Monday, October 3, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – சோ – 4
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 40

சென்ற இதழ் தொடர்ச்சி...

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள் –

தர்ம வியாதன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவன் ஒரு முனிவருக்கு தர்மம் என்றால் என்ன என்பது பற்றி உபதேசிக்கிறான்.

அந்த முனிவர் மரத்தடியில் அமர்ந்திருந்தார். மரத்தின் மீது இருந்த ஒரு கொக்கு, அவர் மீது அசிங்கம் செய்து விட்டது. அவர் கோபத்துடன் நிமிர்ந்து கொக்கைப் பார்த்தார். அது சாம்பலாகி விட்டது.

அங்கிருந்து புறப்பட்டு, ஒரு வீட்டுக்குச் சென்று அவர் பிட்சை கேட்டார். அந்த வீட்டுப் பெண்மணி, வெளியே வர நேரமாகி விட்டது. முனிவருக்குக் கோபம் வந்தது. அந்தப் பெண் வெளியே வந்தபோது, ‘என்ன செய்வேன் தெரியுமா?’ என்றார்.

அந்தப் பெண், அந்த முனிவரைப் பார்த்து ‘என்னை என்ன கொக்கு என்று நினைத்தீர்களா?’ என்று கேட்டாள்.

இவருக்கு ஒரே ஆச்சர்யம் – எங்கோ நடந்த நிகழ்ச்சி அவளுக்கு எப்படித் தெரிந்தது என்று. ‘அது எப்படி உனக்குத் தெரியும்?’ என்று கேட்கிறார்.

அந்தப் பெண்மணி ‘எனக்கு எல்லாமே தெரிகிறது. நீங்கள் கொக்கை எரித்து சாம்பலாக்கியது போல், என்னையும் செய்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள் என்பதும் புரிகிறது’ என்று கூறுகிறாள்.

அவளுக்கு எப்படி அந்த சக்தி வந்தது....?

அவளுடைய பதி பக்திதான் காரணம். கணவனுக்குப் பணிவிடை செய்வதை தனது தர்மமாக ஏற்றுக் கொண்டு, அதை விடாமல் காப்பாற்றி வந்ததால், அவளுக்கு இவ்வளவு பெரிய சிறப்பு வந்தது.

தன்னுடைய தர்மத்தை விடாமல் காப்பாற்றியதால் கிடைத்த மேன்மை இது.

‘தர்மத்தைப் பற்றி எனக்கு உபதேசம் செய்’ என்று அந்தப் பெண்மணியிடம் முனிவர் கேட்கிறார்.

அவளோ, ‘நீங்கள் என்னிடம் கேட்டுப் பயனில்லை. தர்மவியாதனிடம் சென்று கேளுங்கள்’ என்று சொல்கிறாள்.

முனிவரும் தர்மவியாதன் யார், எங்கே இருக்கிறான் என்று விசாரித்துத் தேடிச் சென்று, அவனை அடைகிறார். பார்த்தால், அவன் ஒரு கசாப்புக் கடைக்காரன். அவனிடம் முனிவர், தர்மத்தைப் பற்றிய உபதேசத்தைக் கேட்டுக் கொண்டு, ‘உனக்கு எப்படி இந்த சக்தி வந்தது’ என்று கேட்கிறார்.

அவன் ‘என் தாய் தந்தையருக்கு நான் விடாமல் சிச்ருஷை (பணிவிடை) செய்து வருகிறேன். இந்த தர்மத்தை தொடர்ந்து மனமாரக் காப்பாற்றி வந்ததால், எனக்குக் கிடைத்த உயர்வு இது’ என்று சொல்கிறான்.

பெற்றோருக்கு பணிவிடை செய்வதை தனது கடமையாக ஏற்றிருந்தான் அவன். அது அவனுடைய தர்மமாகியது.

இப்படி தர்மம் என்பதில் பலவித அம்சங்கள் இருக்கின்றன.



தர்மம் – 5 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 41

சென்ற இதழ் தொடர்ச்சி...

