Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்


1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2. 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராஜாஜியுடன் ஈ.வே.ரா. பேசிய ரகசியம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 10

ராம.அரங்கண்ணல் கழகங்களில் ஒரு மூத்த உறுப்பினர். கருணாநிதி ஒரு பேச்சாளராக மட்டும் இருந்த காலத்திலேயே, அரங்கண்ணல் ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்தார். பிறகு ‘விடுதலை’ நாளிதழில் சேர்ந்து பணியாற்றினார்.

ஆரம்ப காலத்தில் அரங்கண்ணலுக்கு, அண்ணாதுரை மீது பற்றுக் கிடையாது. தமது நிலை சிறிது சிறிதாக மாறியதை, அவரே பின்னர் ‘திராவிடன்’ இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒப்புக் கொண்டார். (26.9.1956)

அரங்கண்ணல் ‘குடியரசு’ அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, குடந்தை நகரில் திராவிடர் கழக உறுப்பினர்களின் கருப்புச் சட்டை மாநாடு நடந்தது. அதில் ஈ.வெ.ரா., அண்ணாதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். மாநாட்டுக்குப் போய்விட்டு ஈ.வெ.ரா. திரும்பினார். மாநாடு எவ்வாறு நடந்தது என்று அரங்கண்ணல் ஆர்வத்துடன் விசாரித்தார்.

“பெரியார் சொன்ன முதல் வார்த்தையே, ‘நல்லா திட்டிப்போட்டேனுங்க! குள்ள நரிப்பசங்க...ன்னு சொல்லிப் போட்டேன். பின்னே என்னாங்க, ஏன் கருப்புச் சட்டை போடாமே, இந்த அண்ணாதுரை, சின்னதம்பியெல்லாம் மேடைக்கு வரணும்?’ என்பதுதான்” என்று அரங்கண்ணல் எழுதியிருக்கிறார்.

அந்நாட்களில் திராவிடர் கழக உறுப்பினர்கள் எல்லோரும் கருப்புச் சட்டை அணிய வேண்டும் என்று ஈ.வெ.ரா. ஆணையிட்டிருந்தார். தம்மால் கருப்புச் சட்டை அணிய இயலாது என்று அண்ணாதுரை அந்த ஆணை வெளியானதுமே மறுத்து விட்டார். அவரைப் பின்பற்றி நெடுஞ்செழியன் முதலியவர்களும் கருப்புச் சட்டை போட மறுத்தார்கள்.

குடந்தை மாநாட்டில் அண்ணாதுரை கருப்புச் சட்டை போடாமல் மேடைக்கு வந்தார். ஈ.வெ.ரா.வுக்கு மிகுந்த கோபம் உண்டாயிற்று. மேடையிலேயே அண்ணாதுரையையும், மற்றவர்களையும் கடுமையாக ஏசிப் பேசிவிட்டார். தாம் அவ்வாறு செய்ததையே அரங்கண்ணலிடம் ஈ.வெ.ரா. தெரிவித்தார். 
அண்ணாதுரையின் பெயரை ‘அண்ணாதுரை, சின்னத்தம்பி’ என்று கூறி ஈ.வெ.ரா. கிண்டல் செய்ததைக் கவனிக்க வேண்டும்!

ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ அலுவலகத்தில் ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு அமைந்ததால், அவரைப் பற்றி நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்று அரங்கண்ணல் குறிப்பிட்டு இருக்கிறார்.

அப்போது சென்னையில் மே தின விழா நடந்தது. அதில் அண்ணாதுரை கலந்து கொண்டு பேசினார். அவரது அந்த உரையை என்.வி.நடராசன் அப்படியே எழுதி எடுத்துக் கொண்டு வந்தார். அதை, ஈ.வெ.ரா.வுக்குத் தெரியாமல் ‘விடுதலை’ நாளிதழில், ஒரு பிரமாதமான தலைப்பிட்டு அரங்கண்ணல் பிரசுரித்து விட்டார். அண்ணாதுரையின் உருவம் அடங்கிய ‘பிளாக்’கை ‘போர்வாள்’ அலுவலகத்திலிருந்து இரவலாக வாங்கி, கட்டுரையுடன் சேர்த்து வெளியிட்டு விட்டார்கள்.

மறுநாள் அலுவலகத்திற்கு ஈ.வெ.ரா. வந்ததும், அண்ணாதுரையின் சொற்பொழிவு பிரசுரமான இதழைப் பார்த்துப் பெருங்கோபம் கொண்டார். “பெருமாள் சோத்தைத் தின்றுவிட்டு, பெருமாளுக்குத் துரோகம் செய்கின்றான்க!” என்று அரங்கண்ணலையும், விடுதலை அலுவலகத்தில் பணிபுரிந்த பூ.கணேசன் என்பவரையும் குறிப்பிட்டு ஈ.வெ.ரா. கொதிப்புடன் கூறினார்.

ஈ.வெ.ரா.வின் அறிக்கை


ந்தச் சொல் உள்ளபடியே, என் மனத்திலும், நண்பர் கணேசு மனத்திலும் ஆழப் பதிந்தது! நாங்கள் ஒன்றும் சோற்றுக்கு வீங்கிப் போய் ‘விடுதலை’க்குப் போகவில்லை! விவரம் அறிந்தவர்களுக்குத் தெரியும், எங்களுடைய இல்லத்திலே தினசரி எத்தனை பேருக்குச் சோறு கிடைக்கிறது என்று. ஐயா(ஈ.வெ.ரா.) சொன்ன அந்த வாசகம், பெரியாருடைய மனத்தில், ‘தான்’ இருக்கிறதே ஒழிய ‘கழகம்’ இல்லை என்கிற உண்மையை உணர்த்திற்று” என்று அரங்கண்ணல் குறிப்பிட்டிருக்கிறார்.

“அண்ணாதுரை, பாரதிதாசன் ஆகியோர் மீது ஈ.வெ.ரா.வுக்கு ஓர் எரிச்சல் ஏற்பட்டு மிகப் பெரிதாக வளர்ந்து கொண்டிருந்தது” என்றும், “ஈ.வெ.ரா. கழகத்தைப் பொதுச் சொத்தாகக் கருதாமல், அதையும் ஒரு ஜமீன் போல எண்ணினார் என்பது மட்டும் என் போன்றோர்க்குத் தெளிவாகத் தெரிந்தது” என்றும் அரங்கண்ணல், தமது கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். 
திராவிடர் கழகத்தில் இராம. அரங்கண்ணல் போன்றோர் மெல்ல மெல்ல ஈ.வெ.ரா.விடமிருந்து விலகி, அண்ணாதுரையை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ அலுவலக நிர்வாகியாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சி நடந்தது. அப்போது மாவூர் சர்மா என்பவரின் தோட்டத்தில் பயிற்சி முகாம் நடத்திக் கொண்டிருந்த ஈ.வெ.ரா., ‘விடுதலை’யில் பிரசுரிப்பதற்காக ஒரு செய்தியைச் சம்பத்திற்கு அனுப்பினார்.

