Showing posts with label CHO. Show all posts
Showing posts with label CHO. Show all posts

Tuesday, May 16, 2017

தர்மத்தின் சாரம்

பிராமணன் வேறு, தமிழன் வேறா?



Saturday, February 25, 2017

சோ - பெயர்க்காரணம்

எங்க அம்மா ராஜலட்சுமி. எல்லோரும் "ராஜம்மா' என்றுதான் கூப்பிடுவோம். அவரை மாதிரி ஒரு பொறுமைசாலியைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்குப் பொறுமை.
தாய்வழிப் பாட்டியும் ஆச்சாரமா அத்தனை வேலையையும் தானே இழுத்துப் போட்டுக்கொண்டு சர்வசாதாரணமாகச் செய்வார். அவர் அதிர்ந்து பேசி நான் பார்த்தது இல்லை. அந்தக் காலப் பெண்களில் பலர் அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே அவதாரம் எடுத்த மாதிரி இருந்தார்கள். அப்படித்தான் எங்க அம்மாவும் இருந்தார். எதையும் சட்டென்று கிரகித்து கொள்கிற கற்பூர புத்தி. சாமியார்களையோ, ஜோதிடர்களையோ நம்ப மாட்டார். சந்நியாசிகளில் அவர்கள் நம்பி மதித்தது மகா பெரியவாளை மட்டும்தான்.
நான் எப்பேர்ப்பட்ட தப்புப் பண்ணினாலும் "ஏன்டா... இப்படி முட்டாளா இருக்கே'' என்பதைத் தாண்டி எதையும் பேச மாட்டார். அதுதான் அவர்களுடைய அதிகபட்ச கண்டிப்பு.
அவர் எனக்கு வைத்த பெயர்தான் "சோ''. அதற்குப் பின்னாடி ஒரு காரணம் இருக்கிறது. ராஜராஜ சோழனுக்கு ஒருசமயம் பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அதிலிருந்து தப்பித்து கோயிலுக்கு அவர் ஓடினார். ஓடினபோது முன்னால் இருந்த விநாயகர் சோழனிடம், "நீ பின் வழியா உள்ளே ஓடிப்போயிடு. நான் பிரம்மஹத்தி வந்தா பிடிச்சு வச்சிக்கிறேன்'' என்று சொல்லி விட்டார். அது சோழனைப் பிடித்த பிரம்மஹத்தி.
அதை நினைவில் வைத்து எங்க அம்மா என்னை "சோழன் பிரம்மஹத்தி' என்று கூப்பிடுவார்கள். அப்படிக் கூப்பிடுற அளவுக்கு அப்போது சேட்டை, வம்பு, தொந்தரவு எல்லாம் பண்ணியிருக்கிறேன் போலிருக்கிறது...
"சோழன் பிரம்மஹத்தி' என்று முதலில் கூப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் அதைச் சுருக்கி "சோழன்' என்று கூப்பிட்டார்கள்.
பிறகு "சோழா.. சோழா..'' என்று கூப்பிட்டுப் பிறகு அது இன்னும் சுருங்கி "சோ'' என்றாகிவிட்டது!
அப்புறம் மற்றவர்களும் அப்படியே கூப்பிட ஆரம்பித்து விட்டார்கள். அப்படி எனக்கு வந்த பெயர் "சோ''. அப்ப, எங்க அம்மா வைத்த அந்தச் சுருக்கமான பெயர்தான் நான் பிரபலம் ஆவதற்கு மிகவும் உதவியது என்று சொல்ல வேண்டும்!
இப்படிப் பலருக்கு நான் "சோ' ஆகிவிட்டாலும் எங்க தாத்தா அருணாசல அய்யர் மட்டும் என்னை, "டேய்.. ராமஸ்வாமி'' என்றுதான் கூப்பிடுவார். என்னுடைய தம்பி அம்பியையும் "ராஜகோபால்' என்று முழுப்பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். அது அவருடைய வழக்கம்.
என்னுடைய தம்பிக்கு "அம்பி' என்று எங்க அப்பா பட்டப்பெயர் வைத்த மாதிரி என்னுடைய சகோதரி விஜயாவுக்கு "விக்டர்'' என்று பெயர் வைத்து விட்டார். "அட்வகேட்'', "பொயட்'', "கோர்ட் ஃபீஸ்'' - இப்படியெல்லாம் எங்க உறவுக்காரர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற மாதிரி அவர் பட்டப் பெயர்கள் வைத்திருந்தார்.
எனக்குச் "சோ' என்று பெயர் சூட்டிய எங்க அம்மா கடைசிவரை நான் சினிமாவில் நடிப்பதை ஏற்றுக்கொள்ளவே இல்லை. அதனால் நான் நடித்த சினிமாக்கள் எதையும் பார்க்க மாட்டார்.
நான் நாடகங்களில் நடிப்பதை முதலில் விரும்பாவிட்டாலும் பிறகு என்னுடைய நாடகங்களுக்கு வந்து பார்த்திருக்கிறார்.
எனக்கு முதல் சினிமா வாய்ப்பு வந்த சமயம். அப்போது மிகவும் பிரபலமாக இருந்த இயக்குநர் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கதாநாயகனாக நடித்த
"பார் மகளே பார்' படத்தில் நடிக்க என்னை அழைத்திருந்தார்கள்.
அப்பாவிடம் சொன்னேன். அவர் படு ஜோவியல். "நல்லா போய்ப் பண்றா... ஜமாய்டா'' என்று கை காட்டி விட்டார். மற்ற உறவினர்களும் வரவேற்றார்கள்.
ஆனால் அம்மா "நடிக்கக் கூடாது'' என்று மறுத்துவிட்டார்!
"இவ சம்மதிக்கல்லைன்னா விடுடா.. அவளுக்கு வயிற்றெரிச்சல். அதனால சொல்றா..'' என்று அப்பா எனக்கு சமாதானம் சொன்னாலும் சினிமாவில் நான் நடிப்பதை அம்மா விரும்பவே இல்லை!
••••••••••••••••••••••••
பிரபல நடிகர் வி.கே.ஆர் (வி.கே.ராமசாமி) பயங்கர ரேஸ் பிரியர். ஒருமுறை ரேஸில் அவருடைய குதிரை ஜெயித்துவிட்டது. அதற்காக "கப்' வாங்கப் போயிருக்கிறார். "கப்'பை வழங்கியவர் ஜெமினி எஸ்.எஸ். வாசன்.
கப்பைக் கொடுத்துவிட்டு, "நீதானே ராமசாமி. நாளைக்கு வந்து என்னை ஸ்டுடியோவில பாரு'' என்று சொல்லியிருக்கிறார்.
வி.கே.ஆர். மறுநாள் சென்றபோது வாசன் சொல்லியிருக்கிறார், "இந்தக் குதிரையை வித்திடு. இனி ரேஸ் பக்கம் போகாதே. நான் ரேஸில் நிறையப் பணம் சம்பாதிச்சு படம் எடுத்திருக்கேன். அதுக்குப் பிறகு ரேஸுக்குப் போறதில்லை. அது எங்கோ உன்னை இழுத்து விட்டுடும். இதை இன்னைக்கோட நிறுத்திடு''.
அதைக் கேட்டதும் அன்றுடன் ரேஸுக்குப் போவதையே நிறுத்திவிட்டார் வி.கே.ஆர். அதை அவரே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
தன்னிடம் உள்ள தவறான பழக்கத்தை ஒருவர்
உரிமையுடன் கண்டித்துச் சொல்கிறபோது அதை ஏற்று நடக்கிற பெருந்தன்மை வி.கே.ஆரிடம் இருந்தது. அவரைப்போல் நல்ல எதிர்காலம் கொண்ட ஒரு நடிகர் பாழாகி விடக் கூடாது என்ற நல்ல எண்ணம் எஸ்.எஸ்.வாசனுக்கு இருந்தது.
எவ்வளவு அற்புதமான மனிதர்கள்!
"அனுபவத் தொடரில்' சோ.ராமசாமி

http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kathir/2017/feb/19/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-2651890.html

