Thursday, March 28, 2013

துக்ளக் கேள்வி பதில்கள்

துக்ளக் கேள்வி பதில்கள் 

கே : இலங்கைப் பிரச்னையில், இப்போது மாணவர்களும் இணைந்து கொள்வது பற்றி?

ப : இதனால் இலங்கைத் தமிழர்களுக்கு நல்லது எதுவும் நடந்து விடாது. ஆனால் இங்குள்ள மாணவர்களின் எதிர்காலத்திற்கு இது தீமை செய்யும். இந்த மாதிரி போராட்டங்கள் சாதிக்கப் போவது இவ்வளவுதான்.



கே : டெஸோ அமைப்பு வலிமை பெற வாய்ப்புண்டா?


ப : தி.மு.க.வைத் தவிர வேறு எந்தக் கட்சியும் இதில் அக்கறை காட்டவில்லை. தேர்தல் ஓட்டுக்காகவே கூட மற்ற பல கட்சிகளின் கூட்டணியை நாட வேண்டிய நிலையில் உள்ள தி.மு.க., இந்த தனி டெஸோவிற்கு என்ன வலிமையைச் சேர்க்கப் போகிறது? முதல் டெஸோ மறைந்தது போல, இரண்டாம் டெஸோவும் நாளடைவில் மறைந்து போகும்.



கே : இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சரத் ஃபொன்சேகா தனிக் கட்சி துவங்கியுள்ளாரே! ஜெயிப்பாரா?

ப : ஜெயிக்க மாட்டார். ஏதாவது ஒரு சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ள கட்சியைக் கொஞ்சம் சங்கடத்தில் ஆழ்த்துவாரோ, என்னவோ! அதற்கு மேல் அவருக்குப் பலம் கிட்டும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை.



கே : இலங்கைப் போர்க் குற்றங்கள் மீது சர்வதேச விசாரணை கோருவது தொடர்பாக, இந்தியா ஏன் இத்தனை தயக்கம் காட்டுகிறது?

ப : இலங்கை விரோதி நாடு அல்ல; அந்த நாட்டுடன் இந்தியாவிற்கு தொழில் ரீதியாக, வர்த்தக ரீதியாக உறவுகள் இருக்கின்றன; அங்குள்ள தமிழர்கள் சிங்களர்களுடன் சம உரிமை பெறுவதற்கு வழி இந்திய – இலங்கை விரோதம் அல்ல; இன்று இலங்கைக்கு நாம் செய்வதை, நாளை காஷ்மீர் தொடர்பாக நமக்குச் செய்ய பாகிஸ்தான் முனையும்.... என்பது போன்ற பல காரணங்களினால்தான், இந்தியா இவ்விஷயத்தை ஜாக்கிரதை உணர்வுடன் அணுகுகிறது.



கே : ‘தலைவர் கலைஞர் நடத்தும் போராட்டங்களை அரசியல் தந்திரம் என்று கூறுவது வருந்தத்தக்கது’ – என்கிறாரே கனிமொழி எம்.பி.?


ப : நியாயம்தானே! கலைஞரின் நடவடிக்கைகளை ‘அரசியல்’ என்று கூறலாமே தவிர, ‘தந்திரம்’ என்று எப்படிக் கூறுவது? தந்திரம் என்றால், அதைச் செய்பவர்களுக்கு அது உதவ வேண்டுமே? அவருடைய அரசியல் நடவடிக்கைகள் அவருக்கோ, அவருடைய கட்சிக்கோ உதவுகிற மாதிரியா இருக்கின்றன? அதைத்தான் கனிமொழி சுட்டிக்காட்டியிருக்கிறார்.



கே : இலங்கைத் தமிழர் பிரச்னையில், மத்திய அரசின் நிலையைத் தாங்கள் ஆதரிக்கிறீர்களா?

ப : அநேகமாக.



கே : சுப்ரமண்யம் ஸ்வாமி இலங்கையில் அதிபர் ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேசியது சரியா, தவறா?

ப : ஒரு நட்பு நாட்டின் அதிபரை, இங்குள்ள ஒரு அரசியல்வாதி சந்திப்பதால் ஒரு தவறுமில்லை.



கே : ‘இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால், அதன் விளைவாக பெரிதும் பாதிக்கப்படப் போவது இலங்கைத் தமிழர்கள்தான். அவர்களுக்கு நாம் தொடர்ந்து வழங்கி வரும் உதவிகளை வழங்க முடியாத நிலையும் ஏற்படும்’ – என்கிறாரே ஞானதேசிகன்! இது மிரட்டல்தானே?

ப : இதில் என்ன மிரட்டல் இருக்கிறது? ஞானதேசிகன் ஒரு நடைமுறை உண்மையைச் சுட்டிக் காட்டியிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்கு நன்மை செய்வதாக நினைத்துக் கொண்டு, அவர்களுக்கு நாம் பிரச்னைகளை உருவாக்கி விடக் கூடாது என்கிற பொருளில் அவர் பேசியிருப்பதில் தவறு காண்பது சரியல்ல. 

கே : காவிரிப் பிரச்னையிலும், இலங்கைப் பிரச்னையிலும் கலைஞர் குழப்பியது போல், வேறு எந்த அரசியல் தலைவரும் குழப்பியது உண்டா! இப்படிக் குழப்புவதற்கு காரணம் என்ன...?

ப : குழப்புவது என்பது மற்ற பலருக்கு ஒரு தவறு; வேறு வழியில்லாமல் நிகழ்ந்து விடுவது. கலைஞருக்கு அது ஒரு கலை; அவர் பாடுபட்டுக் கற்று வந்தது அது. இடைவிடாத பயிற்சியின் மூலம் அந்தக் கலையில் அவர் வெகுதூரம் முன்னேறி விட்டார்.



கே : மார்ச் 12-ஆம் தேதியன்று டெஸோ போராட்டத்தில் பங்கேற்ற திருச்சி தி.மு.க.வினர் கைகளில் இருந்த பேனர்களில், பிரபாகரன் மகனின் பெயர் ‘பாலகிருஷ்ணன்’ என்று படு அபத்தமாக அச்சிடப்பட்டிருந்தது பற்றி? (தினமலர் 13.3.13 புகைப்படத்துடன் செய்தி)

ப : போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்ற அவசியம், நமது நாட்டு அரசியல் போராட்டங்களில் கிடையாது.



கே : ‘டெஸோ சார்பில் ஈழத் தமிழர் நலன்களுக்காக நடத்தப்பட்ட பொதுவேலை நிறுத்தம், பிரமாதமான வெற்றி அடைந்துள்ளது’ – என்று கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளது பற்றி?


ப : படுதோல்வியையே, வெற்றி என்று கருதுகிற பக்குவத்தை அவர் அடைந்திருப்பது பாராட்டத்தக்கது. இதே மாதிரி மகிழ்ச்சியை பாராளுமன்றத் தேர்தலிலும் தி.மு.க. பெறட்டும். அது தமிழகத்திற்கும், நாட்டிற்கும் நல்லது.