திராவிடர் கழகத்தில் இருந்த அழகிரி 28.3.1949 அன்று மரணம் அடைந்தார். அவர் மறைந்த சில நாட்களுக்குப் பிறகு தஞ்சை கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் மாணவர்கள் மாநாடு ஒன்று நடந்தது. அதில் க.அன்பழகன், ஜனார்த்தனம், கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். ‘அழகிரியின் கடைசிக் காலத்தில் திராவிடர் கழகமும், ஈ.வெ.ரா.வும் அவரைச் சரிவரக் கவனிக்காமல் விட்டு விட்டார்கள்’ என்று அன்பழகனும், கருணாநிதியும் பேசினார்கள் என்ற தகவல் மாவூரில் இருந்த ஈ.வெ.ரா.வை எட்டியது.

“அன்பழகனையும் கருணாநிதியையும், திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் இனிமேல் கூட்டங்களுக்கு அழைக்கக் கூடாது” என்று ஓர் அறிக்கையைத் தயாரித்து, அதை ஒரு செய்தியாக வெளியிடுமாறு சம்பத்திற்கு ஈ.வெ.ரா. அனுப்பியிருந்தார். அந்தச் செய்தியை வெளியிட்டால் அன்பழகன், கருணாநிதி ஆகியோரின் பொதுவாழ்வு பாதிக்கப்படும் என்று கருதிய சம்பத், அது குறித்து ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமியுடன் பேசினார். பிறகு அண்ணாதுரைக்கு டெலிஃபோன் செய்து, செய்தியைப் போடுவது பற்றிக் கேட்டார்.

அண்ணாதுரையின் ஆலோசனைப்படி அந்தச் செய்தி வெளியிடப்படவில்லை. அந்தச் செய்தியை எப்படி வெளியிடுவது என்று, குருசாமி சென்று ஈ.வெ.ரா.வைக் கேட்டு வருவது நல்லது என்ற அண்ணாதுரையின் யோசனைப்படி, குருசாமியை சம்பத் அனுப்பி வைத்தார்.

குருசாமியைப் பார்த்ததும் ஈ.வெ.ரா. கேட்ட முதல் கேள்வி, “என்ன, அந்தச் செய்தியைப் போட்டு விட்டீர்களா?” என்பதுதான். குருசாமி, “செய்தியை எப்படிப் போடுவது என்று கேட்டுப் போகத்தான் வந்தேன்” என்று கூறினார். “செய்தியைப் போடுங்கள் என்றால், போட்டுவிட்டேன் என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, எப்படிப் போடுவது என்று கேட்கக் கூடாது”என்று ஈ.வெ.ரா. சொல்லி அனுப்பினார்.

இந்த விவகாரம் பற்றிக் கருணாநிதி அவரது ‘நெஞ்சுக்கு நீதி’ தொடரிலும் குறிப்பிட்டிருக்கிறார். 
“பெரியாரின் அறிக்கை எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. நான் எந்தப் பதிலும் கூறாமல் இருந்து விட்டேன். எங்களைத் திராவிடர் கழகத் தோழர்கள் கூட்டத்திற்கு அழைப்பதை நிறுத்திக் கொண்டார்கள்” என்று கருணாநிதி எழுதியிருக்கிறார்.

(இந்த ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் ‘குமுதம்’ இதழில் கருணாநிதி எழுதியது ஆகும்.)

ரகசியப் பேச்சு

1949 மே மாதம் 14– ஆம் தேதியன்று, அப்பொழுது இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை, திருவண்ணாமலையில் ஈ.வெ.ரா. சந்தித்தார். அங்கு அவர் ராஜாஜியுடன் நீண்ட நேரம் பேசினார். ராஜாஜி – ஈ.வெ.ரா. சந்திப்பு பத்திரிகைகளில் வெளியாயிற்று.


திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களிடையே, அந்தச் சந்திப்பு ஒரு பெரிய கேள்விக்குறியையும், சலசலப்பையும் உண்டாக்கியது. சந்திப்பின் விவரங்களை அறிந்து கொள்ள திராவிடர் கழகத் தோழர்கள் முயன்றார்கள். ஆனால், அதுபற்றி ஒரு சிறிய செய்தியையும் ஈ.வெ.ரா. வெளியிடவில்லை.

பார்ப்பனர் – பார்ப்பனர் அல்லாதார் போராட்டத்தைத் திராவிடர் கழகம் மிகவும் தீவிரமாக நடத்திக் கொண்டிருந்த நேரம் அது. தினசரி காலையிலும், பகலிலும், மாலையிலும், இரவிலும் ராஜாஜியைப் பார்ப்பனர் என்று கூறித் திராவிடர் கழகத்தவர் ஏசிக் கொண்டிருந்த நேரத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா., திருவண்ணாமலைக்கே சென்று ராஜாஜியுடன் நீண்ட நேரம் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள, திராவிடர் கழகத்தவர் மிகவும் விரும்பினார்கள்.

28.5.1949 அன்று கோவையில் ஜி.டி.நாயுடு ஏற்பாட்டில் நடந்த ஒரு மாநாட்டில் ஈ.வெ.ரா.வும், அண்ணாதுரையும் கலந்து கொண்டார்கள். 
“ஈ.வெ.ரா.வும் ராஜாஜியும் சமீபத்தில் திருவண்ணாமலையில் சந்தித்தார்கள்; அது என்ன விஷயம் என்று இந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. எல்லோருக்கும் தெரியும்படி சொல்ல வேண்டும்” என்று ஜி.டி. நாயுடு பேசுகையில் கேட்டுக் கொண்டார்.

அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா.வுக்கு முன்பாகப் பேசிய அண்ணாதுரையும், இந்தக் கோரிக்கையை வெளியிட்டார்.

“அது முற்றிலும் எனது சொந்த விஷயம். அதுபற்றி மாநாட்டில் வெளியிட முடியாது” என்று ஈ.வெ.ரா. மிகுந்த கோபத்துடன் தமது உரையில் பதில் அளித்தார்!!

(தொடரும்) 

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா

மத்திய அரசின் உண்ணாவிரத ஒழிப்புப் போராட்டம் – சத்யா 
ழலை ஒழிக்க அன்னா ஹஸாரே குழுவினர் போராடி வருவதற்குச் சமமாக, அவர்களது உண்ணாவிரதத்தை ஒழிக்க மத்திய அரசும் தீவிரமாகப் போராடி வருகிறது. அதன் விளைவாக கால வரையற்ற உண்ணாவிரதம் என்ற அறிவிப்பு, 15 நாளைக்குள் முடித்துக் கொள்ளும் உண்ணாவிரதமாகச் சுருங்கியுள்ளது. இந்த சுமுக(!) உடன்பாட்டை எட்ட, இரு தரப்பினரும் எப்படி வாதம் செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பார்க்கிறோம். 


