Friday, December 26, 2014

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)

இதுதான் ‘துக்ளக்’கின் தர்மம்! (திரும்பிப் பார்க்கிறோம் – 21)
துக்ளக் பத்திரிகையின் தர்மம் என்ன என்பது பற்றி, அதன் ஆசிரியன் என்ற முறையில் நான் எழுதுவதற்கு இது சரியான நேரம்தான் என்று நினைக்கிறேன். ஆகையால் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
துக்ளக் பத்திரிகையில் நான் மனம் போன போக்கில் எழுதுகிறேன் என்று சிலர் சொல்வதை, நான் ஒரு பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். மற்றவர்கள் மனம் போகும் போக்கில் எல்லாம் எழுதி, அவரவர் மனமாற்றங்களுக்குத் தக்கவாறு மாறும் தர்மம் அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம். காற்றடிக்கும் திசையில் எல்லாம் பறக்கும் தூசியாகத் திகழுவது அல்ல துக்ளக்கின் பத்திரிகை தர்மம்.
என் மனம் போன போக்கில் நான் எழுதுகிறேன் என்றால், ஏனோ தானோ என்ற போக்கில் அல்ல. மனம் என்பதற்கு, ‘மைன்ட்’ என்ற அர்த்தமும் உண்டு என்பதை வைத்துக் கொண்டு பார்த்தால், அதில் அறிவுபூர்வமான அணுகுமுறையும் அடக்கமாகிறது. பல பிரச்னைகளைப் பற்றி என் மனம், என் அறிவு என்ன நினைக்கிறதோ அந்த நோக்கில் எழுதுவதைத்தான் ‘மனம்போன போக்கில் எழுதுகிறான்’ என்று மற்றவர்கள் குறிப்பிடுவதாக எடுத்துக் கொண்டு மகிழ்கிறேன்.
...எதிர்த்து வரும் வாதங்களிலும், கேட்டுக் கொள்ள வேண்டியவை இருக்கலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.
அது ஒருபுறமிருக்கட்டும். ‘பல விஷயங்களில் துக்ளக்கின் கருத்து என்ன?’ என்று கேட்டுக் கடிதங்கள் அன்றாடம் வந்த வண்ணம் இருக்கின்றன. ‘இதைப் பற்றி ஏன் எழுதவில்லை?.... அதைப் பற்றி என்ன கருத்து?... இதற்கு ஒரு விளக்கம் கொடுக்கக்கூடாதா?’ என்றெல்லாம் பல வாசகர்கள் அவ்வப்பொழுது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அப்படி எழுதுபவர்கள் எல்லோருக்குமாகச் சேர்த்து, ஒரு சில விஷயங்களை மேலெழுந்த வாரியாகக் கூறுகிறேன். துக்ளக்கின் போக்கையும், துக்ளக்கில் இடம் பெறுபவை, இடம் பெறாதவை பற்றியும் மேலும் முழுமையாகப் புரிந்து கொள்ள இது உதவும் என்று நம்புகிறேன்.
பலருடைய பொதுவாழ்வுப் பிரச்னைகளைக் கிண்டல் செய்து, கண்டித்து, விமர்சித்துள்ள நான், எந்த ஒரு தனி மனிதருடைய தனி வாழ்வையும், எள்ளளவும் கூட விமர்சித்ததே கிடையாது. இது ஒரு கௌரவம்.
குறை கூற எனக்கு வக்கு இருக்கும்போதுதான் குணத்தைக் கூற என் பேனா தானாகவே இயங்க ஆரம்பிக்கிறது. இது ஒரு விளக்கம்.
வீழ்ந்த நிலையில் இருக்கும் ஒருவனைப் பார்த்து, அவன் பதில் சொல்ல முடியாத விஷயத்தைக் கூறி வாய்ச் சவடால் அடிப்பது என் பழக்கமல்ல. இது ஒரு வியாக்கியானம்.
வளரும் தீமைகளைக் கண்டிக்க வாய்ப்பிருந்தால் கண்டிக்கத் தவறி விடுவது, மடத்தனம் என்று நினைக்கிறேன். இது ஒரு வாதம்.
சில தீமைகளைச் சுட்டிக் காண்பிக்க முடியாமல் போனாலும் – அம்மாதிரி தீமைகளை ஆதரிக்காமலாவது இருக்கிறேன். இது ஒரு திருப்தி.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட அச்சங்கள் எத்தனை மெய்த்து விட்டன?’ என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் பெருமையில்லை, வருத்தம்தான்.
‘துக்ளக்கில் தெரிவிக்கப்பட்ட விருப்பங்கள் எத்தனை இன்னமும் ஈடேறாமல் இருக்கின்றன?’ என்றும் எண்ணிப் பார்க்கிறேன். இதில் அவமானம் இல்லை. வேதனைதான்.
எது எப்படி இருந்தாலும் லாபத்திற்காகவோ, அச்சத்தினாலோ எதையும் நான் எழுதியதே கிடையாது. இதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என்னைவிட எல்லா வகையிலும் பல மடங்கு உயர்ந்ததாக துக்ளக் இருக்கிறது. இது ஒரு சாதனை.
துக்ளக்கின் வாசகர்களில் பலர் துக்ளக்கை முழுமையாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு அதிர்ஷ்டம் மட்டுமல்ல, பலமும் கூட.
என்றென்றும் ஆசிரியனை விட பத்திரிகை உயர்ந்ததாகவும், வாசகர்களின் எண்ணிக்கையை விட அவர்களுடைய அறிவு அதிகமானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு நல்லெண்ணம்.
என்னைப் பொறுத்தவரை, துக்ளக்கின் தர்மங்களைச் சுருக்கமாகச் சொல்லப் போனால் இப்படித்தான் சொல்ல முடியும்.
நல்ல முயற்சிகள் உடனடியாகப் பலனிக்காமல் போனாலும், நாளாவட்டத்தில் வெற்றி கண்டே தீரும். இப்படிச் சொல்லும்போது நம்பிக்கையை விட, ஆசையே அதிமாக இருக்கிறது.
- சோ
– (15.10.76 துக்ளக் தலையங்கத்திலிருந்து..)

