Showing posts with label நினைத்தேன் எழுதுகிறேன். Show all posts
Showing posts with label நினைத்தேன் எழுதுகிறேன். Show all posts

Wednesday, November 2, 2011

நினைத்தேன் எழுதுகிறேன்

விலக்கு, தேவையா? – சோ 
நினைத்தேன் எழுதுகிறேன்

‘லோக்பால் விசாரணை வரம்புக்குள் பிரதமரைக் கொண்டு வந்தால், அது பிரதமர் அலுவலகத்தின் செயல்பாட்டை சீர்குலைத்து விடும்’ என்று ராகுல்காந்தி முதற்கொண்டு பலர் பேசி வருகிறார்கள்.


ராகுல் காந்தி

இந்த வாதத்தை ஏற்க வேண்டும் என்றால் – லோக்பால் விசாரணை வரம்பிற்குள் எந்த மந்திரி வந்தாலும், அவருடைய அலுவலகத்தின் செயல்பாடுகள் முடங்கிவிடும் – என்று கூறி விடலாமே? அது மட்டும் பரவாயில்லையா? இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? ‘எந்த மந்திரி மீது லோக்பால் விசாரணை வருகிறதோ, அவருக்குப் பதிலாக வேறு ஒரு மந்திரியை நியமித்துக் கொள்வார்கள். அல்லது அவருடைய இலாகா வேறு ஒருவரிடம் போகும். ஆகையால், பாதிப்பு இருக்காது’ என்று சொல்லலாம். ஆனால், ஒரு மந்திரி சபையில் இந்த மாதிரி பல மந்திரிகள் மீது விசாரணை வந்தால், அப்போது ஒவ்வொரு இலாகாவாக, வேறு ஒரு மந்திரியிடம் போகும்போது, நிர்வாகம் ரொம்பச் சீராக இருக்குமா?

அல்லது பல தலைமை அதிகாரிகள், தலைமைச் செயலாளர்கள், துறைகளின் மூத்த செயலாளர்கள் போன்றவர்கள் மீது விசாரணை வந்தால், அப்போது அவரவர்கள் துறை பாதிக்கப்படாதா? மாநிலங்களின் முதலமைச்சர்கள் மீதோ, மற்ற அமைச்சர்கள் மீதோ விசாரணை வந்தால், அவர்களுடைய துறைகள் எல்லாம் சீர் குலைந்து போகாதா? இப்படிப் பார்த்தால், பதவியில் இருக்கிற யார் மீதும் எந்த விசாரணையும் வரக் கூடாது என்று சொல்வது போல் ஆகிவிடும்.

ஏற்கெனவே ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், பிரதமர் உட்பட யார் மீது வேண்டுமானாலும் வழக்கு வரலாம். அப்படி பிரதமர் மீது இதுவரை எத்தனை வழக்குகள் வந்து, அவருடைய இலாகா, அல்லது மந்திரிசபை, அல்லது அரசு சீர்குலைந்து போயிருக்கிறது? ஒருமுறை கூட அப்படி நடக்கவில்லையே? அப்படியிருக்க, லோக்பால் விசாரணையினால் மட்டும் இந்தக் கேடு வந்துவிடும் என்று எப்படிச் சொல்ல முடியும்?

இதில் வேறு ஒரு வாதமும் கூறப்படுகிறது. ‘அயல்நாடுகள், லோக்பாலைப் பயன்படுத்திக் கொண்டு, பிரதமர் மீது வேண்டுமென்றே விசாரணைகளைக் கிளப்பி விட்டு, நமது நிர்வாகத்தைச் சீர்குலைக்கும்’. அப்படி என்றால், இப்போதே அதைச் செய்ய முடியாதா? ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் பல வழக்குகளைக் கொண்டு வந்து இந்திய அரசையே முடக்கிவிட முடியாதா? ஏன் எந்த அயல்நாடும் இதைச் செய்யவில்லை? லோக்பாலின் கீழ் மட்டும்தான் அயல் நாடுகள் இப்படிச் செய்யுமா? ஏன்?


லோக்பாலைப் பொறுத்தவரை, எடுத்த எடுப்பிலேயே எதையும் செய்துவிடப் போவதில்லை. பிரதமர் மீது ஒரு புகார் வந்தால், உடனே விசாரணையை ஆரம்பித்து, வழக்கு நடத்தி முடித்து, பிரதமருக்குத் தண்டனை கொடுத்து விட வேண்டும் என்று யாரும் கோரவில்லை. ஒரு விஷயம், லோக்பாலின் பார்வைக்கு வந்தால், அதில் சாரம் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானித்துக் கொண்டுதான் லோக்பால், மேல் நடவடிக்கை எடுக்க முடியும். எந்தச் சட்டமும் எடுத்த எடுப்பிலேயே நடவடிக்கை என்று கூறிவிடாது. ஆகையால், அப்படி லோக்பால் முன்னிலையில் பிரதமர் மீது புகார் வந்தால் கூட, உடனே அவர் எந்தப் பாதிப்புக்கும் ஆளாகிவிட மாட்டார். 
இதில் பிரதம மந்திரிருக்கு விலக்கு அளிப்பதுதான் விபரீதமாகப் போகும். லஞ்சம் வாங்குகிற மந்திரிகள் எல்லாம் பிரதமரோடு சேர்ந்து, அதை வாங்கிவிட்டால் போதும். அதாவது பிரதமர் தலைமையில் ஊழலை நடத்தி விட்டால்போதும். அது லோக்பாலுக்கு அப்பாற்பட்டதாகி விடும். ஆக, ஒரு மந்திரி சபையில் எந்த மந்திரி மீதுமே விசாரணை வராமல் இருந்து விடும். நிம்மதி.