கபில்சிபல் : இதோ பாருங்க. அநாவசியமா பிரச்சனை பண்ணாதீங்க. நாடு இருக்கிற நிலையிலே ஒரு நிமிஷம் உண்ணாவிரதம் இருக்கிறது கூட அரசியல் சட்டப்படி குற்றம். நாட்டுலே யாராவது சாப்பிடாம இருக்காங்களா? அவங்களுக்கெல்லாம் ஊழல் ஒழியணும்ங்கற எண்ணம் இல்லையா? அன்னா ஹஸாரே மட்டும் சாப்பிட மாட்டேன்னு ஏன் அராஜகம் பண்றாரு?

கெஜ்ரிவால் : நாட்டு மக்கள் ஆதரவோடத்தான் நாங்க இந்தப் போராட்டத்திலே இறங்கியிருக்கோம். ‘ஜன் லோக்பால்’ சட்டத்தை அரசு ஏற்கிற வரைக்கும் அன்னா ஹஸாரே உண்ணாவிரதத்தைத் தொடர்வார்.

சிதம்பரம் : நாங்களும் ஊழலை ஒழிக்கத்தான் பாடுபடறோம். அதனாலேதான் 2-ஜி ஊழல்லே கூட எங்களையும் மீறி சில பேர் கைதாகியிருக்காங்க. அதே வழிமுறையை நீங்களும் பின்பற்றலாமே?

சாந்தி பூஷண் : கடுமையான லோக்பால் சட்டம் வந்தாத்தான் ஊழலை ஒழிக்க முடியும். நாங்க என்ன வெளிநாட்டு பேங்குகளிலே பதுக்கியிருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கணும்னா உண்ணாவிரதம் இருக்கிறோம்? இனிமே நடக்கப் போற ஊழலைத் தடுக்கத்தானே சட்டம் கொண்டு வரணும்னு சொல்றோம்?

பிரணாப் முகர்ஜி : அன்னா ஹஸாரே நல்லா சாப்பிட்டு நூறு ஆண்டு காலம் ஊழலை எதிர்த்துப் போராடணும்ங்கறதுதான் எங்க ஆசை. அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும், இப்படி பொது இடத்திலே இருக்கிறது நியாயமா? வீட்டுக்குள்ளேயே உண்ணாவிரதம் இருக்க கூடாதா? லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு ஒரு நியாயம். இவருக்கு ஒரு நியாயமா?

பிரசாந்த் பூஷண் : மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் இப்படிப் போராடறோம்.

சிதம்பரம் : மக்கள் எதுவும் தெரியாம நிம்மதியா இருக்காங்க. அவங்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி, டென்ஷன் படுத்தணுமா? உண்ணா விரதத்துக்குப் பதிலா ‘உறங்காவிரதம்’ இருக்கட்டுமே. அரசு எந்தத் தடையும் பண்ணாது. 
கிரண்பேடி : உண்ணாவிரதம் காந்தி கடைப்பிடிச்ச வழிமுறை. அதனாலே அவர் வழியிலே...

கபில்சிபல் : என்ன காந்தி? நாங்க பார்க்காத காந்தியா? எங்க கட்சியிலேயே ரெண்டு மூணு காந்தி இருக்காங்க. அவங்க வழியிலே போகலாமே. சரி, அப்படியே உண்ணாவிரதம் இருந்தாலும் டென் டூ ஃபைவ் அடையாள உண்ணாவிரதம் இருக்கலாமே. அவ்வளவு ஏன்? கூச்சத்தை விட்டா அரைநாள் கூட போதும்.

சாந்தி பூஷண் : சீச்சீ... அதனாலே ஒரு பலனும் கிடைக்காது.

கபில்சிபல் : அப்ப தொடர் உண்ணாவிரதம் இருங்க. டெய்லி ஒருத்தர். எத்தனை வருஷம் வேணாலும் தொடரலாம். இதையெல்லாம் விட்டுட்டு, சாப்பிடவே மாட்டோம்னு அடாவடி பண்றாரே. ஒரு சட்டம் கொண்டு வர்றதுன்னா சும்மாவா? எத்தனை கட்சிகள் ரகளை பண்ணி, எத்தனை தடவை சபையை ஒத்தி வெச்சு நிறைவேத்தற விஷயம் தெரியுமா?

பிரணாப் முகர்ஜி : சட்டத்தை நிறைவேத்தறது பார்லிமென்டோட வேலை. நீங்களே சட்டத்தை கையிலே எடுத்துக்கிட்டு பேயாட்டம் ஆடறதுக்கு ஆட்சியையா பிடிச்சுட்டீங்க? பிடிவாதம் பிடிக்காம, காலாகாலத்திலே அன்னா ஹஸாரே சாப்பிடறதுக்கு வழியைப் பாருங்க.

சிதம்பரம் : ஒரு தேர்தல்லேயாவது ஜெயிக்க முடியுமா உங்களாலே? கோடிக்கணக்கிலே செலவு பண்ணி தேர்தலை சந்திச்சிருந்தா, அந்த நஷ்டத்தை ஈடுகட்டணுமேன்ற கவலை இருந்திருக்கும். இப்படிப் பொறுப்பில்லாம, ஊழல் எதிர்ப்புக் கூச்சல் போட மாட்டீங்க.

கெஜ்ரிவால் : எங்க மசோதா அமலுக்கு வந்தா, 65 சதவிகிதம் ஊழலை கேரண்டியா ஒழிக்க முடியும்னு ஹஸாரே சொல்றாரு.
கபில்சிபல் : ஊழலைப் பத்தி எங்களுக்குத் தெரியுமா? அவருக்குத் தெரியுமா? அவர் பேச்சை நம்பறீங்களே. 65 சதவிகிதம் ஊழலை ஒழிக்கிறது, பாதிக் கிணறு தாண்டற மாதிரி. அரைகுறை வேலை செய்யறதுக்கு செய்யாமலே இருக்கலாம். அதான் எங்க வழி.

கிரண்பேடி : ஊழலை ஒழிக்கணும்ன்ற சிந்தனையே இல்லாம இருக்கீங்களே.

கபில்சிபல் : இப்படி வாய் கிழியப் பேசறீங்களே. நான் கேக்கறேன். ‘ஸி.ஏ.ஜி. ஒழிப்பு மசோதா’ தயாரிச்சு அனுப்ப முடியுமா உங்களாலே? ஊழல் இந்த அளவு விஸ்வரூபம் எடுத்ததுக்கே ஸி.ஏ.ஜி.தானே காரணம்?

சாந்தி பூஷண் : நீங்க எங்க நோக்கத்தையே புரிஞ்சுக்காம பேசறீங்க. லட்சம் கோடி ரூபாய் ஊழலைக் கூட சாதாரணமா நினைக்கறீங்க.