Thursday, December 15, 2016

"நண்பனுக்கும் மேலானவராக..." - ரஜினிகாந்த்

"நண்பனுக்கும் மேலானவராக..." - ரஜினிகாந்த்
சோ அவர்களை நான் முதன் முதலில் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ ஷூட்டிங்கில் தான் சந்தித்தேன். அதுவரை அவரைப் பற்றி நான் அறிந்து வைத்திருந்தது, அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி உட்பட பல முன்னணி நடிகர்களுடைய படங்களில், அவர்களோடு இணைந்து நடித்தவர் என்பது தான். ஆனால் ‘ஆறில் இருந்து அறுபது வரை’ படப்பிடிப்பு சமயத்தில் இயக்குநர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்கள், சோ ஸாரைப் பற்றி பல விஷயங்களைச் சொன்னார். அவற்றுள் ஒன்று என்னை பிரமிக்க வைத்தது.
‘சோ பேசுகிறார்’ என்று மட்டும் ஒரே வரியில் போஸ்டரில் விளம்பரம் செய்யப்பட்டு, மெரீனாவில் அவர் பேசிய பொதுக்கூட்டத்திற்கு, ஒரு லட்சம் பேருக்கு மேல் திரண்டார்கள் - என்பது தான் அந்த தகவல். எந்தக் கட்சியின் பின்புலமும் இல்லாத அவருடைய பேச்சைக் கேட்க இத்தனை பேர் திரண்டார்கள் என்ற அந்த விஷயம், அவர் பால் எனக்கு மதிப்பையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியது.
பிறகு வெவ்வேறு படங்களில் சேர்ந்து நடிக்கும் போது நெருங்கிப் பழகி, நிறைய பேசும் வாய்ப்பு வந்தது. அவரது அணுகுமுறை எளிமையானது. அவர் ‘செட்’டில் இருந்தால் அந்த இடமே கலகலப்பாக இருக்கும். ஸீனியர் - ஜூனியர் என்றெல்லாம் பார்க்காமல், கலாட்டா செய்து கொண்டும், ஜோக் அடித்துக் கொண்டும் இருப்பார். எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.
‘குரு-சிஷ்யன்’ படத்தின் போது, மைசூரில் 20-25 நாட்கள் பல காட்சிகளை எடுக்க வேண்டியிருந்தது. நானும், அவரும் சேர்ந்து பங்குபெற வேண்டிய காட்சிகளும் அதில் அடக்கம். அப்போது தான், ‘அவுட்டோர் ஷூட்டிங்கிற்கு எல்லாம் அவர் வருவது கஷ்டம்; ஒப்புக்கொள்ள மாட்டார்’ என்று கேள்விப்பட்டேன். எஸ்.பி.எம். அவர்களும், பஞ்சு அருணாசலம் ஸாரும் என்னிடம், ‘சோ ஸார் 10 நாட்களாவது வந்தால் தான் சரியாக இருக்கும். நாங்கள் அவரிடம் கேட்கிறோம். நீங்களும் அவரிடம் ஒரு வார்த்தை பேசினால் பரவாயில்லை’ என்று சொன்னார்கள். நானும் சோ ஸாரைத் தொடர்பு கொண்டு, ‘ஸார் இந்த மாதிரி நிலைமை இருக்கிறது. நீங்கள் வர வேண்டும்’ என்றதும், அவர், துக்ளக் பணிகளைப் பற்றியும், அதனால் ஏற்படும் சிரமம் பற்றியும் என்னிடம் விளக்கினார். ஆனாலும் 15 நாட்கள் அங்கு வந்து இருந்தார்.
மைசூரில் ‘குரு - சிஷ்யன்’ படப்பிடிப்பு சமயத்தில், அந்த 15 நாட்களும் தினமும் அவரோடு ஒன்றாகப் பயணிப்பது, ஒன்றாகச் சாப்பிடுவது, நிறையப் பேசுவது என்று நேரம் வாய்த்தது. அந்த 15 நாட்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. ‘பகவத் கீதை’ உட்பட ஆன்மீகம் தொடர்பான பல விஷயங்களை அச்சமயத்தில் அவரோடு விவாதிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஸம்ஸ்க்ருதத்தில் பகவத்கீதை ஸ்லோகமும், அதற்கு தமிழில் சோ அவர்கள் கூறிய விளக்கமும் ஆடியோ கேஸட்டாக வெளிவந்திருக்கிறது என்று அவர் சொன்னார். எனக்கு அந்த கேஸட் வேண்டும் என்றதும், உடனே வரவழைத்து அளித்தார். அதை திரும்பத் திரும்ப பலமுறை கேட்கிறேன். அவருடன் நெருங்கிப் பழகத் தொடங்கிய பிறகு, அவ்வப்போது ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டு ஃபோனிலும், நேரிலும் பேசுவோம். என் வீட்டு நிகழ்ச்சிகளுக்குத் தவறாமல் வந்திருக்கிறார்.
1995-ல் ‘பாட்ஷா’ பட விழாவில் வெடிகுண்டு கலாசாரம் பற்றி நான் பேசி, அது பெரிய சர்ச்சையாகி விட்டது. அரசியலுக்கு நான் வருவேனா, இல்லையா, என்ன செய்யப் போகிறேன் என்றெல்லாம் விவாதங்கள் எழுந்துவிட்டன. அப்போது பிரதமராக இருந்த பி.வி.நரசிம்மராவ் அவர்கள், ‘அரசியலுக்கு நான் வர வேண்டும்’ என்று கூறினார்.
அந்த காலகட்டத்தில், ‘முத்து’ பட வேலைகளில் நான் ஈடுபட்டிருந்த போது, திடீரென்று ஒரு நாள் காலை சோ ஸார், அவரே காரை ஓட்டிக் கொண்டு என் வீட்டிற்கு வந்து விட்டார். ‘என்ன ஸார், என்னென்னமோ பேச்சு கிளம்புகிறது. அதுபற்றி உங்களோடு பேச வேண்டும். அதான் வந்துவிட்டேன்’ என்றார். நான் ‘முத்து’ ஷூட்டிங்கிற்கு கிளம்பிக் கொண்டிருப்பதை அறிந்ததும், ஷூட்டிங் நடக்கும் அடையாறு வரை அவரே காரை ஓட்டி வந்து, என்னை அங்கே விட்டுவிட்டு, ‘எத்தனை நேரமானாலும் ஷூட்டிங் முடிந்ததும் வாருங்கள். பேச வேண்டும்’ என்றார். அன்று இரவு அவரைச் சந்தித்த போது, நீண்ட நேரம் பேசினோம்.
‘மக்களிடம் உங்களுக்கு செல்வாக்கு இருக்கிறது. அதே சமயம் அரசியல் கட்சி நடத்துவது சுலபமான விஷயம் அல்ல. நல்லவர்களும் வருவார்கள்; தப்பானவர்களும் வருவார்கள். அது ஒரு பெரிய சுமையாகவும் இருக்கும். யோசித்து ஜாக்கிரதையாக அணுக வேண்டும்’ - என்றெல்லாம் சாதக, பாதகங்கள் பற்றி நிறைய சொன்னார். அன்றும், அதைத் தொடர்ந்தும் அவர் பேசியதை, அப்படியே என் கையைப் பற்றி என்னை அழைத்துச் செல்வதைப் போல, அர்ஜுனனை கிருஷ்ணர் வழி நடத்தியது போல உணர்ந்தேன். எது நல்லது, எது கெட்டது, ஒரு விஷயம் எப்படிப்பட்டது, அதை எப்படி அணுகுவது - இவற்றில் எல்லாம் ஒரு தெளிவை காட்டுவது போல அவர் பேசியது அமைந்திருந்தது. அவர் அந்த சமயத்தில் அப்படி எல்லாம் கூறியிருக்காவிட்டால், நான் என்ன முடிவு எடுத்திருப்பேன், என்ன செய்திருப்பேன் என்று சொல்ல முடியாது.
இப்படி எங்கள் நட்பு தொடர்ந்தது. ஒரு வாரம் தொடர்ந்து பேசாவிட்டால், பட வேலைகளில் மூழ்கி இருந்தால், அவரிடம் இருந்து ஃபோன் வந்துவிடும். ‘என்ன ஸார் மறந்து விட்டீர்களா?’ என்று கலாட்டா செய்வார். எனக்கும் அவரைச் சந்திப்பதில் கொஞ்சம் இடைவெளி ஏற்பட்டு விட்டால் ஏதோ குறை தெரியும்.
ஒருமுறை அவரிடம், ‘எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பல ஜாம்பவான்களுடன் பழகி இருக்கிறீர்கள். என்னை உங்களுக்கு ஏன் பிடித்திருக்கிறது?’ என்று கேட்டேன். அவர் உடனே, ‘ஆன்மீகம் தான்’ என்றார். ‘உங்களுடைய ஆன்மீகத் தேடல் என்னை ஆச்சரியப்படுத்துகிறது. உங்களுடைய செயல்பாடுகளுக்கும், இந்த சப்ஜெட்டுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று சொன்னார். எனது இமயமலைப் பயணங்களைப் பற்றி நிறைய கேட்பார். ‘உங்களோடு ஒரு முறை வரவேண்டும் என்று நினைக்கிறேன்’ என்று 2, 3 முறை சொல்லி இருக்கிறார். ஆனால், வராமலே போய் விட்டார்.
துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் சமீப காலமாகத் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறேன். துக்ளக் வாசகர்களுக்கும், அவருக்கும் இருக்கும் பரஸ்பர நம்பிக்கை, வாசகர்கள் கருத்துக்கு அவர் அளிக்கும் மதிப்பு, ஆண்டுவிழா கூட்டங்களில் பல பிரச்னைகள் பற்றிய அவரது தெளிவான கண்ணோட்டம் - இவை எல்லாம் என்னை வியக்க வைத்திருக்கிறது.
என் மனைவியிடமும், குழந்தைகளிடமும் பேசாத விஷயங்களைக் கூட, அவரோடு நான் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில் ஒரு நண்பருக்கும் மேலாக அவர் இருந்திருக்கிறார். என் குடும்ப விவகாரம், என் நிதி நிலை உட்பட பல விஷயங்கள். என் மனதில் இருக்கும் ஆதங்கங்களை அவரிடம் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். அந்த மாதிரி இன்னொருவரிடம் இனி பேசும் வாய்ப்பை நான் இப்போது இழந்திருக்கிறேன்.
சமீப காலமாக அவர் நோய்வாய்ப்பட்டது முதல் அவ்வப்போது போய் உடல்நிலை விசாரிப்பேன். உடம்பு முடியாத அந்தச் சூழ்நிலையிலும் அவர் படுகிற அவஸ்தையைக் கூட நகைச்சுவை கலந்து தான் பேசுவார். சிங்கம் மாதிரி இருந்தவர், இப்படி உருக்குலைந்து விட்டாரே என்று மிகவும் வருத்தப்பட்டேன். அவர் அன்பு வைத்திருந்த முதலமைச்சர் மரணித்ததும், அடுத்த நாள் இவரது மறைவும் நிகழ்ந்து விட்டது. அவரது உடல்நிலை படிப்படியாக பாதிக்கப்பட்டு வந்து கொண்டிருந்ததால், அவரது மறைவு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை. ஆனால், பெரும் இழப்பை உணரச் செய்திருக்கிறது. என் வாழ்க்கையில் அவருக்கு இருந்த இடத்தை இன்னொருவர் நிரப்ப முடியும் என்று நான் கருதவில்லை. அவர் யாருக்கும் கெடுதல் செய்ததில்லை. நிறைய பேருக்கு உதவி தான் செய்திருக்கிறார். நேர்மையாக வாழ்ந்திருக்கிறார். அதனால், அவர் ஆத்மா சாந்தி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
அவர் இருக்கும் போது ‘துக்ளக்’ எப்படி இருந்ததோ, அதே போல தொடர்ந்து ‘துக்ளக்’ நீண்ட காலம் வெளிவர அவரது ஆத்மா நிச்சயம் வழிகாட்டும். அவரது குடும்பத்தாருக்கும்,‘துக்ளக்’ ஊழியர்களுக்கும், ‘துக்ளக்’ வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, December 14, 2016

