ எப்படி இருந்ததோ, அதே போல தொடர்ந்து ‘துக்ளக்’ நீண்ட காலம் வெளிவர அவரது ஆத்மா நிச்சயம் வழிகாட்டும். அவரது குடும்பத்தாருக்கும்,‘துக்ளக்’ ஊழியர்களுக்கும், ‘துக்ளக்’ வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, December 14, 2016

WE WILL MISS YOU CHO...

யாமறிந்த மனிதர்களுள்...!
46ஆண்டுகளாக சோ அவர்களால் நடத்தப்பட்டு வந்த துக்ளக், அவர் இல்லாத நிலையில் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், அப்படி ஒரு நிலையைச் சந்திக்க வேண்டியவர்களாகி விட்டோம்.
சோ அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர் ஒரு பல்கலைக் கழகம் போன்றவர். அவரது எழுத்துத் திறனும், பேச்சுத் திறனும் நாடறிந்தது. அவரது நகைச்சுவை உணர்வு கடல் போன்றது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்டிருந்த போதும், இயல்பாக ஜோக் அடித்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். மறைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு - அச்சுக்குப் போகும் துக்ளக் பக்கங்களைக் கொண்டு போய்க் காட்டிய போது கூட, அவருக்கே உரிய கூர்ந்த பார்வையில் திருத்தங்களைச் சொன்னார்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆற்றல் அளவில்லாதது. ஒரு அரசியல் பிரமுகர் வந்து பேசி விட்டுச் சென்றபின், அவர் பேசியதில் எது உண்மை, எது தவறு என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, ‘இவர் இப்படிச் சொல்கிறார். ஆனால், இப்படித்தான் செய்யப் போகிறார்’ என்று தீர்க்கதரிசன உணர்வோடு கணிப்பார். அதன்படியே நடக்கும். இந்தத் திறன் அவரிடம் இயல்பிலேயே இருந்தது.
1970-ல் சோ அவர்கள் துக்ளக்கை ஆரம்பித்த போது, அன்றைய ஆளும் கட்சியையோ, முதல்வரையோ விமர்சிப்பதற்கு அதீதமான தைரியம் தேவைப்பட்ட காலம். அந்த நேரத்தில், தி.மு.க.வின் கொள்கைகளிலும், செயல்களிலும் இருந்த நாடகத்தனத்தை துணிச்சலாகவும், நகைச்சுவையோடும் விமர்சித்தார். இப்படிக் கூட விமர்சிக்க முடியுமா என்று வியப்படைந்த அன்றைய வாசகர்கள், அதை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன் காரணமாகவே எந்தக் கட்சி, ஸ்தாபனப் பின்புலமும் இல்லாத ஒரு தனி நபராக மேடையேறி, லட்சக் கணக்கான வாசகர்களை ஈர்க்க அவரால் முடிந்தது. இது இன்று வரை, அரசியல் தலைவர்கள் உட்பட எந்த தனி நபராலும் செய்யப்படாத சாதனை.
அச்சம் அறியாது, நேர்மைக் குறைவின்றி, நகைச்சுவையைச் சேர்த்து வெளிவந்த ஒவ்வொரு துக்ளக் இதழும், பத்திரிகை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. வாசகர்கள் அறிய வேண்டிய விஷயம் என்று ஒன்றை உணர்ந்தால், வாசகர்களின் விருப்பத்தைப் பற்றியோ, விற்பனையைப் பற்றியோ கவலைப் படாமல், அதை துக்ளக்கில் இடம் பெறச் செய்துவிடுவார். எவ்வளவு தான் வற்புறுத்தினாலும், தனக்குப் பிடிக்காதவற்றைப் பிரசுரிக்கச் சம்மதிக்கவே மாட்டார். எவ்வளவு தான் பிடித்த நபராக இருந்தாலும், தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்ததில்லை. என்ன தான் விமர்சனத்துக்கு உரியவரானாலும், கடுகளவும் தரம் இறங்கித் தாக்கியதில்லை. அலங்கார வார்த்தைகளை விட உண்மையான வார்த்தைகளையே அவர் விரும்பினார். பரபரப்பை விரும்பாமல், நேர்மைக்கே முக்கியத்துவம் தந்தார். இப்படித்தான் துக்ளக்கை வளர்த்தார்.