சிதம்பரம் : அகலக் கால் வைக்காம, முதல்லே சின்னச் சின்ன ஊழலை ஒழிக்கப் போராடுங்களேன். ஆஸ்பத்திரியிலே ஆயா வாங்கற லஞ்சம், அரசாங்க ஆஃபீஸ்லே பியூன் வாங்கற லஞ்சம்னு எவ்வளவு இருக்குது? உங்க கவனத்தை அந்தப் பக்கம் திருப்பினா, நாங்க எங்க வேலையை ஃப்ரீயா கவனிக்க முடியுமில்லே?

கபில்சிபல் : அதை விடுங்க. நாங்க சாப்பாடு போட்டு பேட்டா கொடுத்து, கூட்டத்தைக் கூட்ட படாதபாடு படறோம். உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு கூட்டம் வருது? இதுலேர்ந்தே நீங்க ஏதோ ஃப்ராடு பண்றீங்களோன்னு சந்தேகம் வருது.

பிரணாப் முகர்ஜி : அரசியல்லே இல்லாமயே கோடிக்கணக்கான பணம் எங்கிருந்து வந்தது? அமெரிக்கா கொடுத்ததா? இல்லே, தீவிரவாதிகள் கொடுத்ததா 
சிதம்பரம் : உங்க முகங்களைப் பார்க்கும்போதே மோடி ஆளுங்களோன்னு சந்தேகம் வருது.

கபில்சிபல் : எதிர்ப்பு தெரிவிக்கறதுக்கும் ஒருமுறை இருக்குது. சைலண்டா மத்தவங்க காதுலே விழாதபடி எதிர்க்கணும். ஆனா நீங்க வெறி பிடிச்ச மாதிரி ஊழலை எதிர்க்கிறீங்க.

கெஜ்ரிவால் : நீங்க என்ன சொன்னாலும் சரி, கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உண்ணாவிரதம் இருக்கிறதுன்னு முடிவு செஞ்சிருக்கோம்.

கபில்சிபல் : என்ன பேசறீங்க நீங்க? உங்களுக்குத்தான் மூச்சு இருக்குதா? எங்களுக்கெல்லாம் இல்லையா? ஏதோ சில ஊழல்களைப் பத்தி அரைகுறையா தெரிஞ்சுகிட்டே இப்படி ஆத்திரப்படறீங்களே. முழு விவரமும் தெரிஞ்சுகிட்டு ஆட்சி நடத்தற எங்களுக்கு எப்படி இருக்கும்? நாங்க எப்பவாவது சாப்பிடறதை நிறுத்தியிருக்கோமா?

பிரணாப் முகர்ஜி : நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சறதாலே, உண்ணாவிரதத்தை அனுமதிச்சுத் தொலைக்கறதுன்னு முந்தா நாளே முடிவு பண்ணிட்டோம். மடமடன்னு ஒரு வாரத்துக்குள்ளே முடிக்கணும்.

சாந்தி பூஷண் : கட்டுப்படி ஆகாதுங்க. ஒரு மாசமாவது வேணும்.

சிதம்பரம்: சரி. உங்களுக்கும் வேணாம். எங்களுக்கும் வேணாம். 15 நாள்தான். அதுக்கு மேலேயும் உண்ணாவிரதம் தொடர்ந்தா, கடுமையான நிபந்தனைகள் பாயும். நிபந்தனைகளை டெல்லி போலீஸ் சொல்லும். கேட்டுக்குங்க. 
டெல்லி போலீஸ்: (1) யாரும் ஊழல் எதிர்ப்பு கோஷம் போடக் கூடாது. அது அரசாங்க விரோதச் செயலாகக் கருதப்படும். (2) 15 நாள்தான் உட்கார்ந்து கொண்டு உண்ணாவிரதம் இருக்கலாம். அதற்கு பிறகு கூட்டத்தினர் எந்த நேரத்திலும் எழுப்பப்படலாம் என்பதால், அதற்கு வசதியாக நின்று கொண்டே உண்ணாவிரதம் இருக்க வேண்டும். (3) போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள், இதற்கு முன் எந்த ஊழலிலும் ஈடுபட்டதில்லை என்று கலெக்டரிடம் சர்டிஃபிகேட் பெற வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயையோ! லஞ்சம் கொடுக்காம கவர்மென்ட்லே சர்ட்டிஃபிகேட் வாங்க முடியாதே?

டெல்லி போலீஸ் : அது உங்க பிரச்சனை. (4) உண்ணாவிரதப் பந்தல்லே, ஊழல் எதிர்ப்பு சம்பந்தமாக எந்த விளம்பரமும் செய்யக் கூடாது. அதுக்குப் பதிலா ராகுல், சோனியா கட்-அவுட் வெக்கலாம். (5) சட்டம் - ஒழுங்குப் பிரச்சனையைத் தவிர்க்க, உண்ணாவிரதம் இருக்கும் இடம் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட வேண்டும். (6) தினமும் ஒரு காங்கிரஸ் தலைவர் மேடைக்கு வந்து, உண்ணாவிரதத்துக்கு எதிராக வாழ்த்து தெரிவித்துப் பேசுவார்.

பிரசாந்த் பூஷண் : ஹா... காங்கிரஸ் தலைவரா? கோஷ்டி மோதல் நடக்குமே...?

டெல்லி போலீஸ் : கவலை வேண்டாம். கோஷ்டி மோதல் நடந்தாலும், நடக்குமோ என்ற சந்தேகம் வந்தாலும் போலீஸ் உடனடியாகச் செயல்பட்டு, கூட்டத்தைக் கலைத்துவிடும். (7) மத்திய அரசு காண்டீன் ஒன்று பந்தலின் நடுவில் அமைக்கப்படும். பிற்பகலில் ஒருமணி நேரம் லஞ்ச் பிரேக் விடவேண்டும். (8) பகலில் உண்ணாவிரதம் இருக்கத் தடையில்லை. இரவில் உண்ணாவிரதம் இருக்கக்கூடாது. அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டு மறுநாள் திரும்பி வரலாம். (9) உண்ணாவிரதப் பந்தலுக்கு 25 கி.மீ.க்கு வெளியேதான் வாகனங்களை நிறுத்த வேண்டும்.

சந்தோஷ் ஹெக்டே : ஐயோ... அங்கேயிருந்து நடந்து வரணுமா?

டெல்லி போலீஸ் : அவசியமில்லை. ஓடியும் வரலாம். (10) மாணவர்கள் காலாண்டுத் தேர்வுக்குப் படிக்கிற நேரம் என்பதால், மாலை 6 மணிக்கு மேல் மைக் வைக்கக் கூடாது. (11) சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதற்காக, பந்தலுக்கு அருகே எங்கும் டாய்லட் வசதி ஏற்படுத்த கூடாது. தேவைப்படுபவர்கள் பஸ் பிடித்து வெளியூர் செல்லத் தடையில்லை. (12) போராட்ட முடிவில் ‘ஊழல் ஒழிந்துவிட்டது’ என்று அறிவிக்க வேண்டும் 
கெஜ்ரிவால் : இந்த நிபந்தனைகளை மீறினா என்ன பண்ணுவீங்க?