WE WILL MISS YOU CHO...

யாமறிந்த மனிதர்களுள்...!
46ஆண்டுகளாக சோ அவர்களால் நடத்தப்பட்டு வந்த துக்ளக், அவர் இல்லாத நிலையில் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனால், அப்படி ஒரு நிலையைச் சந்திக்க வேண்டியவர்களாகி விட்டோம்.
சோ அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு நன்றாகத் தெரியும், அவர் ஒரு பல்கலைக் கழகம் போன்றவர். அவரது எழுத்துத் திறனும், பேச்சுத் திறனும் நாடறிந்தது. அவரது நகைச்சுவை உணர்வு கடல் போன்றது. உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சேர்க்கப்பட்டிருந்த போதும், இயல்பாக ஜோக் அடித்து சிரிக்க வைத்துக் கொண்டிருந்தார். மறைவதற்கு இரு தினங்களுக்கு முன்பு - அச்சுக்குப் போகும் துக்ளக் பக்கங்களைக் கொண்டு போய்க் காட்டிய போது கூட, அவருக்கே உரிய கூர்ந்த பார்வையில் திருத்தங்களைச் சொன்னார்.
மனிதர்களைப் புரிந்து கொள்வதில் அவருக்கு இருந்த ஆற்றல் அளவில்லாதது. ஒரு அரசியல் பிரமுகர் வந்து பேசி விட்டுச் சென்றபின், அவர் பேசியதில் எது உண்மை, எது தவறு என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு, ‘இவர் இப்படிச் சொல்கிறார். ஆனால், இப்படித்தான் செய்யப் போகிறார்’ என்று தீர்க்கதரிசன உணர்வோடு கணிப்பார். அதன்படியே நடக்கும். இந்தத் திறன் அவரிடம் இயல்பிலேயே இருந்தது.
1970-ல் சோ அவர்கள் துக்ளக்கை ஆரம்பித்த போது, அன்றைய ஆளும் கட்சியையோ, முதல்வரையோ விமர்சிப்பதற்கு அதீதமான தைரியம் தேவைப்பட்ட காலம். அந்த நேரத்தில், தி.மு.க.வின் கொள்கைகளிலும், செயல்களிலும் இருந்த நாடகத்தனத்தை துணிச்சலாகவும், நகைச்சுவையோடும் விமர்சித்தார். இப்படிக் கூட விமர்சிக்க முடியுமா என்று வியப்படைந்த அன்றைய வாசகர்கள், அதை மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அதன் காரணமாகவே எந்தக் கட்சி, ஸ்தாபனப் பின்புலமும் இல்லாத ஒரு தனி நபராக மேடையேறி, லட்சக் கணக்கான வாசகர்களை ஈர்க்க அவரால் முடிந்தது. இது இன்று வரை, அரசியல் தலைவர்கள் உட்பட எந்த தனி நபராலும் செய்யப்படாத சாதனை.
அச்சம் அறியாது, நேர்மைக் குறைவின்றி, நகைச்சுவையைச் சேர்த்து வெளிவந்த ஒவ்வொரு துக்ளக் இதழும், பத்திரிகை உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. வாசகர்கள் அறிய வேண்டிய விஷயம் என்று ஒன்றை உணர்ந்தால், வாசகர்களின் விருப்பத்தைப் பற்றியோ, விற்பனையைப் பற்றியோ கவலைப் படாமல், அதை துக்ளக்கில் இடம் பெறச் செய்துவிடுவார். எவ்வளவு தான் வற்புறுத்தினாலும், தனக்குப் பிடிக்காதவற்றைப் பிரசுரிக்கச் சம்மதிக்கவே மாட்டார். எவ்வளவு தான் பிடித்த நபராக இருந்தாலும், தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடப் புகழ்ந்ததில்லை. என்ன தான் விமர்சனத்துக்கு உரியவரானாலும், கடுகளவும் தரம் இறங்கித் தாக்கியதில்லை. அலங்கார வார்த்தைகளை விட உண்மையான வார்த்தைகளையே அவர் விரும்பினார். பரபரப்பை விரும்பாமல், நேர்மைக்கே முக்கியத்துவம் தந்தார். இப்படித்தான் துக்ளக்கை வளர்த்தார்.
அரசியலில் உள்ள அவலங்களை அம்பலப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கியதோடு, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும், ஹிந்து மஹா சமுத்திரம் தொடரையும் அற்புதமான நடையில் எழுதி, மக்களிடையே பக்தி உணர்வையும் வளர்த்தார் சோ.
எந்தத் தலைவரை எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும், அவர்கள் ஆசிரியரிடம் கொண்டிருந்த நட்பு மாறாமல் இருந்தது ஒரு அதிசயமே. சோவின் எழுத்தில் இருந்த கண்ணியமும், உண்மையுமே இதற்குக் காரணமாக இருக்க முடியும். நட்புக்காக விமர்சனத்தைக் குறைத்துக் கொள்ளவும் மாட்டார். எதை இழந்தாலும், துக்ளக் வாசகர்கள் தன் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழந்து விடக் கூடாது என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.
தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியலில் நேரடியாக இறங்கியிருந்தால் உயர்ந்த பதவிகளை அவரால் எளிதில் பெற்றிருக்க முடியும். பதவிகளுக்காக தனது விமர்சன சுதந்திரத்தை இழக்க ஒருபோதும் அவர் விரும்பியதில்லை. (முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் வற்புறுத்தலுக்காக அவர் ஜனதாவில் சேர்ந்தார் என்றாலும், அது தனக்கு ஒத்து வராத தளம் என்று வெகு விரைவிலேயே அதற்கு முழுக்குப் போட்டார்.)
வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கலைஞரும், ஜெயலலிதாவும் முதல்வராவதற்கு அவர் முக்கிய காரணமாக இருந்தும், அவர்கள் ஆட்சியில் அமர்ந்தவுடனேயே, அவர்களுடனான நெருக்கத்தைக் குறைத்துக் கொண்டவர் சோ. அவரை அறியாத இந்தியத் தலைவர் இல்லை. அப்படியும் யாரிடமும் எந்தச் சிறு சலுகையையும் அவர் எதிர்பார்த்ததில்லை. அது தான் எங்கள் எடிட்டர்.
தொட்ட துறைகள் அனைத்திலும் வெற்றி கண்டவர். தனது வெற்றிகளுக்கு அதிர்ஷ்டம் தான் காரணம் என்று அவர் கூறினாலும், அவரது அசாதாரணமான திறமைகள் வியப்புக்குரியவையே!
எந்தக் கேள்விக்கும் உடனே பதிலளிக்கும் அவரது, Presence of Mind வியப்புக்குரியது. துக்ளக் ஆண்டு விழாக் கூட்டங்களில் வாசகர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்த முறை, யாராலும் கடைபிடிக்கப் படாதது. தமிழானாலும் ஆங்கிலமானாலும், எவ்வளவு நேரம் பேசினாலும் அவ்வளவு நேரமும் கைதட்டலைப் பெறும் பேச்சாற்றல் கொண்டவர். அவரது வாதத்திறன் ஒப்பில்லாதது. துக்ளக் இதழ்களில் அவர் எழுதிய தலையங்கங்கள் அவரது ஆழ்ந்த அறிவையும், தீர்க்க தரிசனத்தையும் வெளிப்படுத்துகின்றன.
எமர்ஜென்ஸி காலத்தில், விளம்பரத்திலும், சினிமா விமர்சனத்திலும் கூட நுணுக்கமாக அரசியலை நுழைத்து, தணிக்கை அதிகாரிகளையே திணற அடித்த எழுத்து அவருடையது.
எந்த அரங்கிலும், தலைவர்களையும் கலைஞர்களையும் மிஞ்சும் வகையில், ‘சென்டர் ஆஃப் அட்ராக்ஷனா’கத் திகழும் ஈர்ப்பு அவரிடம் இருந்தது.
எத்தனை உயர்ந்த நிலைக்கு வந்தும், தனது நண்பர்களுடன் அரட்டை அடிப்பதையே பெரிதும் விரும்பியவர் சோ.
கடுகளவும் போலித்தனம் அற்ற மாமனிதரை ஆசிரியராகப் பெறும் பேறு துக்ளக்கிற்குக் கிடைத் தது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரிடமிருந்து துக்ளக் ஆசிரியர் குழுவினரான நாங்கள் எவ்வளவோ நல்ல பண்புகளைக் கற்றோம். எங்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையும் காட்டிய எடிட்டரை மறக்க முடியாமல் தவிக்கிறோம்.
எத்தனையோ ஆண்டுகளாக அவருடன் நெருங்கிப் பழகி விட்டதால், அவர் இப்போது இல்லை என்பது மனதில் பெரும் வலியை ஏற்படுத்துகிறது. ‘அடுத்த இஷ்யூக்கு என்ன ஸார் பண்ணலாம்?’ என்றஅவரது கம்பீரமான அந்த உற்சாகக் குரல் எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.
‘யாமறிந்த மனிதர்களுள் சோவைப் போல்
இனிதானவர் எங்கும் காணோம்’.
- துக்ளக்