அரசியலில் உள்ள அவலங்களை அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதோடு, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும், ஹிந்து மஹா சமுத்திரம் தொடரையும் அற்புதமான நடையில் எழுதி, மக்களிடையே பக்தி உணர்வையும் வளர்த்தார் சோ.
எந்தத் தலைவரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவர்கள் ஆசிரியரிடம் கொண்டிருந்த நட்பு மாறாமல் இருந்தது ஒரு அதிசயமே. சோவின் எழுத்தில் இருந்த கண்ணியமும், உண்மையுமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். நட்புக்காக விமர்சனத்தைக் குறைத்துக் கொள்ளவும் மாட்டார். எதை இழந்தாலும், துக்ளக் வாசகர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.
தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் நேரடியாக இறங்கியிருந்தால் உயர்ந்த பதவிகளை அவரால் எளிதில் பெற்றிருக்க முடியும். பதவிகளுக்காக தனது விமர்சன சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் அவர் விரும்பியதில்லை. (முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வற்புறுத்தலுக்காக அவர் ஜனதாவில் சேர்ந்தார் என்றாலும், அது தனக்கு ஒத்து வராத தளம் என்று வெகு விரைவிலேயே அதற்கு முழுக்குப் போட்டார்.)
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞரும், ஜெயலலிதாவும் முதல்வராவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தும், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடனேயே, அவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டவர் சோ. அவரை அறியாத இந்தியத் தலைவர் இல்லை. அப்படியும் யாரிடமும் எந்தச் சிறு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. அது தான் எங்கள் எடிட்டர்.
தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர். தனது வெற்றிகளுக்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று அவர் கூறினாலும், அவரது அசாதாரணமான திறமைகள் வியப்புக்குரியவையே!
எந்தக் கேள்விக்கும் உடனே பதிலளிக்கும் அவரது, Presence of Mind வியப்புக்குரியது. துக்ளக் ஆண்டு விழாக் கூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்த முறை, யாராலும் கடைபிடிக்கப் படாதது. தமிழானாலும் ஆங்கிலமானாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் அவ்வளவு நேரமும் கைதட்டலைப் பெறும் பேச்சாற்றல் கொண்டவர். அவரது வாதத்திறன் ஒப்பில்லாதது. துக்ளக் இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்கள் அவரது ஆழ்ந்த அறிவையும், தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
எமர்ஜென்ஸி காலத்தில், விளம்பரத்திலும், சினிமா விமர்சனத்திலும் கூட நுணுக்கமாக அரசியலை நுழைத்து, தணிக்கை அதிகாரிகளையே திணற அடித்த எழுத்து அவருடையது.
எந்த அரங்கிலும், தலைவர்களையும் கலைஞர்களையும் மிஞ்சும் வகையில், ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷனா’கத் திகழும் ஈர்ப்பு அவரிடம் இருந்தது.
எத்தனை உயர்ந்த நிலைக்கு வந்தும், தனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையே பெரிதும் விரும்பியவர் சோ.
கடுகளவும் போலித்தனம் அற்ற மாமனிதரை ஆசிரியராகப் பெறும் பேறு துக்ளக்கிற்குக் கிடைத் தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடமிருந்து துக்ளக் ஆசிரியர் குழுவினரான நாங்கள் எவ்வளவோ நல்ல பண்புகளைக் கற்றோம். எங்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டிய எடிட்டரை மறக்க முடியாமல் தவிக்கிறோம்.