கபில்சிபல்: அன்னா ஹஸாரேவை மறுபடியும் கைது பண்ணி, ரெண்டு நாள் கழிச்சு விடுதலை பண்ணிடுவோம். அவர் வெளியே வந்து மறுபடியும் புதுசா உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாம். 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

பெட்டியும், சாவியும் எங்கே? – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 9

1944 – ஆம் ஆண்டில் சேலம் மாநாட்டில் ஜஸ்டிஸ் கட்சியின் ஒரு பிரிவினர், திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இயங்க ஆரம்பித்த இரண்டு வருடங்களில், திராவிடர் கழகத்தில் ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு ஒரு வலிமையான எதிர்ப்பு உருவாகி வளர்ந்து வந்தது.

“திராவிடர் கழக விவகாரங்களில் எவரையும் ஆலோசனை கலக்காமல் ஈ.வெ.ரா. சர்வாதிகாரியாகச் செயல்பட்டார்; கட்சியில் எவரையும் அவர் மதிப்பது இல்லை; கட்சியின் நிதி விவகாரங்கள், சொத்துக்கள் ஆகியவை பற்றி எவருக்கும் அவர் முறையாகத் தெரிவிப்பது இல்லை; கட்சியில் உள்ள எவரையும் தம் மனம் போன போக்கில் அலட்சியப்படுத்துகிறார்” என்று அண்ணாதுரை தரப்பினர் ஈ.வெ.ரா. மீது குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காகக் கூறினார்கள்.

திராவிடர் கழக உறுப்பினர்கள் குழப்பம் அடைந்தார்கள். சிலர் அண்ணாதுரையை ஆதரித்தார்கள்; சிலர் ஈ.வெ.ரா.வுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்; வேறு சிலர் ஈ.வெ.ரா.வுக்கும் நல்லவர்களாய், அண்ணாதுரைக்கும் வேண்டியவர்களாய் ஒட்டுப் போடப் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்கள்.

ஈ.வெ.ரா.வின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர். அவர் சித்த வைத்தியராக விளங்கியவர்; பெரும் செல்வந்தர்; தூய்மையான வைணவர். அவர் எப்போதும் துவாதச திருநாமம் மேனியில் துலங்கக் காட்சி தருவார் என்று ராஜாஜி ஒரு பொது நிகழ்ச்சியில் ஒருமுறை குறிப்பிட்டார். கிருஷ்ணசாமி நாயக்கருக்குச் சம்பத், செல்வன், மிராண்டா, செல்லா என்று நான்கு மக்கள். மூத்த புதல்வர் சம்பத் பொதுவாழ்வில் இளமைக்காலம் முதல் அண்ணாதுரையுடன் சேர்ந்து பணியாற்றினார். தம்முடன் பழகியவர்களில் சம்பத் ஒருவரை மட்டுமே அவன், இவன் என்று அண்ணாதுரை பொது மேடைகளிலும் அன்புடன் குறிப்பிடுவார். அந்த அளவுக்கு இருவருக்கும் இடையே நெருக்கம் இருந்தது.


சம்பத்

திராவிடர் கழகத்தில், தனது சித்தப்பா ஈ.வெ.ரா.வின் தலைமைக்கு எதிராக, அண்ணாதுரையுடன் சம்பத் மிகவும் தீவிரமாக வேலை செய்தார். 
சம்பத் தகவல் 
“1949– ஆம் ஆண்டில்தான் திராவிடர் கழகத்திலிருந்து நாம் பிரிந்தோம். ஆனால், திராவிடர் கழகத்திற்குள் குமுறல் 1946– ஆம் ஆண்டு முதலே இருந்து வந்தது. திராவிடர் கழகம் ஒரு நல்ல அரசியல் கட்சியாக, ஜனநாயக முறைப்படி இயங்கவில்லை என்று அண்ணாதுரையும், நாங்களும் வருத்தப்பட்டோம்” என்று, 1961– ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கட்சி என்ற ஒரு புதிய கட்சியை ஆரம்பித்த பிறகு, அக்கட்சியின் துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய நீண்டதொரு உரையில் ஈ.வெ.கி.சம்பத் கூறினார்.

அந்த நீண்ட உரையில் திராவிடர் கழகம் சம்பந்தமான பல செய்திகளை சம்பத் குறிப்பிட்டார். அவற்றைச் சுருக்கமாக கீழே தருகிறேன்.

“1947 ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தைத் துக்க தினமாக அனுசரிப்பது என்ற ஈ.வெ.ரா.வின் முடிவு தவறு என்ற எண்ணம், திராவிடர் கழகத்தின் பல இளைஞர்களின் உள்ளத்தில் இருந்தது. எனினும் அந்த எண்ணத்தை வெளியிட ஸ்தாபனத்தில் இடம் இல்லாமல் இருந்தது; வாய்ப்பு இல்லாமல் இருந்தது; கமிட்டிகள் கூடாத கமிட்டிகளாகவே இருந்து விட்டன.

“இந்த நிலையில்தான் தூத்துக்குடி (திராவிடர் கழக) மாகாண மாநாடு நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. உடனே தோழர் நெடுஞ்செழியன் தனது ‘மன்றம்’ இதழில், ‘இப்போது மாநாடு எதற்காகக் கூடுகிறது, கட்சியின் கமிட்டிகள் எல்லாம் செயலற்றுக் கிடக்கும்போது, மாநாட்டில் கூடுவதும் பேசுவதும் எதற்காக?’ என்றெல்லாம் எழுதினார்.

“உடனே இதுகுறித்து நாடு பூராவிலும் உள்ள கழகத் தோழர்களிடையே சிறு சர்ச்சை எழுந்தது. மாநாட்டிற்கு வந்தால், நெடுஞ்செழியன் அடிக்கப்படுவார் என்று கூடப் பேசப்பட்டது. உடனே நாங்கள் எல்லோரும் திருச்சியில் தோழர் சாம்பு இல்லத்தில் கூடி, தூத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு செய்தோம்” என்று சம்பத் தெரிவித்தார். அதன்படி தூத்துக்குடி மாநாட்டில் சம்பத்தும், அவரது ஆதரவாளர்களும் கலந்து கொள்ளவில்லை.

மாநாட்டிற்கு அண்ணாதுரை ஏன் வரவில்லை என்ற கேள்வி ஈ.வெ.ரா.விடம் கேட்கப்பட்டது. “இதுமாதிரி அவன் வரவில்லை, இவன் வரவில்லை என்று என்னிடம் கேட்காதீர்கள். இது என்ன பாட்டுக் கச்சேரியா, சுப்புலெட்சுமி ஏன் வரவில்லை என்று கேட்பதற்கு?” என்று ஈ.வெ.ரா. சூடாகப் பதிலளித்தார்.