Friday, April 1, 2016

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...

துக்ளக் ஆண்டு விழா தொடங்கியது எப்படி ...
வாசகர்களை கூட்டி ஆண்டுக்கொருமுறை விழா நடத்தி அவர்களுடைய விமர்சனங்களுக்கு வழி செய்து அவற்றுக்கு பதில் அளித்து ஓரு கருத்து பரிமாற்றத்துடன் துக்ளக் நடத்தி வருவது பலருக்கு வியப்பாக இருக்கிறது.
நல்ல ஜடியாக்கள் யோசனையின் மூலம் என்க்கு வருவதில்லை அகஸ்மாத்தாக வந்து விடுகின்றன.இந்த ஆண்டு விழா ஏற்ப்பாடும் அப்படித்தான்.
பத்திரிக்கை தொடங்கிய முதல் வருடமான 1970 ல் ஏப்ரல் மாத்த்தில் வாசகர்களோடு ஏதாவது ஏப்ரல் ஃபூல் விளையாட்டு விளையாடலாம் என நினைத்தேன்.துக்ளக்கை தொடர்ந்து நடத்துவதா வேண்டாமா என என முடிவு அறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.இது பற்றி வாசகர்கள் கருத்தை அறிய விரும்புகின்றேன்.ஏப்ரல் 1 மாலை 6.30 மணிக்கு சென்னை உட்லண்ட்ஸ் ஒட்டலில் கூட்டம் நடக்கும் வாசகர்கள் வந்திருந்து தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் என துக்ளக்கில் அறிவித்து விட்டேன்.
என் நினைப்பு இது தான்.ஏப் 1 கூட்டம் என்ற உடனே இது விளையாட்டு என புரிந்து கொண்டு யாரும் வரமாட்டார்கள்,அல்லது 10 அல்லது 15 பேர் இந்த விளையாட்டுக்கு பலியாவர்கள் அவர்களை சமாளித்து விடலாம் என நினைத்தேன்..
அதே போல அன்று மாலை ஒட்டல் வாசலில் துக்ளக்கில் வந்த அறிவிப்பு ஏப்ரல் ஃபூல் தமாஷ் ஏமாந்தவர்கள அஅனைவரும் வீட்டிற்க்கு போய் சேருங்கள் என்ற பலகை தொங்க விடபட்டது.
மாலை 6 மணிக்கு என்க்கு போன் வந்தது.நீ எழுதி வைத்த போர்டை காட்டினால் இங்கு இருக்கும் கூட்டம் எங்களை உதைக்காமல் விடமாட்டாங்க.அதானால் போர்டை எடுத்து உள்ளே வைத்து விட்டோம்.கூட்டத்தை சமாளிக்க முடியவில்லை மரியாதையாக வந்து சேர் என அழைப்பு வந்தது..
சரியான வம்பில் மாட்டிக் கொண்டோம் என புரிந்தது.துக்ளக் பிரசுரகர்த்தர் வெங்கட்ராமனையும், ஆசிரியர் குழுவில் சிலரையும் அழைத்து கொண்டு கிளம்பினேன்.நல்லது நடக்க மோகிறது என்றால் தனியாக போகலாம்.தர்ம சங்கடத்தை தனியாக அனுபவிப்பானேன்? என கூடவே இவர்களையும் அழைத்து சென்றேன்.
ஒட்டல் மைதானத்தில் கூடியிருந்த மக்கள் உணர்ச்சி வசப்பட்டு வரவேற்ப்பு அளிக்க அந்த மிதப்பில் மேடைக்கு போய் சேர்ந்த நான் கூட்டத்தை சமாளிக்க துக்ளக்கில் அரசியல் வேண்டுமா வேண்டாமா என ஆசிரியர் குழுவில் இருந்த சுந்தரம் ஆரம்பித்து வைக்க,ஒவ்வோரு வாசகராக வந்து தங்கள் அபிப்ராயம் மற்றும் துக்ளக் மீதான விமர்சனத்தையும் நாட்டு அரசியல் பற்றிய தங்கள் கருத்தையும் முன் வைத்தார்கள் ..ஒவ்வோருவரும் பேசி முடித்தவுடன் அவரவரவர்க்கு பதில் சொன்னேன்.அந்த கூட்டம் ஒரு விவாத மேடையாக உருமாறியது.
அரசியல் விமர்சனத்தை தொடரவேண்டும் என அனேக வாசகர்களும், துக்ளக்கின் துணிவை அனைவரும் பாராட்ட துக்ளக்கோடு தங்களுக்கும் இருந்த் கருத்து வேறுபாட்டை அவரவர் விவரிக்க அதற்க்கு நான் பதில் கூற கூட்டம் சுமூகமான முடிவை நெருங்கியது.
ஏப்ரல் ஃபூல் செய்யலாம் என்று நினைத்து தான் இந்த் கூட்டத்தை கூட்டினோம்.இத்தனை பேர் கூடியதும் கூடியதும் வேறு வழியில்லாமல் கருத்தரங்கமாகவே மாற்றிவிட்டேன்.விளையாட்டாக ஆரம்பித்தாலும் மிகவும் ஆழமான விமர்சனங்களோடு இது முடிந்திருக்கிறது என று நன்றி கூறி முடித்தேன்.
இந்த கூட்டத்தினால் ஏற்பட்ட அனுபவத்தின காரணமே ஆண்டு தோறும் நடக்கும் துக்ளக் ஆண்டு விழா நிகழ்ச்சி...
சோ அவர்களின் அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் ...