கேள்வி : ராமர், ஸீதையை நடத்திய விதம், எந்த தர்மத்தில் அடங்கும்? சரியான அதர்மம் இல்லையா அது?

சோ : ராமர், ஸீதையை நடத்திய விதம் தர்மமா, அதர்மமா? என்ற கேள்வி, அன்றிலிருந்து இன்று வரை விவாதிக்கப்பட்டு வருகிறது. நெருப்பிலே விழச் செய்து, அதன் பிறகும் யாரோ சொன்னதற்காக ஊரை விட்டே விரட்டி, இறுதியில் வால்மீகி முனிவரே வந்து ‘இவள் புனிதமானவள்’ என்று கூறிய பிறகும், ‘சபையினருக்காக ஒருமுறை உன்னுடைய புனிதத் தன்மையை நிரூபித்து விடு’ என்று ராமர் சொல்கிறார். அப்போதுதான் ஸீதை பூமிக்குள்ளே சென்று விடுகிறாள்.

ராமருடைய இல்லற தர்மம் என்று பார்த்தால், அவர் செய்தது அதர்மம்தான், அதில் சந்தேகமே கிடையாது. ஒரு மனைவியை இவ்வளவு கொடூரமாக நடத்தியதை தர்மம் என்று ஏற்க முடியாது – இதை ‘இல்லற தர்மம்’ என்று பார்க்கும்போது.

ஆனால் இதையே ‘ராஜ தர்மம்’ என்று அணுகினால், அது மிகவும் சிறப்பு வாய்ந்த செயலாகத் தெரிகிறது. சீஸரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும். மன்னனைப் பற்றி இப்படி ஒரு சந்தேகம் வந்து விட்டால், அதற்குப் பிறகு அந்த ராஜாங்கத்திற்கு மரியாதை கிடையாது. அந்த ஆட்சியின் அதிகாரம் எடுபடாது.

அதனால் அப்படிப்பட்ட ஒரு சிறிய சந்தேகம் கூட ஆட்சியைப் பற்றி இருக்கக் கூடாது என்பதற்காகத்தான், ஸீதை வெளியே அனுப்பப்பட்டாள். அங்கே ராஜ தர்மம் மேலோங்கி நின்றது.

இப்படி முரண்பாடாகத் தெரிகிற பல விளக்கங்கள் தர்மத்திற்கு உண்டு.

இப்போது யுத்தம் நடத்துகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள் – அது தர்மமா, அதர்மமா? ஆயிரக்கணக்கான பேரைக் கொல்கிறோம். சாத்திரத்தில் ‘அஹிம்ஸா பரமோ தர்ம:’ என்று கூறப்பட்டிருக்கிறது.

எல்லா தர்மங்களைக் காட்டிலும், உயர்ந்த தர்மம் அஹிம்ஸை. ஆனால் யுத்தம் என்றாலே ஹிம்ஸைதான். ஹிம்ஸை இல்லாத யுத்தமே கிடையாது. அது தர்மமா, அதர்மமா? நாட்டைக் காப்பாற்ற ஓர் அரசன் மேற்கொள்கிற யுத்தம் ராஜ தர்மம். ஆகையால் அது தர்மமே.

கேள்வி : தர்மம் என்பது இப்படி ஒரு சிக்கலான விஷயமாக இருக்கிறதே! என் தர்மம் ஒன்று, உங்கள் தர்மம் ஒன்று என்ற நிலை பல நேரங்களில் வரும் போல இருக்கிறதே!

சோ : வரலாம். அப்படி வரும்போது, சிக்கல் எழத்தான் செய்யும். ஒரு விளக்கம் இங்கே குறிப்பிடத்தக்கது:

ந தர்மா அதர்மௌ சரதி ஆவம் ஸ்வ இதி
ந தேவ கந்தர்வோ ந பித்ருபி:
இத்யாசக்ஷதேயம் தர்மோ அயம் அதர்ம இதி
யத்யார்யா க்ரியமாணம் ப்ரசம்ஸந்தி ஸதர்மோ
யத்தர்ஹந்தே ஸ அதர்ம:
இது ‘ஆபஸ்தம்ப சூத்திரத்தில்’ வருவது.
ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது –

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்



தர்மம் – சோ – 6
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் - 42

சென்ற இதழ் தொடர்ச்சி...