எத்தனையோ ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகி விட்டதால், அவர் இப்போது இல்லை என்பது மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது. ‘அடுத்த இஷ்யூக்கு என்ன ஸார் பண்ணலாம்?’ என்றஅவரது கம்பீரமான அந்த உற்சாகக் குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘யாமறிந்த மனிதர்களுள் சோவைப் போல்
இனிதானவர் எங்கும் காணோம்’.
- துக்ளக்

Friday, April 1, 2016

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...
வாசகர்களை கூட்டி ஆண்டுக்கொருமுறை விழா நடத்தி அவர்களுடைய விமர்சனங்களுக்கு வழி செய்து அவற்றுக்கு பதில் அளித்து ஓரு கருத்து பரிமாற்றத்துடன் துக்ளக் நடத்தி வருவது பலருக்கு வியப்பாக இருக்கிறது.
நல்ல ஜடியாக்கள் யோசனையின் மூலம் என்க்கு வருவதில்லை அகஸ்மாத்தாக வந்து விடுகின்றன.இந்த ஆண்டு விழா ஏற்ப்பாடும் அப்படித்தான்.
பத்திரிக்கை தொடங்கிய முதல் வருடமான 1970 ல் ஏப்ரல் மாத்த்தில் வாசகர்களோடு ஏதாவது ஏப்ரல் ஃபூல் விளையாட்டு விளையாடலாம் என நினைத்தேன்.துக்ளக்கை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என என முடிவு அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.இது பற்றி வாசகர்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.ஏப்ரல் 1 மாலை 6.30 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் ஒட்டலில் கூட்டம் நடக்கும் வாசகர்கள் வந்திருந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் என துக்ளக்கில் அறிவித்து விட்டேன்.
என் நினைப்பு இது தான்.ஏப் 1 கூட்டம் என்ற உடனே இது விளையாட்டு என புரிந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள்,அல்லது 10 அல்லது 15 பேர் இந்த விளையாட்டுக்கு பலியாவர்கள் அவர்களை சமாளித்து விடலாம் என நினைத்தேன்..
அதே போல அன்று மாலை ஒட்டல் வாசலில் துக்ளக்கில் வந்த அறிவிப்பு ஏப்ரல் ஃபூல் தமாஷ் ஏமாந்தவர்கள அஅனைவரும் வீட்டிற்க்கு போய் சேருங்கள் என்ற பலகை தொங்க விடபட்டது.
மாலை 6 மணிக்கு என்க்கு போன் வந்தது.நீ எழுதி வைத்த போர்டை காட்டினால் இங்கு இருக்கும் கூட்டம் எங்களை உதைக்காமல் விடமாட்டாங்க.அதானால் போர்டை எடுத்து உள்ளே வைத்து விட்டோம்.கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை மரியாதையாக வந்து சேர் என அழைப்பு வந்தது..
சரியான வம்பில் மாட்டிக் கொண்டோம் என புரிந்தது.துக்ளக் பிரசுரகர்த்தர் வெங்கட்ராமனையும், ஆசிரியர் குழுவில் சிலரையும் அழைத்து கொண்டு கிளம்பினேன்.நல்லது நடக்க மோகிறது என்றால் தனியாக போகலாம்.தர்ம சங்கடத்தை தனியாக அனுபவிப்பானேன்? என கூடவே இவர்களையும் அழைத்து சென்றேன்.
ஒட்டல் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வரவேற்ப்பு அளிக்க அந்த மிதப்பில் மேடைக்கு போய் சேர்ந்த நான் கூட்டத்தை சமாளிக்க துக்ளக்கில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என ஆசிரியர் குழுவில் இருந்த சுந்தரம் ஆரம்பித்து வைக்க,ஒவ்வோரு வாசகராக வந்து தங்கள் அபிப்ராயம் மற்றும் துக்ளக் மீதான விமர்சனத்தையும் நாட்டு அரசியல் பற்றிய தங்கள் கருத்தையும் முன் வைத்தார்கள் ..ஒவ்வோருவரும் பேசி முடித்தவுடன் அவரவரவர்க்கு பதில் சொன்னேன்.அந்த கூட்டம் ஒரு விவாத மேடையாக உருமாறியது.