Friday, December 26, 2014

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)
துக்ளக் பத்திரிகையின் தர்மம் என்ன என்பது பற்றி, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் எழுதுவதற்கு இது சரியான நேரம்தான் என்று நினைக்கிறேன். ஆகையால் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்.
...எதிர்த்து வரும் வாதங்களிலும், கேட்டுக் கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். ‘பல விஷயங்களில் துக்ளக்கின் கருத்து என்ன?’ என்று கேட்டுக் கடிதங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?.... அதைப் பற்றி என்ன கருத்து?... இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கக்கூடாதா?’ என்றெல்லாம் பல வாசகர்கள் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து, ஒரு சில விஷயங்களை மேலெழுந்த வாரியாகக் கூறுகிறேன். துக்ளக்கின் போக்கையும், துக்ளக்கில் இடம் பெறுபவை, இடம் பெறாதவை பற்றியும் மேலும் முழுமையாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்று நம்புகிறேன்.
பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள நான், எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது. இது ஒரு கௌரவம்.
குறை கூற எனக்கு வக்கு இருக்கும்போதுதான் குணத்தைக் கூற என் பேனா தானாகவே இயங்க ஆரம்பிக்கிறது. இது ஒரு விளக்கம்.
வீழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து, அவன் பதில் சொல்ல முடியாத விஷயத்தைக் கூறி வாய்ச் சவடால் அடிப்பது என் பழக்கமல்ல. இது ஒரு வியாக்கியானம்.
வளரும் தீமைகளைக் கண்டிக்க வாய்ப்பிருந்தால் கண்டிக்கத் தவறி விடுவது, மடத்தனம் என்று நினைக்கிறேன். இது ஒரு வாதம்.
சில தீமைகளைச் சுட்டிக் காண்பிக்க முடியாமல் போனாலும் – அம்மாதிரி தீமைகளை ஆதரிக்காமலாவது இருக்கிறேன். இது ஒரு திருப்தி.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட அச்சங்கள் எத்தனை மெய்த்து விட்டன?’ என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் பெருமையில்லை, வருத்தம்தான்.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட விருப்பங்கள் எத்தனை இன்னமும் ஈடேறாமல் இருக்கின்றன?’ என்றும் எண்ணிப் பார்க்கிறேன். இதில் அவமானம் இல்லை. வேதனைதான்.
எது எப்படி இருந்தாலும் லாபத்திற்காகவோ, அச்சத்தினாலோ எதையும் நான் எழுதியதே கிடையாது. இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைவிட எல்லா வகையிலும் பல மடங்கு உயர்ந்ததாக துக்ளக் இருக்கிறது. இது ஒரு சாதனை.
துக்ளக்கின் வாசகர்களில் பலர் துக்ளக்கை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பலமும் கூட.
என்றென்றும் ஆசிரியனை விட பத்திரிகை உயர்ந்ததாகவும், வாசகர்களின் எண்ணிக்கையை விட அவர்களுடைய அறிவு அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு நல்லெண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, துக்ளக்கின் தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இப்படித்தான் சொல்ல முடியும்.
நல்ல முயற்சிகள் உடனடியாகப் பலனிக்காமல் போனாலும், நாளாவட்டத்தில் வெற்றி கண்டே தீரும். இப்படிச் சொல்லும்போது நம்பிக்கையை விட, ஆசையே அதிமாக இருக்கிறது.
- சோ
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)

Wednesday, August 29, 2012

RESERVATION IN PROMOTION - CHO

இந்த வார துக்ளக்கில் வெளியான சோ எழுதிய இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை:

"அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிப்பதிலும், எஸ் ஸி, எஸ் எஸ் டி., பிரிவினருக்க்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற உள்ளார்களாமே? " என்று தஞ்சாவூரில் இருந்து மூக்கையா ஒரு கேள்வி அனுப்பியுள்ளார். வேறு சில வாசகர்களும் இது பற்றி கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற விசயம், 2001 இல் பாராளுமன்றத்தில் பேசப்பட்டு, இரு சபைகளிலும் நிறைவேறி, அரசியல் சட்டத் திருத்தம் வந்தது. இரு சபைகளையும் சேர்ந்தவர்கள் ம்சோதாவை எதிர்க்கவில்லை; எதிர்த்து வாக்களித்த ஒரே உறுப்பினர் நான் தான்.

இப்போதும் என் அபிப்ராயத்தில் மாற்றமில்லை. அன்று நடந்ததை, இப்போது நினைவுகூர்ந்து பொருத்தமாக இருக்கும் என்ற எண்ணத்தில் 19-12-2001 துக்ளக் இதழில் பிரசுரமானதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறேன். 

அரசு ஊழியத்தில் இருப்பவர்கள் ப்ரமோஷன்கள் மற்றும் சீனியாரிட்டி பெறுவதில் இட ஒதுக்கீடு கூடாது என்று சுப்ரீம் கோர்ட் ஒரு வழக்கில் தீர்ப்பளித்தது. இந்த மாதிரியான இட ஒதுக்கீடு, அரசியல் சட்டத்திற்கு முரணானது என்றும் அந்த தீர்ப்பு கூறியது; இதற்குப் பிறகும் இந்த இட ஒதுக்கீடு முறையை தொடர்வது என்றால், அரசியல் சட்டட்த்தை திருத்தியாக வேன்டும் என்ற நிலை தோன்றியது. அனைத்துக் கட்சிகளும் இப்படி அரசியல் சட்டம் திருத்தப்படுவதை ஆதரிக்கிற நிலை இருப்பதால், மத்திய அரசு இதற்கான அரசியல் சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. லோக் சபாவில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட இந்த அரசியல் சட்டத் திருத்த மசோதா, அதன் பிறகு ராஜ்யசபைக்கு வந்தது.

சென்ற ஐந்தாம் தேதி ராஜ்ய சபையில் இது விவாதிக்கப்பட்டது. அனைத்து கட்சியினரும் மசோதாவை வரவேற்றுப் பேசினார்கள். எனக்கு சந்தர்ப்பம் கிட்டியது. நான் மசோதாவை எதிர்த்து பேசினேன். அந்தப் பேச்சின் சாரம்சம் இதோ:

" இது ஒரு விவேகமில்லாத நடவடிக்கை. தழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முயல்வதற்கு இது உத‌வாது. அதிகார வர்க்கத்தின் நல்ல மனநிலைக்கும் இது உதவாது. பணிகளில் நியமனம் பெறுவதற்கு இட ஒதுக்கீடு இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. துரதிஷ்ட வசமாக சில நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் , நியமனங்களில் முன்னுரிமை பெறுவது அவர்களுக்குத் தரப்படுகிற சலுகை அல்ல. அவர்கள் பெறுகிற உரிமை. ஆனால் நியமனத்திற்கு பிறகு சீனியாரிட்டியை அடைவதிலும், ப்ரமோஷன்களைப் பெறுவதிலும் மற்றவர்கலுடன் போட்டியிடவே அவர்களை ஊக்குவிக்க வேண்டும். சீனியாரிட்டி என்பது பணியின் மூலமாக பெறவேண்டியதே தவிர, தரப்படுவது அல்ல. 

உண்மையிலேயே தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினரின் நிலையை உயர்த்த வேண்டும் என்று அரசு நினைத்தால்- அப்போது அதற்கான முயற்சியை ஆரம்பப் பள்ளியிலிருந்து தொடங்க வேண்டும். மிகச் சிறந்த கல்வி அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள்- ஆகியோரிடையே ஏழ்மை மலிந்து கிடப்பதால், அவர்கள் சிறிய வயதிளேயே வேலைக்கு போய் விடுகிறார்கள் அல்லது படிப்பை பாதியில் நிறுத்தி விடுகிறார்கள் அல்லது இருப்பதற்குள் மட்டமான பள்ளிகளுக்குச் செல்கிறார்கள். ஆகையால் மற்றவர்களோடு போட்டியிட அவர்கலுக்கு வழி செய்கிற வகையில், ஆரம்பப் பள்ளியிலிருந்து மிகச் சிறந்த கல்வியை அவர்கள் பெறுவதற்கான வழிமுறைகளை அரசு உருவாக்க வேண்டும். இப்படிச் செய்தால் அவர்களுக்குத் தன்னம்பிக்கையும் சுய மரியாதையும் வளரும்; நல்ல நிலையை எட்டிய முழுமையான திருப்தியும் அவர்களுக்கு ஏற்படும்.