ஆபஸ்தம்ப சூத்திரம் சொல்வது – ‘நான்தான் தர்மம், இதோ நான்தான் அதர்மம் என்று அவை இரண்டும் தங்களை அடையாளம் காட்டிக் கொண்டு நம் முன்னே வந்து அலைவதில்லை; தேவர்களோ, கந்தர்வர்களோ, பித்ருக்களோ தோன்றி இது தர்மம், இது அதர்மம் என்று கூறுவதில்லை. பெரியவர்கள் எதை ஏற்கிறார்களோ, அது தர்மம். அவர்கள் எதை நிராகரிக்கிறார்களோ, அது அதர்மம்’.

இதில் நமக்கென்ன பிரச்சனை என்றால் – நம்மிடையே பெரியவர்கள் யார் என்பதே நமக்குப் புரிவதில்லை. இன்றைய சமூகத்தில் பெரியவர்களைக் காணோம்.

ஒருவனைக் கொலை செய்வது என்பது கூடாது. அது அதர்மம். அதுவும் ஓர் ஆச்சார்யனை, அதாவது குருவாக இருந்தவரைக் கொலை செய்வது என்பது மிகப் பெரிய பாதகம். இதற்கு தண்டனை உண்டு என்பது மட்டுமல்ல, அந்த பாவத்திற்கு பிராயச்சித்தம் கிடையாது. அதிலிருந்து விமோசனம் கிடையாது. வயோதிகர்களைக் கொல்லக் கூடாது.

இவையெல்லாம் அதர்மமான காரியங்கள். ஆனால் இந்த விதிமுறைக்கு விதிவிலக்கும் இருக்கிறது. அது ‘மனுஸ்ம்ருதி’யில் கூறப்பட்டிருக்கிறது.

குரும்வா பாலவ்ருத்தௌ வா
ப்ராம்ஹணம் வா பஹுச்ருதம்
ஆததாயினமாயாந்தம்
ஹன்யாத் ஏவ அவிசாரயன்

‘குருவாக இருந்தாலும் சரி, இளைஞனாக இருந்தாலும் சரி, வயோதிகனாக இருந்தாலும் சரி, நன்றாக வேதங்களை ஓதிய பிராமணனாக இருந்தாலும் சரி, அவன் கெட்ட நோக்கத்துடன் எதிர்த்து வந்தால், சிறிதும் கவலைப்படாமல் அவனைக் கொன்று விடு’.

– இவ்வாறு மனுஸ்ம்ருதி கூறுகிறது. இவ்வாறாக கொலை செய்யக் கூடாது என்பதற்கு, அங்கே விதிவிலக்கு கிடைக்கிறது. அந்த மாதிரி கொலை, ‘அதர்மம்’ ஆகாது!

இப்படி பல நேரங்களுக்குரிய தர்மம் எது என்று கூறப்பட்டுள்ளதையும், அவற்றிற்கான விதிவிலக்குகளையும், பார்க்கும்போது ஒன்று தெளிவாகிறது. எது ‘லார்ஜர் குட்’ – ஜன சமூகத்திற்கு எது நல்லதோ, நிறைய மனிதர்களுக்கு எது நல்லதோ – அதுதான் இறுதியில் தர்மமாகும்.

என்னுடைய தர்மம் என்று ஒன்றை நான் சொல்லிக் கொண்டு, சமூகத்திற்கே அதனால் இடைஞ்சல் வருகிற மாதிரி நான் நடந்து கொண்டால், அது அதர்மமாகி விடும்.

இப்படி லார்ஜர் குட் – பெருமளவில் நன்மை – என்பதன் அடிப்படையில்தான் ‘விதுர நீதி’யில் ஓர் அறிவுரை கூறப்பட்டிருக்கிறது.

த்யஜேத் குலார்த்தே புருஷம்
க்ராமஸ்யார்த்தே குலம் த்யஜேத்
க்ராமம் ஜனபதாஸ்யார்த்தே
ஆத்மார்த்தே ப்ருத்வீம் த்யஜேத். 