அரசியல் விமர்சனத்தை தொடரவேண்டும் என அனேக வாசகர்களும், துக்ளக்கின் துணிவை அனைவரும் பாராட்ட துக்ளக்கோடு தங்களுக்கும் இருந்த் கருத்து வேறுபாட்டை அவரவர் விவரிக்க அதற்க்கு நான் பதில் கூற கூட்டம் சுமூகமான முடிவை நெருங்கியது.
ஏப்ரல் ஃபூல் செய்யலாம் என்று நினைத்து தான் இந்த் கூட்டத்தை கூட்டினோம்.இத்தனை பேர் கூடியதும் கூடியதும் வேறு வழியில்லாமல் கருத்தரங்கமாகவே மாற்றிவிட்டேன்.விளையாட்டாக ஆரம்பித்தாலும் மிகவும் ஆழமான விமர்சனங்களோடு இது முடிந்திருக்கிறது என று நன்றி கூறி முடித்தேன்.
இந்த கூட்டத்தினால் ஏற்பட்ட அனுபவத்தின காரணமே ஆண்டு தோறும் நடக்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி...
சோ அவர்களின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் ...

Tuesday, January 12, 2016

காஷ்மீரும் நேருவும் — ஆர். நடராஜன்

காஷ்மீரும் நேருவும் — ஆர். நடராஜன்
பொய்களுக்குப் பூசப்படும் முலாம் வெகுகாலம் தாக்குப் பிடிப்பதில்லை. காஷ்மீர் பிரச்னையில் இந்தியாவின் முதல் பிரதமரான நேரு தவறு செய்தார் என்ற உண்மையை, காங்கிரஸ்காரர்கள் பாடுபட்டு இத்தனை வருடங்கள் மூடி மறைத் திருந்தாலும், மும்பையிலிருந்து வெளிவரும் அவர்களது ‘காங்கிரஸ் தர்ஷன்’ என்ற கட்சிப் பத்திரிகையே இப்போது உண்மையை உடைத்து விட்டது. இதற்காக அந்தப் பத் திரிகையின் ஆசிரியர் நீக்கப்பட்டார்.
இந்திரா காந்தியின் மருமகள் என்று சோனியா சொல்லிக் கொள்வது சரி தான். இவரது மாமியார் இப்படித்தான் நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த சலபதி ராவ் என்ற அறிஞரை, ஒரு விழாவின் போது நீக்கினார். பரம்பரையாகக் கட்சித் தலைமை, பரம்பரையாக கட்சிப் பத்திரிகையில் தலையீடு, பரம்பரையாக ஊழியர்களைக் கழற்றி விடுதல் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் மாண்புகளில் சில.
காங்கிரஸ் பத்திரிகை நேருவைப் பற்றித் தவறான தகவலைக் கொடுத்து விட்டது என்பவர்களுக்கு, வரலாறு தெரியாது. காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் இந்தியாவுடன் இணையத் தயங்கிய போது, உள்துறை மந்திரியாக இருந்த வல்லபாய் படேல், குருஜி கோல்வால்கரைத் தூதுவராக அனுப்பி மகாராஜாவின் சம்மதத்தைப் பெற்றார். மற்ற மாநிலங்களை இந்திய யூனியனுடன் இணைக்க படேல் பாடுபட்டார். காஷ்மீர் பொறுப்பை நேரு ஏற்றுக் கொண்டார். அதில் படேலையும், அம்பேத்கரையும் ஒதுக்கி விட்ட நேருவுக்கு ஏதோ உள்நோக்கம் இருந்திருக்கிறது. அரசியல் சாஸனம் உறுதி செய்யப்படும் முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளாமல், அவர் வெளிநாட்டுக்குச் சென்றார்.