எனினும் தூத்துக்குடி மாநாட்டை அண்ணாதுரை பகிஷ்கரித்ததால் ஏற்பட்ட விளைவுகளைச் சமாளிக்க ஈ.வெ.ரா. விரும்பினார் என்று தோன்றுகிறது. அந்த மாநாடு முடிந்த பிறகு, “இவர்களுக்கு என்ன மனக்குறை, கேட்டு வாருங்கள்” என்று அண்ணாதுரையிடம் பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை தூது அனுப்பினார். திராவிடர் கழகத்தில் இருந்த நிலைமைகளையும், தங்களது மனக்குமுறல்களையும், அண்ணாதுரையின் சார்பில் சம்பத் அவரிடம் எடுத்துச் சொன்னார். 
பெட்டியும் சாவியும்

பிறகு ஈ.வெ.ரா. ஒரு சமரச ஏற்பாட்டைத் தெரிவித்தார். அதன்படி பெத்தாம்பாளையம் பழனிச்சாமியை வரவேற்புக் கமிட்டித் தலைவராகப் போட்டு, ஈரோட்டில் ஒரு தனி மாநாடு நடத்துவது என்றும், அந்த மாநாட்டில் மனக்குறைகள் நீக்கப்படும் என்றும் ஈ.வெ.ரா. தெரிவித்ததாக சம்பத் தமது உரையில் விவரித்தார்.

ஈரோடு மாநாடு அண்ணாதுரை தலைமையில் 1948 அக்டோபர் 23, 24 ஆகிய நாட்களில் நடந்தது. 1947 ஆகஸ்ட் 15 துக்க நாள் கருத்து, எதிர்க் கருத்து சர்ச்சைக்குப் பிறகு அண்ணாதுரையும், ஈ.வெ.ரா.வும் அந்த மாநாட்டில் ஒரே மேடையில் கலந்து கொண்டார்கள்.

“பெட்டிச் சாவியை அண்ணாதுரை கைகளில் கொடுத்துவிட்டேன்” என்று அந்த மாநாட்டில் ஈ.வெ.ரா. அறிவித்தார். அதாவது கட்சியின் வரவு செலவுக் கணக்குகள் அடங்கிய நிதி, அண்ணாதுரையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது என்று ஈ.வெ.ரா. பகிரங்கமாகத் தெரிவித்தார்.

ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு கழக உறுப்பினர்களை ஏமாற்றிய ஒரு நாடகம் என்று அடுத்த வாரமே அண்ணாதுரை அம்பலப்படுத்தினார்.

“பெட்டிச் சாவியைக் கொடுத்ததாக பெரியார் பேசியதால், பலர் திராவிடர் கழகத்திற்கு நான் தலைவன் ஆக்கப்பட்டு விட்டேனோ என்று சந்தேகப்படுகிறார்கள். எப்போதும் போல் தி.பொ.வேதாசலம்தான் நிர்வாகத் தலைவர். இதில் ஒன்றும் மாற்றம் இல்லை” என்று அண்ணாதுரை ‘திராவிட நாடு’ இதழில் விளக்கம் தந்தார்.

“சாவியைக் கொடுப்பதாகப் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஐயா (ஈ.வெ.ரா.) சொன்னாரே தவிர, சாவியையும் தரவில்லை! பெட்டியையும் தரவில்லை! மாநாட்டில் மிச்சப்பட்ட பத்தாயிரத்துக்கு மேற்பட்ட பணத்தோடு, பெட்டியும் சாவியும் ஐயாவின் (ஈ.வெ.ரா.வின்) சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீரான்சாகிபு வீட்டில்தான் இருந்தன” என்று இராம.அரங்கண்ணல் சில ஆண்டுகளுக்குப் பிறகு, ‘திராவிடன்’ இதழில் (26.9.1956) எழுதி இந்த உண்மையை மீண்டும் பதிவு செய்தார். 
ஈ.வெ.ரா. பிரசாரம்

ஆக, “ஈரோடு மாநாடு முடிந்த பிறகும், திராவிடர் கழகத்தில் காரியங்கள் முன்போலவே நடைபெற்று வந்ததால், வெளியே மக்களிடையே அண்ணாதுரையும் ஈ.வெ.ரா.வும் ஒன்றுபட்டு விட்டார்கள் என்று பேசப்பட்டாலும், உள்ளே மனக்குமுறல் நீங்கிய பாடில்லை” என்று சம்பத் தமது உரையில் தெரிவித்தார்.

“அதன் பேரில், உள்ளே இருந்து கொண்டே அண்ணாதுரை ஒத்துழையாமை செய்யத் துவங்கினார். ‘திராவிட நாடு’ இதழில் கேள்வி–பதில் பகுதி ஒன்றைத் துவக்கினார். பல பத்திரிகை ஆசிரியர்கள் செய்வதைப் போலவே, இவரும் தானாகவே கேள்விகளை எழுதி, அதற்குப் பதில்களையும் எழுதினார். ‘நீங்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி விட்டீர்களா?’ என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டு, அதற்கு ‘விலகவில்லை, ஒதுங்கியிருக்கிறேன்’ என்று பதிலும் எழுதினார். இந்தப் போக்கு பிடிக்காதவராக ‘இவர்கள் எல்லோரும் துரோகிகள்’ என்ற திண்ணைப் பேச்சை பெரியார் முடுக்கி விட்டார்” என்று சம்பத் தமது உரையில் மேலும் தெரிவித்தார்.

ஈரோடு மாநாட்டிற்குப் பிறகு, கரூர் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகத் தோழர்கள் சிலர் மீது, கலவர வழக்கு ஒன்று வந்து சேர்ந்தது. அந்த வழக்கை நடத்த ஈ.வெ.ரா. பணம் தர மறுத்து விட்டார். உடனே அண்ணாதுரையும், அவரது ஆதரவாளர்களும் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிதியை மிச்சப்படுத்தி, கரூர் கலவர வழக்குக்காக ஈ.வெ.ரா.விடம் கொடுத்தார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகும் திராவிடர் கழகத்திற்குள் குமுறல் நீடித்து வந்தது. அண்ணாதுரையும், நெடுஞ்செழியன், சம்பத் முதலியவர்களும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல், பாரதி படிப்பகம் போன்ற பெயர்களில் உள்ள மன்றங்கள் சார்பில், பல ஊர்களில் நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வந்தார்கள்.

அண்ணாதுரை ஓர் உல்லாச மனிதர் என்றும், சோம்பேறி என்றும் ஈ.வெ.ரா. மூலம் ஒரு பிரசாரம் தீவிரமாக நடந்தது. அண்ணாதுரை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்று காட்டவும் ஈ.வெ.ரா. முயன்றார். இந்த முயற்சிகள் அனைத்தையும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இராம.அரங்கண்ணல் ஒரு கட்டுரையில் அம்பலப்படுத்தினார்.