தர்மம் – 7 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 43

சென்ற இதழ் தொடர்ச்சி...

விதுர நீதி சொல்வது –

‘ஒரு குடும்பம் அல்லது குலத்திற்காக ஒரு மனிதனை தியாகம் செய்து விடலாம்; ஒரு கிராமத்திற்காக ஒரு குலத்தை தியாகம் செய்யலாம்; நாட்டிற்காக ஒரு கிராமத்தை தியாகம் செய்யலாம்; தனக்காக உலகத்தையே தியாகம் செய்யலாம்’.

தனக்காக என்றால் தன் ஆத்மாவிற்காக. நீ கடைத்தேற வேண்டும் என்றால், உலகத்தையே தியாகம் செய்து விட நீ தயாராக இருக்க வேண்டும்.

இதோடு இணைந்தவாறே இன்னொரு தத்துவத்தையும் பார்க்க வேண்டும். இப்படி பெருவாரியான நன்மை என்பது ஓர் அம்சம்.

மற்றொரு அம்சம் ‘ஸ்வதர்மம்’. பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மாவினால் மிகவும் வலியுறுத்தப்படுவது இந்த ஸ்வதர்மம். ஸ்வதர்மம் என்றால் உடனே அது ஒரு ஜாதிக்குரிய தர்மம் என்றோ, அது ஒரு குலத்திற்கான தர்மம் என்றோ, அது ஒரு வர்ணத்திற்கான தர்மம் என்றோ எடுத்துக் கொண்டு விடக் கூடாது.

கேள்வி : பின் ஸ்வதர்மம் – தன்னுடைய தர்மம் – என்றால் என்ன? அதற்கு என்ன விளக்கம் கூறப்பட்டிருக்கிறது?

சோ : குல தர்மம், வர்ண தர்மம் இவையெல்லாம் வேறு இடங்களில், வேறு வகையில் கூறப்படுகின்றன. ஆகையால், ஸ்வதர்மம் என்பது இவற்றிலிருந்து மாறுபட்டது. ஒரு மனிதனின் மனசாட்சி, அவனிடம் என்ன கூறுகிறதோ, அதுதான் ஸ்வதர்மம் என்று கூறிவிடலாம்.

ஆனால் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளக் கூடாது. நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்ளாமல், ஒரு விஷயத்தை ஆராயும்போது, இதுதான் சரி என்று நமக்கு எது படுகிறதோ அதுதான் நமது தர்மம். அதுதான் ஸ்வதர்மம். இதை நேர்மையாக நிச்சயித்துக் கொள்ள ஒரு மனிதன் முற்படுகிறபோதுதான், தனி மனிதனுடைய தீர்மானத்திற்கு முக்கியத்துவம் கிடைக்கிறது.

மொரார்ஜி ஒருமுறை என்னிடம் கூறினார்: “எந்த விஷயத்தையுமே முழுமையாக, நன்றாக ஆலோசனை செய்து பார். உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ளாமல், அந்த ஆராய்ச்சி அமைய வேண்டும். அப்படி ஆராய்ந்த பின் இதுதான் சரி என்று உன் மனதிற்கு எது படுகிறதோ, அதைச் செய். உலகமே எதிர்த்தாலும் அதுபற்றிக் கவலைப்படாதே” என்றார்.

நான் அறிந்த வரையில் இதுதான் ஸ்வதர்மம். நாம் நியாயத்தைத்தான் செய்கிறோம் – இதனால் பெருவாரியான நன்மைதான் விளையும் – நாம் நமது மனசாட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ளவில்லை – என்று எந்த அணுகுமுறை நமக்கு உணர்வூட்டுகிறதோ, அந்த அணுகுமுறைதான் ஸ்வதர்மம். கெட்ட நோக்கம் இருந்தால், அது தர்மமாகாது. சகுனி சூதாடினான். சூதாடுவது கேவலமான விஷயம். சாஸ்திர விரோதமானது. தர்மபுத்திரர் இதைச் சுட்டிக் காட்டினார்.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்)