தான் பிரதமராவதற்காகப்பாகிஸ்தான் உருவாகப் போராடிய ஜின்னாவைப் போலவே, ஷேக் அப்துல்லாவும் தான் காஷ்மீர் பிரதமராவதற்காக (அப்போதைய காஷ்மீர் முதல்வர் பதவியின் பெயர் பிரதமர்), காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து கேட்டார். சட்டத்துறை மந்திரியான அம்பேத்கர், அதற்கு உடன்படவில்லை. ஆனால், நேரு மறைமுகமாக ஆதரவு தந்தார். இதற்கு மவுண்ட்பேட்டன் பிரபுவும் உடந்தை என்பதை, வி.சங்கர் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி எழுதிய புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
தன்னைச் சந்திக்க வந்த ஷேக் அப்துல்லாவிடம், ‘இந்தியா, காஷ்மீரைப் பாதுகாக்க வேண்டும்; பிற மாநில மக்கள் பெறும் சலுகைகளும், உரிமைகளும் காஷ்மீருக்கு வேண்டும் என்று கேட்கும் நீங்கள், அங்கே பிற மாநிலத்தவருக்கு எந்த உரிமையும் இருக்கக் கூடாது என்கிறீர்கள். இதை நான் ஏற்க முடியாது’ என்று அம்பேத்கர் கறாராகச் சொன்னார்.
அம்பேத்கரின் இந்த நிலைப்பாட்டை ஒதுக்க நினைத்த நேரு, அரசியல் சாஸனத்தில் காஷ்மீரின் உரிமைகள், சலுகைகள் பற்றிய வாசகங்களைத் தன் நண்பரான கோபாலசாமி ஐயங்கார் எழுதட்டும் என்றுசொல்லி விட்டார். ஐயங்கார் காஷ் மீரின் முன்னாள் மந்திரி. அவர் தன் பூர்வாசிரம விசுவாசத்தைக் காட்டினார். ஒரு காலத்தில் ஷேக் அப்துல்லாவுக்கு வக்கீலாக இருந்தவர்நேரு. அவரும் தன் கட்சிக்காரருக்கு விசுவாசத்தைக் காட்டினார். இதனால் பாதுகாப்பு, அயலுறவு, நாணயப் புழக்கம், தகவல்தொடர்பு தவிர, காஷ்மீருக்கு மத்திய அரசுடன் வேறு நிர்வாக நிர்பந்தம் ஏதுமில்லை.
ஒரு தனி நாட்டின் அந்தஸ்த்தைப் பெற்றுள்ள காஷ்மீரில் பிற மாநிலத்தவர்கள் சொத்து வாங்க முடியாது.
நேருவைப் பற்றிக் காங்கிரஸ் விசுவாசிகள் மகிமைமிக்க புராணங்களை எழுதியிருந்தாலும், ஒரு உண்மையைப் பலர் கண்டு கொண்டதில்லை. தன் பதவிக் காலம் நெடுகத் தனக்குப் பிடித்தமானவர்களுக்குக் கொடுத்த மதிப்பை, தார்மீக நியதிகளுக்கும் அரசியல் நெறிமுறைகளுக்கும் நேரு கொடுக்கவில்லை.
நேரு செய்த அரசியல் குழப்பத்தின் விளைவுகாஷ்மீர், அவர் காலத்திய வெளியுறவு, பாதுகாப்புத் துறையின் மெத்தனம் ஆகியவை சீனாவுடனான போர் ஏற்படக் காரணமாக அமைந்தன. தீர்க்கதரிசனமில்லாத பொருளாதாரக் கொள்கையின் விளைவினால் தொழில்துறை மந்தமானது. தலைவர் செய்யும் தவறுகளுக்கு, தேசம் துன்பத்தை அனுபவிக்கும் என்பதற்குச் சரியான உதாரணம் நேரு.
— ஆர். நடராஜன் (Thuglak)