மாறாக பிரமோஷன்களிலும் இட ஒதுக்கீடு என்பது போன்ற வழிமுறைகளினால் பயன் பெறுபவர்களிடையே அக்கறை இன்மையும, மிகச் சுலபமாக திருப்தி அடைந்து விடுகிற மன்ப்போக்கையும் வளர்த்து விடும். உண்மையில் பார்க்கப் போனால், அவர்கள் தகுதியைப் பெருவதற்கும், திறமையை வளர்த்துக் கொள்வதற்கும் இந்த மாதிரி வழிமுறைகள் தடங்கலாகவே இருக்கும் 

அது மட்டுமல்லாமல், அரசு ஊழியத்தில் உள்ளவர்களின் நம்பிக்கையையும் இது நாசம் செய்யும். கடுமையாக உழைக்கிற நேர்மையான ஊழியர், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் பிறக்கவில்லை என்ற காரணத்திற்காக ஓரம் கட்டப்படுகிற போது, அவருடைய தன்னம்பிக்கை எந்த அளவில் இருக்கும் ? அம்மாதிரியான ஊழியர்கள் தங்கள் பிறப்பினால் ஏற்படுகிற சுமையை, பணியிலிருந்து ஓய்வு பெறும் வரையில் தாங்கிக் கொள்ள வேண்டியதுதானா? இது முழுமையான அநீதி

நீதித் துறைக்கு காட்டப்பட வேண்டிய மரியாதை பற்றி நாம் பேசுகிறோம். அயோத்தி விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும். ஆனால் இட ஒதுக்கீடு விவகாரம் என்றால், நீதித் துறையின் தீர்ப்பு குப்பையில் தூக்கி எறியப்பட வேண்டும். இதில் இருக்கிற நியாயத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அரசு பணிகளில் உள்ளவர்களின் நம்பிக்கையைக் குலைப்பதும், கடுமையாக உழைக்கக் கூடிய இளைஞர்கள் அரசு பணிக்குச் செல்ல விரும்பாத நிலையைத் தோற்றுவிப்பதுமான இந்த விவேகமற்ற நடவடிக்கை, யாருடைய பயனுக்காகக் கொண்டு வரப்படுகிறதோ, அவர்களுடைய அக்கறையின்மையைத்தான் வளர்க்கும். ஆகையால் இந்த மசோதாவை எதிர்க்கிறேன்".

நான் ஒருவன் இப்படி இதை எதிர்க்க, மற்ற எல்லோரும் ஆதரிக்க விவாதம் முடிவு பெற்று, ஓட்டு எடுப்பு நடந்தது. மசோதாவுக்கு ஆதரவு- 165; எதிர்ப்பு- 1. அந்த ஒன்று நான் தான். மசோதா நிறைவேறியது.

பின்னர் வெளியே வந்த பிறகு, பல்வேறு கட்சிகளை சேர்ந்த சில எம் பி க்கள் எனக்குப் பாராட்டுத் தெரிவித்தனர். "நாங்கள் எல்லாம் இம்மாதிரி பேச முடியாது... எங்கள் சார்பில் நீ பேசியதாக எடுத்துக் கொண்டு உனக்கு நன்றி சொல்கிறோம்" என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள்.

என்னைப் பொறுத்த வரையில் என்னுடைய எண்ணத்தை நான் சொன்னேன். ஜனநாயகத்தில் எண்ணிக்கைக்கு இருக்கிற வலிமை எண்ணத்திற்கு கிடையாது என்பதால் அது படு தோல்வியுற்றது. சுபம்

Saturday, June 23, 2012

ORU AASPATHIRIYIL ORU APPAVI - ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி

Right click the image and open it in a new window for full image.





Wednesday, December 21, 2011

CHO ON SASIKALA & CO 's EXPULSION

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=371154

போயஸ் தோட்டத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. அதன் சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுபவர், பத்திரிகையாளர் "சோ'. எல்லாம் செய்தும், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருக்கிறார், மனிதர். அதிகார மையம் இடம் மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ஓயாத போன் அழைப்புகளுக்கு மத்தியில், அவர், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* ஒரு சனிப் பெயர்ச்சியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தான் கொடுக்கும் என, நீங்கள் தான் பத்திரிகையில் போட்டுள்ளீர்கள். அப்படியென்றால், நீங்கள் முன்கூட்டியே கணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

* போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?

அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல. அதுவும், அந்த மாதிரி செயல்படுபவர்கள், தாங்களாகவே அந்த நிலையை ஏற்படுத்திக் கொண்டவர்களாக இருந்தால், அது நிர்வாகத்துக்கு இன்னமும் கெடுதல். அந்த மாதிரியான நிலை, நீக்கப்பட்டு இருக்கிறது. இது, ஆளுங்கட்சிக்கும், அரசு நிர்வாகத்துக்கும் ரொம்பவே நல்லது. நேர்மையான, தெளிவான பாதை வகுத்து நிர்வாகம் செல்வதற்கு இது உதவும். யாருடைய குறுக்கீடும் இல்லாமல், கட்சியும், ஆட்சியும் செயல்பட இது வழிவகுக்கும்.

* சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையமாக சசிகலா குடும்பத்தினர் செயல்படுகின்றனர் என்பது, முதல் முறை எழுந்திருக்கும் புகார் அல்ல. 1991ல் இருந்தே இருந்து வரும் புகார் தான். இப்போது, திடீரென அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணம் என்ன?

எந்த நடவடிக்கையுமே திடீரென எடுக்கப்படுவதல்ல. நீண்ட யோசனைக்குப் பிறகு தான், பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நேற்று ஏதோ நடந்து, இன்று நடவடிக்கை என்பதாக நினைக்கக் கூடாது. நான் அப்படி நினைப்பதில்லை. நீண்ட காலமாக தொடர்ந்து நடந்து வருகிற நிகழ்ச்சிகளைக் கவனித்து, அது தொடர்பான தெளிவான முடிவுக்கு வருவதற்கு, கொஞ்சம் நேரம் பிடித்திருக்கலாம். அதில் தவறில்லை. முடிவு எடுக்கிற போது தெளிவு இருக்க வேண்டும். அது இருந்திருக்கிறது. தற்போது நடந்திருக்கும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, தொடர் நிகழ்வுகளின் எதிரொலியாகத் தான் இருக்கும் என நான் நினைக்கிறேன்.

* அப்படியென்றால், முந்தைய காலங்களில் அவர்கள் செய்தவை எல்லாம், முதல்வரின் கவனத்துக்கு வரவே இல்லையா?

அது பற்றி எனக்குத் தெரியாது. அவங்களுக்குத் தெரிந்திருக்கலாம்; தெரியாமலும் இருந்திருக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்திருக்கலாம். ஏற்கனவே சொன்னது போல், நான் இப்போது சொல்லிக் கொண்டிருப்பது எல்லாமே, ஓர் அரசியல் விமர்சகர் என்ற அடிப்படையில் மட்டும் தான்.

* இவ்வாறு சட்டத்துக்கு அப்பாற்பட்ட சக்திகளாக செயல்பட்டவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமல்லவா?

 நான் ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்றால், எனக்கு திருப்தியான அளவு ஆதாரம் கிட்டுவது, ஒரு வகை. சட்ட ரீதியாக நிரூபிக்க வேண்டிய அளவு ஆதாரம் கிட்டுவது, வேறொரு வகை. சட்ட ரீதியான நடவடிக்கை என்றால், சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட நிரூபணமும் மட்டுமல்லாமல், சாட்சிகளும் தேவைப்படும். மூன்றாவது மனிதரும் திருப்தியடைய வேண்டும். இது அப்படியல்ல. நான் திருப்தியடைந்தாலே போதுமானது. இதையும், அதையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

* அவர்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என எடுத்துக் கொள்ளலாமா?
எனக்குத் தெரியாது.

* போயஸ் தோட்டத்தில் உள்ள சமையல்காரர் முதல் செயலர்கள் வரை, அனைவருமே சசிகலா குடும்பத்தாரின் நியமனம் தான் என்றொரு கருத்து நிலவுகிறது. இந்தச் சூழ்நிலையில், முதல்வர் தொடர்ந்து தயக்கமின்றி இயங்குவதில் ஏதேனும் சிரமங்கள் இருக்குமா?

 இதுபோன்ற விஷயங்கள், நம் யாரையும் விட அவருக்குத் தான் இன்னும் நன்றாகத் தெரியும். அதெல்லாம் தெரியாமலா அவர் ஒரு முடிவெடுத்திருப்பார்?

* சரி, இந்த இடமாற்றத்தில் உங்களுடைய, "ரோல்' (பங்களிப்பு) என்ன?

என்னைப் போட்டு பலர், "ரோல்' பண்ணுகின்றனர். அது தான் என், "ரோல்.' மண்டையை உருட்டுவது என்பரே. உருட்டுவதற்கு என் தலை மிகவும் வாக்கானது. உங்கள் தலையெல்லாம் முடியிருப்பதால் சிக்கிக் கொள்ளும். எனக்கு அந்தப் பிரச்னை எல்லாம் இல்லை; நன்றாக உருளும். அதனால் உருட்டுகின்றனர். என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்.

* இதன் மூலம், உங்களுடைய பங்களிப்பு இருந்ததை ஒப்புக் கொள்கிறீர்களா?

உருட்டுவதே நீங்கள் தானே. அதனால் தான், நல்லதாக இருந்தால் பாராட்டுங்கள்; கெடுதலாக இருந்தால் திட்டுங்கள் என்றேன்.