Friday, September 26, 2014

கேள்வி – பதில்
*********************
கே: ‘ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிப்போம்’ என்று அதிபர் ஒபாமா சபதம் போட்டுள்ளாரே? இது சாத்தியம் என்று எண்ணுகிறீர்களா?
ப: இது சாத்தியமானதுதான் என்று, இந்த விவகாரத்தை நன்கு புரிந்து கொண்ட சில அயல்நாட்டு விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், இந்த ஐ.எஸ்.ஐ.எஸ். இப்படிப் பலம் பெற்று திகழ்வதற்கான காரணங்களில் அமெரிக்காவும் ஒன்று. ஸிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கு எதிராக ‘மக்கள் கலகம்’ தோன்றியபோது, இந்தத் தீவிரவாதிகள் அதில் கலந்து கொள்ள, அப்போது ஸிரியா அதிபரை எதிர்த்த அமெரிக்கா, இவர்களுக்கு உதவிகள் செய்தது. அதனுடைய பலன் அமெரிக்காவை மட்டுமல்ல, பல்வேறு நாடுகளை இன்று அச்சுறுத்துகிறது. தீவிரவாதத்தை ஊக்குவிப்பது இப்படித்தான் போய் முடிகிறது.
 பிந்தரன் வாலேயை இந்திரா காந்தி தூண்டி விட்டார் – அந்தப் பிந்தரன் வாலே ஆதரவாளர்களாலேயே அவர் கொலை செய்யப்பட்டார். விடுதலைப் புலிகளுக்கு இந்திய அரசு பல வகைகளில் உதவியது – ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்டார். தீவிரவாதத்தை யாருக்கு எதிரானது என்று பார்க்காமல், அந்தக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் எல்லா நாடுகளும் இயங்க வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவு காண வழி பிறக்கும்.

Tuesday, August 12, 2014

ஆவணி அவிட்டம் என்பது என்ன?