* கடந்த வாரத்தில் மட்டும், இரண்டு முறை நீங்கள், முதல்வரைச் சந்தித்ததாகவும், சசிகலா வெளியேற்றப்பட்ட சமயத்திலேயே, நீங்கள் தோட்டத்தில் தான் இருந்ததாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை தான் என்று, உங்களுக்கு எப்படி தெரியும்? 20 முறை கூட இருக்கலாம். அல்லது, ஒரு முறை கூட இல்லாமல் இருந்திருக்கலாம். யாராவது அப்படி சொன்னால், அதற்கு நான் என்ன பண்ண முடியும்? நான் மிகவும் பலவீனமானவன். இப்படிச் சொல்பவர்களுடன் சண்டையா போட முடியும்? சரி என, கேட்டுக்கொள்ள வேண்டியது தான். நான் ஒரு காந்தியவாதி. யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்வேன். ஏசு சொன்னது போல, இந்தக்
கன்னத்தில் அறைந்தால், அந்தக் கன்னத்தைக் காட்டுவேன்.

* பலவீனமானவர் என்று சொல்கிறீர்கள். போலீஸ் பாதுகாப்பு மற்றுமுள்ள நடவடிக்கைகளை எல்லாம் பார்த்தால், மேலும் மேலும் வலுவாகி வருகிறீர்கள் போலத் தோன்றுகிறது.

நான், என்றும் ஒரே மாதிரி தான் இருக்கிறேன். அன்று முதல் இன்று வரை ஒரே, "வெயிட்' தான்.

* போயஸ் தோட்ட நிர்வாகம் மற்றும் ஜெயலலிதாவின் சொந்த அலுவல்களை, சசிகலா மற்றும் குடும்பத்தினர் தான் பார்த்துக்கொண்டு இருந்தனர். இனி, அவற்றை யார் நிர்வகிப்பர்?

யார் வேண்டுமானாலும் பார்த்துக் கொள்ளலாம். எனக்குத் தெரியாது. நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களா?

* இதன் தொடர்ச்சியாக, அமைச்சரவையிலோ, கட்சியிலோ ஏதேனும் மாற்றம் இருக்குமா?

எனக்குத் தெரியாது. தொண்டர்கள் அனைவரும் ஜெயலலிதா பின்னால் தான் அணிவகுத்து இருக்கின்றனர் என்பதால், இது, கட்சியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று தான் கருதுகிறேன். தொண்டர்கள் விருப்பப்படி தான், எம்.எல்.ஏ.,க்களும் செயல்படுவர்.

* இவர்கள் இருவருக்கும் இடையில், பிரிவும், கருத்து வேறுபாடும் ஏற்படுவது, இது இரண்டாவது முறை. இப்போது ஏற்பட்டுள்ள விரிசல், மீண்டும் சரியாகி, ஜெயலலிதாவும், சசிகலாவும் திரும்பவும் இணைந்து விடுவர் என்ற எண்ணம், கட்சியினர் மத்தியிலேயே கூட காணப்படுகிறதே?

நான் பார்த்தவரையில், ஆளும் கட்சியினருக்கு அந்த மாதிரி எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அ.தி.மு.க.,வினர் எல்லாரும் மிகவும் கொண்டாடுகின்றனர். தமிழகம் முழுவதும் கொண்டாட்டம் தான். எடுக்கப்பட்ட முடிவில், ஒரு தெளிவு இருப்பதால் தான் கொண்டாடுகின்றனர். என்னைப் பொறுத்தவரை, மாநில நிர்வாகத்துக்காகவும், நேர்மையான ஆட்சியைத் தருவதற்காகவும், கட்சியை ஜனநாயக ரீதியில் ஒழுங்காக செயல்பட வைப்பதற்காகவும், ஒரு துணிச்சலான முடிவை எடுத்திருக்கிற முதல்வரை, மிகவும் பாராட்டுகிறேன். அவர், யோசிக்காமல் எதையும் செய்வதில்லை என்பது, எனக்குத் தெரியும். அவர் ஒரு முடிவு எடுக்கிறபோது, அதில் ஒரு பெரிய தெளிவு இருக்கும் என்பதை, இந்த நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்திருக்கிறது.

* வேறு சில கட்சிகளிலும் கூட, இதுபோன்ற அதிகார மையங்கள் இருக்கின்றன...

ஒரு கட்சியைப் பற்றி, மக்களுக்கு ஏதாவது குறை இருக்கிறபோது, அல்லது ஓர் ஆட்சியில் சிலர் குறுக்கீடுகள் பற்றி புகார்கள் இருக்கிற போது, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுத்து, கட்சியின் நம்பகத்தன்மையை உருவாக்கி, ஆட்சியின் நேர்மையை உறுதி செய்து, நடவடிக்கை எடுப்பது கட்சித் தலைவரின் கடமை; ஆட்சி முதல்வரின் கடமை என்பதை, ஜெயலலிதா தனது செயல் மூலம், வெகு நன்றாக நிரூபித்திருக்கிறார். இதே மாதிரியான, இதை விட பெரிய புகார்கள், வேறு சில கட்சிகளிலும் இருக்கின்றன. அவற்றின் தலைவர்களுக்கும், இதே போன்ற நேர்மைத் துணிவு வந்தால், அது அரசியலுக்கு நல்லது.

Monday, November 21, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் - 8 - சோ 
ர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘...தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?


வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக...’


அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது. 

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 
(தொடரும்) 


தர்மம் – 9 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

6–7–2011 இதழ் தொடர்ச்சி... 

தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பகவத் கீதையில் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கேட்கிறான் : 

கார்ப்பண்ய தோஷா பஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூட சேதா:
யச்ஸ்ரேயஸான் நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்.

பிறர் பரிதாபப்படத்தக்க நிலையை அடைந்து விட்ட நான், தர்மம் எது என்று அறியாமல் மிகவும் குழம்பிப் போய் கிடக்கிறேன். எது நல்லது என்று நிச்சயம் செய்து எனக்குச் சொல். உன்னுடைய சிஷ்யன் நான். உன்னையே சரணடைந்து கேட்கிறேன். 

கேட்பது யார்? அர்ஜுனன், தர்மபுத்திரருடைய தம்பி. தர்மபுத்திரரோ, தர்மத்தை முழுதும் உணர்ந்தவர். தர்மமே அவதாரமாக வந்துள்ளவர். அவருடைய தம்பி யுத்தகளத்தில் நின்று கொண்டு, ‘எது தர்மம் என்று எனக்குப் புரியவில்லை’ என்று குழம்புகிறான். 

அவனுக்கு தர்மத்தை விளக்கிச் சொல்வதற்காக 700 ஸ்லோகங்களுக்கு மேல் சொல்லி, பகவத் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, கடைசி கட்டத்தில் அவரிடம் என்ன சொல்கிறார்? 

இதி மே ஞானமாக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருச்யை ஏதத் அசேஷேண
யதேச்சஸி ததா குரு. 

ரகசியங்களில் எல்லாம் மிகப் பெரிய ரகசியமான ஞானத்தை உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன். இதை நன்றாக விமர்சித்து – அதாவது ஆராய்ந்து – அதன் பிறகு நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய். 

அங்கே அந்த சுதந்திரம் அர்ஜுனனுக்குத் தரப்படுகிறது – ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்’. 

வேறு எந்த மதத்திலும் இதைப் பார்க்க முடியாது. ‘முழுவதும் அனலைஸ் செய்து, அதன் பிறகு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’. 

– இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தான் நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், எது சரி என்று முழுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

தர்மத்தைச் சார்ந்த விதிமுறைகள் மாறுதல் அடைகின்றன என்பதையும் பெரியவர்களே, தர்ம சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். ப்ரஹஸ்பதி தன்னுடைய தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். நிறைய தர்ம நூல்கள் இருக்கின்றன. எப்படி மனுஸ்ம்ருதி இருக்கிறதோ, அப்படி ப்ரஹஸ்பதியினுடைய ஸ்ம்ருதியும் இருக்கிறது. 

(தொடரும்) 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


தர்மம் – 10 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

நாரத ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி... என்று பல இருக்கின்றன.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது. 
ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.

மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.

ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்) 




தர்மம் – 11 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று. அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.

இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம். 
‘ஸ்வதர்மம்’ என்பது மனசாட்சியின்பாற்பட்டது. லார்ஜர் குட் என்ற ‘பெருமளவில் நன்மை’ என்பது சமுதாயத்தின் பாற்பட்டது. இவை இரண்டுக்கும் இணக்கமாக எது அமைகிறதோ, அது தர்மம். இதுதான் என் கருத்து.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இதைச் செயலாற்ற முடியும். நமது நூல்களில் ஒற்றுமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒன்று வருகிறது :

ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானி
ஸமானம் மன: ஹை சித்தமேஷாம்
ஸமானம் மந்த்ரபி மந்த்ரேய வ:
ஸமானேன வா ஹவிஷா ஜுஹோமி.


உங்களுடைய வழிபாடு ஒத்த கருத்துடன் அமையட்டும். உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும். உங்களுடைய மனமும், எண்ணமும் ஒற்றுமையுடன் இருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பொதுவாக இந்த ஆஹுதியைக் கொண்டு, நான் வழிபாட்டை நடத்துகிறேன்.