கேள்வி : இந்த ஆவணி அவிட்டம் என்பது என்ன? பழைய பூணூலை கழற்றி விட்டு, புதிய பூணூலைப் போட்டுக் கொள்ள ஒரு தினம். அதுதானே ஆவணி அவிட்டம் என்பது? அதாவது பூணூலை மாற்றுகிற தினம்தானே அது?
சோ : நீங்கள் சொல்கிற மாதிரிதான் இப்போது ஆகிவிட்டது. ஆனால், ஆவணி அவிட்டம் என்பது அதுவல்ல. ஆவணி அவிட்டம் என்று சொல்லப்படுகிற சடங்கின் உண்மையான பெயர் உபாகர்மா. உபாகர்மா என்றால் ஆரம்பம் என்று அர்த்தம். ச்ராவண மாதத்தில் பிரம்மதேவனுக்கு வேதம் கிட்டியது; அதாவது உபதேசம் ஆகியது. அந்த தினம், ஆவணி மாதம், அவிட்ட நக்ஷத்திரம். அதனால்தான் இதற்கு ‘ஆவணி அவிட்டம்’ என்ற பெயரும் வந்தது. அப்போது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதால், அவனுக்கு அது ஆரம்பம் ஆகியது. அந்த ஆரம்பத்தை இங்கே மனிதர்கள் கொண்டாடுகிறார்கள். இது வருடா வருடம் செய்யப்படுகிறபோது, வேதத்திற்குச் செய்யப்படுகிற மரியாதையாக இது கருதப்படுகிறது.
வேதத்திற்கு ஆண்டு விழா என்றும் இதைச் சொல்லலாம். ப்ரம்ம தேவனுக்கு உபதேசமாகிய தினம்; அதிலிருந்து வழி வழியாக மனிதர்களுக்குக் கிடைத்தது. அதனால் ஒவ்வொரு வருடமும் அந்த தினத்தைக் கொண்டாடுகிறோம். அது ஆண்டு விழா.
கேள்வி : ஆரம்பம் என்று சொன்னீர்கள். அது என்றோ ஆரம்பமாகி விட்டது. திரும்பவும் ஒவ்வொரு வருடமும் அதைப் புதிதாக ஆரம்பிப்பானேன்? அது எதற்கு? இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயமாக இல்லையே?
சோ : இது பகுத்தறிவுக்கு ஏற்ற விஷயம் இல்லை என்கிறீர்கள்; சரி, இருக்கட்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்காக – உறுதிமொழி, பிரமாணம் என்று வருடா வருடம் எல்லோரும் எடுத்துக் கொள்கிறார்கள். ‘போன வருடம்தான் இந்த உறுதிமொழி, பிரமாணம் எல்லாம் எடுத்தாகி விட்டதே! அதே தேசம்தான் இருக்கிறது; அதே பிரமாணம்தான் இது. அதை எதற்கு இன்னொரு முறை செய்ய வேண்டும்? தேசம் போய் விட்டதா? அல்லது பிரமாணம்தான் தீர்ந்து விட்டதா? அந்த பிரமாணத்திற்கு ஒரு வருடம்தான் ஆயுளா? ஏன் இதை திரும்பவும் வருடா வருடம் செய்ய வேண்டும்? ஏன்? அந்தப் பிரமாணம் ஆறு மாதத்திலேயே தீர்ந்து போகாதா? அல்லது மூன்று மாதத்தில் தீர்ந்து போகாதா? அல்லது தினம் தினம் அந்த பிரமாணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாதா? ஏன், இப்படி வருடத்திற்கு ஒருமுறை?’ என்றும் கேட்கலாம். ஆனால், அப்படி யாரும் கேட்பதில்லை. அது எப்படி பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கிறதோ, அதே மாதிரிதான் இதுவும்.
தேசம் என்கிற சிந்தனை, ஒருமைப்பாடு என்கிற சிந்தனை ஆகியவற்றை நமக்கு நாமே நினைவூட்டிக் கொள்கிறோம். அதற்காக இதைச் செய்கிறோம். அதே மாதிரிதான் இந்த உபாகர்மாவும். இந்த சிந்தனை, வேதம் எவ்வளவு உயர்வானது என்பது பற்றியது. ப்ரம்ம தேவனுக்குக் கிடைத்த தினம் பற்றியது. அங்கிருந்து நமக்கு அது கிடைத்தது என்ற விஷயம் பற்றியது. அந்த மாதம், அந்தத் தேதியில் – அதாவது ஆவணி மாதம் அவிட்ட நக்ஷத்திரத்தில் நாம் இதையெல்லாம் நினைத்துக் கொள்கிறோம். சொல்லப் போனால், இது தேசிய ஒருமைப்பாட்டு பிரமாணத்தை விட, பகுத்தறிவுக்கு உகந்த விஷயம்.
ஏனென்றால், தேசம் என்பது, என்றோ உண்டாகி விட்டது. ஒருமைப்பாடு என்பதும் என்றோ உண்டாகி விட்டது. ஆனால், தேசம் பிறந்த நேரத்திலோ, ஒருமைப்பாடு உண்டான சமயத்திலோ, இந்த பிரமாணத்தை நாம் எடுத்துக் கொள்வதில்லை. இந்த உபகர்மாவை எடுத்துக் கொண்டால் பிரம்மனுக்கு அது எப்போது உபதேசமாகியதோ, எப்பொழுது பிரம்மனுக்கு வேதம் கிட்டியதோ, அந்த மாதம், அந்த தினம் எது என்று பார்த்து, அந்த தினத்தில் நாம் இங்கே அந்தச் சடங்கைச் செய்கிறோம். அன்று நமக்கு வேதம் பயில்வது மீண்டும் ஆரம்பம்.இது பிராமணர்களுக்கு மட்டும் விதிக்கப்பட்ட விஷயம் என்று நினைத்து விடக்கூடாது. உபநயனம் என்பது முதல் மூன்று வர்ணத்தாருக்கும் உண்டு. அதாவது பிராமண, க்ஷத்ரிய, வைசிய வர்ணங்களைச் சார்ந்தவர்களுக்கு உபநயனம் உண்டு. அவர்கள் மூவருமே வருடா வருடம் இந்த ‘ஆவணி அவிட்டம்’ என்கிற உபாகர்மாவைச் செய்ய வேண்டும். இதை வெறும் பூணூலை மாற்றிக் கொள்கிற விஷயமாகக் கருதி விடாமல், வேதம் நமக்குக் கிட்டியதை கொண்டாடுகிற தினம் என்று நாம் கருத வேண்டும்.
– தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்