இதில் வர்ணம் எதுவும் கிடையாது. ஒட்டு மொத்தமான சமூகத்திற்குமாகச் சேர்த்து இது கூறப்படுகிறது. ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இந்த ஒற்றுமையை மனதில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும், தனது மனசாட்சிக்கு ஏற்ப, பொது நன்மையை உத்தேசித்து செயல்பட்டால், அதுதான் தர்மமாகும் என்பது என் கருத்து.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 

Thursday, October 13, 2011

MANAMOHANA DHUSHTA KAVACHAM - மனமோகன துஷ்ட கவசம்


துக்ளக் தாண்டவராய ஸ்வாமிகள் அருளியுள்ள " மனமோகன துஷ்ட கவசம்"

அன்பு நண்பர்களே:
துக்ளக் 19 10 2011 இதழில் வெளியான
மனமோகன துஷ்ட கவசம். (கந்த
சஷ்டி கவசம் படித்தால் பயம் போகும்,
செல்வம் தழைக்கும். இந்த கவசத்தை
படிப்பதால், கோர்ட்டுக்கு போகும்போதும்,
புகார்களுக்கு பதில் சொல்லும்போதும், ஜெயிலுக்கு
போகும்போதும், ஜாமீனில் வரும்போதும், எதிர்
கட்சியினரை பார்க்கும்போதும் , ஊழல் வாதிகள்
சகல சௌபாக்கியம் பெறுவார்கள்.)

காப்பு:
ஊழல் செய்வோருக்கு வல்வனைபோம்: துன்பம்போம்:
பர்சில் பதிப்போருக்கு செல்வம் நிலைத்து
கதித்து ஓங்கும்; பதவியும் கைகூடும்: டெல்லி
அரும் மனமோகன கவசந்தனை.

குறள்:

க்வாட்ரோக்கி இடர்தீர விந்தை புரிந்த
வித்தகன் அடி, நெஞ்சே குறி.

நூல்:

துஷட்ர்களை காக்கும் பிரதமர் கனவான்
பாதக்ர்க்கு உதவும் பஞ்சாப் சிங்கம்
பாதம் இரண்டும் சோனியாவைப் பணிய,
கீதம் பாடி, அன்னை பாட்டுக்கு
தாளம் போட்டு, அறநெறி மேலோன்
வேடமணிந்து, ஊழலை காக்க உவந்து வந்து
வர வர டர்பனார் வருக வருக !!
வருக வருக வேடக்காரர் வருக வருக !

சங்கடம் தீர்க்க சடுதியில் வருக!
சரிசரி சரிசரி சரிசரி சரிசரிசரி
நீதியின் குடிகெடுத்த ஐயா வருக!

எம்மை ஆளும் சிங்கனார் கையில்
பலபல பொய்யும், பாசாங்கும்
பரந்த விழிகள் பலதை மறைக்க
விரைந்தென்னை காக்க மேலோன் வருக!

நன்னெறி வேடத் தலையில் டர்பனும்
இருசெவி கீழே தாடியும் மீசையும்
நிமிராத மார்பில் கோட்டும் பட்டனும்
திருவடிதனில் பூட்ஸும் பளிச்சிட

படபட படபட படபட படபட
தட தட தட தட தட
என்ற பாராளுமன்றப் பேச்சுகளேற்று
நாட்டை ஆளும் நாடகக்காரா!

அடியேன் ஊழலை, டர்பன் காக்க
கண்ணாடி ரெண்டும், கருப்பு பணம் காக்க
பேசும் பொய்தனை, பிராண்ட் நேம் காக்க.
தகவல் சட்டம் தாக்காமல் தாடியும் காக்க
ஸ்விஸ் பேங்க் கணக்கை, மீசை காக்க
பொருள் அனைத்தையும் பொருளாதார மேதை காக்க
பினாமி சொத்தை, பிரதமர் காக்க

காக்க காக்க கண்மூடி சாமி காக்க
நோக்க நோக்க நோபைல் நோக்க
தாக்க தாக்க தாடிக்காரர் தாக்க
பார்க்கப் பார்க்க பாவம் பொடிபட

பில்லி சூனியம் சுப்ரமணிய ஸ்வாமியும்
அல்லல் படுத்தும் அடங்கா கோர்ட்டும்
பிள்ளைகள் தின்னும் புழக்கடை சோதனையும்
கொள்ளி வாய் பேய்களும் சி.பி.ஐ.யும்

அமைச்சர்களை தொடரும் ஊழல் புகார்களும்
அடியேனைக் கண்டால் அலறி நடுங்கிட

தகவல் சட்டக்காரச் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓட

வல்லபூத வாலாழ்டிகப் பேய்கள் -
விசேஷ கோர்ட்டும் , சுப்ரீம் கோர்ட்டும்
அடியேனைக் கண்டால் அலைந்து குலைந்திட

மாற்றார் வஞ்சகர் பத்திரிக்கையாளர்களும்
டெலிவிஷன் சேனல்களும் பா.ஜா.க.ஆட்களும்
அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட

ஏமத்தில் சாமத்தில் எதிரே வந்து
என்னை துரத்தும் விசாரணை காட்டேரி
வாய்விட்டு அலறி மதிகெட்டு ஓடப்
படினியில் முட்டி, உன் பாசாங்கு பேச்சால்
கோர்ட்டுடன் சேர்ந்து கதறிக் கத்தி
கட்டி உருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட
குத்து குத்து, உன் பொய்யால் குத்து!

எல்லா வழக்கும் என்றனைக் கண்டால்
நில்லாதோட நீ எனக்கு அருள்வாய்.

எல்லா நாட்டு பேங்குகளும் எனக்கே ஆக
மனையும் மைன்களும், அனைத்தும் எனக்கே ஆக,
உன்னை துதிக்க, உன் திருநாமம்
மனமோகனே! மாசில்லா சிங்கே!
நாட்டின் பிரதமரே! பாவம் காக்கும் பவனே!

பாடினேன், ஆடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் பிரதமர் கருணை
வாழ்க வாழ்க, வேடக்காரர் வாழ்க!
வாழ்க வாழ்க, ஊழல் கேடயம் வாழ்க
வாழ்க வாழ்க , சோனியா அடிமை வாழ்க,
வாழ்க வாழ்க, நாற்காலி பித்தர் வாழ்க!

எத்தனை ஊழல்கள் அடியேன் செய்யினும்
அத்தனையிலும் உடனிருந்து காப்பது உன் கடன்!
கூட்டணி தர்மம் கண்டவன் நீ! அடியேன்
என்மீது மனமகிழ்ந்து அருள் செய்!

மனமோகன துஷ்டக் கவசந்தனை விரும்பிய
துக்ளக் தாண்டவராயன் அருளியதைக்
காலியில், மாலையில், கோர்ட்டில், ஜெயிலில் ,
கருத்துடன், நாளும் நேசமுடன்,
நினைவதை உன்முகமாக்கி
மனமோகன துஷ்ட கவ்சம்தனை
சிந்தை கலையாது தியாநிப்பவரை
மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்:

பொல்லா சுப்பி ரமணிசாமியும்
குடைச்சல் சிலந்தி சி.பி.ஐ.யும்
சொக்கு சிரங்கு குன்மம் கோர்ட்டும்
ஏறிய விழங்கள் எளிதில் இறங்கும் !

சிதம்பர ரகசியம் அறிந்தாய் போற்றி!
ப்ரனாபின் ரோஷம் தனித்தாய் போற்றி!
உட்பகை கொன்று, ஊழலை மறைத்து.
நீதியின் காதில் பூவைச் சுற்றியவனே போற்றி!

நாட்டுக்கு நஷ்டா போற்றி!
நேர்மைக்கு கஷ்டா போற்றி!
ஊழலோருக்குக் இஷ்டா போற்றி!
சட்டத்திற்கு துஷ்டா போற்றி!

திறமிகு மழுப்பல் திலகமே போற்றி!
ஊழல் காத்து வாழ்வை போற்றி!
பங்கே பெற்று விளங்குவாய் போற்றி!
போற்றி போற்றி ஊழல்பதியே போற்றி!
போற்றி போற்றி, மனமோகனார் போற்றி !!

Tuesday, September 20, 2011

Cho Ramaswamy in Coffee with Anu








Thursday, August 6, 2009

GOOD NEWS TO THUGLAK FANS

Hi all thuglak fans,

Here is a very good news for netizens. www.thuglak.com is giving free access to its archives (excluding 12 latest issues).

All you have to do is register with thuglak store.

Thanks to thuglak team and Shri.CHO in particular, for this generous gesture.

regards
Narayanan.

Thursday, July 30, 2009

Monday, July 27, 2009

Friday, July 24, 2009

Thursday, July 9, 2009

Md.Bin.Thuglak - Part 5

Thursday, June 4, 2009

Friday, May 29, 2009

MUHAMMAD BIN THUGLAK - DRAMA