ஆதார நூல்கள்: 
கட்சிப் பிறந்தது - ஈ.வெ.கி. சம்பத் தமிழ்த் தேசியக் கட்சி துவக்க விழா கூட்டத்தில் நிகழ்த்திய உரை.
வெளியிட்டோர்: கண்ணதாசன் பதிப்பகம், 2/127, மவுண்ட்ரோடு, சென்னை - 6 (1961 ஜூலை)

(தொடரும்) 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

சி.சுப்பிரமணியம் தெரிவித்த உண்மை! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 7

ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த சேலம் மாநாட்டில், கீழ்க்கண்ட அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைகளில் திராவிடர் நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம், மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும், நேரடி பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென்ற கொள்கையை, முதற் கொள்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது.”

(‘நமது குறிக்கோள்’, ‘விடுதலை’ வெளியீடு – 1948; பக்.38)

திராவிட நாடு என்ற பெயருடன் சென்னை மாகாணத்தின் வருங்கால ஆட்சி அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது சம்பந்தமான ஒரு கோரிக்கையை, இந்தத் தீர்மானம் தெரிவித்ததைக் காண்கிறோம்.

1940 – ஆம் வருடத்தில் திருவாரூரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த மாநாட்டிலும், இந்தியாவிலிருந்து பிரிக்கப்பட்ட திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தியும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை ஏற்கெனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

“திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், (பிரிட்டிஷ்) இந்திய மந்திரியின் நேர்ப் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று அதில் கோரப்பட்டது. 
ஆனால் சேலம் மாநாட்டில், “பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதான ஒரு தனி (ஸ்டேட்) நாடாகப் பிரிக்கப்பட வேண்டும்” என்று கோரப்பட்டது. நேரடிப் பார்வையில் இருப்பது கூட போதாது என்று கருதி, பிரிட்டிஷ் செக்ரிட்டரி ஆஃப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பொருள், இந்தியா முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு வெளியேறிய பிறகும், சென்னை மாகாணத்தில் மட்டும் அது என்றென்றும் நீடித்திருக்கலாம் என்பதே ஆகும்.

இந்த தீர்மானம் ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினரின் அடிமைப் புத்தியைத் தெளிவாக அம்பலப்படுத்தியது.

திராவிடம் என்ற சொல்லின் பொருள் தெளிவாக இல்லாத நிலையிலேயே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருபுறம் ஐஸ்டிஸ் கட்சியினரை மிரட்டுவதற்கும், மற்றொருபுறம் தமிழகத்தைச் சேர்ந்த எளிய அப்பாவி மக்களைத் தனித் திராவிட நாடு என்ற கவர்ச்சிகரமான கோஷத்தின் மூலம் ஏமாற்றவும், இந்தத் தீர்மானத்தை ஈ.வெ.ரா., அண்ணாதுரை கூட்டத்தினர் பயன்படுத்தினார்கள்.

யுத்த ஆதரவுப் பிரசாரம்

ரண்டாம் உலக யுத்தத்தின் போது திராவிடர் கழகத்தினர் யுத்த ஆதரவுப் பிரசாரம் செய்தார்கள். ஈ.வெ.ரா.வின் தமிழ் தினசரிப் பத்திரிகையான ‘விடுதலை’, யுத்தப் பிரசாரத்திற்காகச் சென்னை மாகாண அரசுக்குக் குத்தகைக்குத் தரப்பட்டது.

“எங்களைப் பிரசாரத்திற்கு உயோகப்படுத்திக் கொள்ளுங்கள்; சுதந்திரத்திற்காகப் போராடும், சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசத் தலைவர்களை, நாக்கிலே நரம்பின்றி ஏச வேண்டுமா? நாங்கள் தயார். இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்துள்ள பிரிட்டனை உலகத்தின் ஜனநாயகக் காவலன் என்று புகழாரம் சூட்ட வேண்டுமா? அதற்கும் நாங்கள் தயார். எங்களுக்கு உரிய கூலியை மட்டும் கொடுத்து விட்டால் போதும் – என்ற கருத்துப்படும் வகையில் வெட்கம், மானம், சூடு, சொரணை எதுவும் இல்லாமல் பிரிட்டனுக்கு ஆதரவாக யுத்தப் பிரசாரம் செய்தார்கள், திராவிடர் கழகத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும்.

சி.சுப்பிரமணியம் இளம் வயதில் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். விடுதலை பெற்ற இந்தியாவில் அவர் தமிழ்நாட்டில் அமைச்சராகவும், பிறகு மத்திய அமைச்சராகவும் பணிபுரிந்தார். மகாராஷ்டிர மாநில ஆளுநராகவும் அவர் சிறிது காலம் பொறுப்பு வகித்தார். 


சி.சுப்பிரமணியம்

‘என் வாழ்க்கை நினைவுகள்’ என்ற தலைப்பில் சுப்பிரமணியம் தமது சுய சரித்திரத்தை எழுதியிருக்கிறார். ‘திருப்புமுனை’ என்ற தலைப்புக் கொண்ட அந்த நூலின் முதல் தொகுதியில், இரண்டாம் உலக யுத்தத்தின்போது அண்ணாதுரை, ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசின் பிரசாரகராக இருந்தார் என்ற செய்தி தரப்பட்டிருக்கிறது.

“பிரிட்டிஷ் அரசின் யுத்த முயற்சிக்குத் திராவிடர் கழகம் முழு ஒத்துழைப்பு அளித்தது” என்றும், “இந்தியாவில் பிரிட்டிஷ் அரசுக்கும் யுத்த முயற்சிகளுக்கும் இந்திய மக்களின் ஒத்துழைப்பைத் திரட்டுவதற்காக அண்ணாதுரை ஒரு பிரசாரகராக நியமிக்கப்பட்டார்” என்றும் சி.சுப்பிரமணியம் அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

மனுவில் கையெழுத்து

ந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்து விடும் என்றிருந்த தருவாயிலும், ஆங்கிலேய அரசினர் இந்தியாவிலிருந்து வெளியேறக் கூடாது என்ற நிலையைத் திராவிடர் கழகம் எடுத்ததையும் சி.சுப்பிரமணியம் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

“இரண்டாது உலக யுத்தத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே இந்தியாவின் அரசியல் சுதந்திரம் பற்றிப் பேச்சுக்கள் ஆரம்பித்தபோது, இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறினால் ‘வடஇந்திய ஆரியர்கள்’ திராவிடர் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள் என்றும், எனவே பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து வெளியேறுவது விரும்பத்தக்கது இல்லை என்றும், ஒரு நிலையைத் திராவிடர் கழகம் எடுத்தது.

“கட்சித் தலைவர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவைப் பிரிட்டிஷ் அரசுக்குத் திராவிடர் கழகம் அனுப்பியது. ‘இந்தியாவுக்கு விடுதலை வழங்குவது பற்றி பிரிட்டிஷ் அரசு சிந்திக்கக் கூடாது. எனினும் சுதந்திரம் வழங்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்யுமானால், சென்னை மாகாணம் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்க விட்டு விடக்கூடாது. சென்னை மாகாணம் பிரிட்டிஷ் அரசின் பாதுகாப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வரவேண்டும்’ என்று அந்த மனு வற்புறுத்தியது” என்றும் சி.சுப்பிரமணியம் எழுதியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் இந்த மனு விவகாரம் குறித்த ஒரு விவாதத்தின்போது, அண்ணாதுரையை அமைச்சர் சி.சுப்பிரமணியம் நேரடியாகவே கேட்டார்.
(அப்போது காமராஜ் முதலமைச்சர்; சுப்பிரமணியம் அமைச்சர்; அண்ணாதுரை சட்டப் பேரவையில் தி.மு.க. கட்சியின் தலைவர்.)

“தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து, காங்கிரஸ் பிரதிநிதி என்ற வகையில் நான் சந்தேகம் கொள்ளக் கூடாது என்று, ஒரு விவாத்தின்போது அண்ணாதுரை கூறினார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்று கோரி, பிரிட்டிஷ் அமைச்சரிடம் தரப்பட்ட மனுவில் கையெழுத்திட்டவர்களில் நீங்களும் ஒருவர் என்று அப்போது நான் அண்ணாதுரையைப் பார்த்துப் பரிகாசம் செய்தேன்.

“இந்தப் பின்னணியில் தி.மு.க.வினரின் தேச பக்தி குறித்து நாங்கள் சந்தேகப்படுவது நியாயமே. எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் உங்களது தேச பக்தியை நீங்கள் (தி.மு.க.வினர்) நிலை நாட்டவில்லையென்றால், உங்களது கடந்த கால வரலாறு என்றும் நினைவில் இருக்கும் என்றும் நான் கூறினேன்” என்று சி.சுப்பிரமணியம் விளக்கமாகவே தெரிவித்திருக்கிறார்.

சட்டப் பேரவையில் நேருக்கு நேராக அண்ணாதுரையைப் பார்த்து, சி.சுப்பிரமணியம் கூறியவை இந்த வாசகங்கள்.

சென்னை மாகாணத்திற்கு மட்டும் சுதந்திரம் அளிக்காமல், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் அதை என்றென்றும் அடிமைப் பகுதியாக வைத்திருக்க வேண்டும் என்று கோரிய மனுவில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர் அண்ணாதுரை என்ற உண்மையை, சட்டப் பேரவையில் அண்ணாதுரை எதிரில் வீற்றிருக்கச் சுப்பிரமணியம் தெளிவான சொற்களில் வெளியிட்டார்.

அண்ணாதுரை அதை மறுக்க இயலவில்லை. அதுதான் திராவிடக் கட்சிகளின் ‘வரலாறு.’

அநாகரிக ஏசல்கள் 
சேலம் மாநாடு முடிந்து, அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தைத் தொடர்ந்து, ஈ.வெ.ரா. தலைமையில் திராவிடர் கழகம் என்ற பெயரில் ஒரு திராவிடக் கட்சி செயல்பட ஆரம்பித்ததும், ஜஸ்டிஸ் கட்சியினரும், திராவிடர் கழகத்தவரும் பரஸ்பரம் மிகவும் அநாகரிகமாக ஏசிக் கொண்டார்கள்.

“நேற்று வரையில் எங்களிடம் அவ்வப்போது பணம் வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள், இன்று திடீரென்று விசுவாசம் மாறி விட்டார்கள்” என்று ஜஸ்டிஸ் கட்சியினர் பிரசாரம் செய்தார்கள்.

“ஜஸ்டிஸ் கட்சி ஆடம்பர ஆசாமிகளின் கூடாரம்; அதில் தொண்டர்களே கிடையாது” என்று அண்ணாதுரை தரப்பினர் பதில் பிரசாரம் செய்தார்கள்.

1947 ஆகஸ்ட் 15– ஆம் தேதி இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது. உடனே ஈ.வெ.ரா. பலரையும் திடுக்கிட வைத்த ஓர் அறிக்கையை வெளியிட்டார்; அண்ணாதுரை கொதித்து எழுந்தார். ஈ.வெ.ரா.வின் அறிக்கையைக் கடுமையாகக் கண்டித்து, அவர் திராவிட நாடு இதழில் நீண்ட ஒரு கட்டுரையை எழுதினார். அந்த ‘வரலாறு’ அடுத்த இதழில்.

ஆதார நூல்கள்: 

1. என் வாழ்க்கை நினைவுகள் - முதல் தொகுதி: திருப்புமுனை.
எழுதியவர் சி.சுப்பிரமணியம்.
வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி)லிட், அம்பத்தூர், சென்னை -98.
முதற்பதிப்பு ஜனவரி (1994)

2. விடுதலைப் போரில் தமிழகம் - இரண்டாவது தொகுதி.
ஆசிரியர். ம.பொ.சிவஞானம் - (1983). 

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ஈ.வெ.ரா.வுக்கு அண்ணாதுரை கடும் கண்டனம்! – கே.சி.லட்சுமிநாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 8

ந்திய சுதந்திரப் போராட்டத்தை ஆதரிக்காததும், சுதந்திரப் போராட்ட வீரர்களை நாக்கிலே நரம்பின்றி ஏசித் தூற்றியதும் மிகப் பெரிய தவறுகள் என்ற ஒரு சிறிய உறுத்தல், இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டு விடும் என்று தென்பட்ட காலகட்டத்தில், அண்ணாதுரைக்கு ஏற்பட்டது என்று தோன்றுகிறது.


விடுதலைப் போரில் ஈடுபட்டுத் தியாகங்கள் பல புரிந்தோரை, நிந்திப்பது தகாது என்று அவர் பேசவும் எழுதவும் ஆரம்பித்தார்.

மகாகவி பாரதியாரைப் பார்ப்பனர் என்று கொச்சை மொழிகளில் அன்றைய திராவிடர் கழகத்தினர் ஏசிக் கொண்டிருந்ததை, அண்ணாதுரை விரும்பவில்லை. பாரதியார் சமுதாய சீர்திருத்தச் செம்மல் என்று அவர் புகழாரம் சூட்டினார். பாரதி ஒரு மக்கள் கவிஞர் என்று சென்னை வானொலியில் அவர் உரை நிகழ்த்தினார்.

அதுமட்டுமின்றிப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்குப் பொற்கிழி வழங்கும் ஒரு விழா, அண்ணாதுரையின் பெருமுயற்சியால் 28.7.1946 அன்று நடந்தது. பாரதிக்குத் தாசன், அதாவது பாரதியாரின்அடிமை என்று தமது புனைப் பெயரை வைத்துக் கொண்ட, கனக சுப்புரத்தினத்திற்கு விழா எடுப்பதைத் திராவிடர் கழகத்தினரில் கணிசமானவர்கள் விரும்பவில்லை. அவர்கள் பாரதிதாசனைத் திட்டிக் கொண்டிருந்தார்கள். அவருக்குப் பொற்கிழி அளிக்க முன்வந்த அண்ணாதுரை மீதும் அவர்களது கோபம் பாய்ந்தது.

ஆனால், அண்ணாதுரை அது குறித்துக் கவலைப்படாமல் விழா ஏற்பாடுகளைக் கவனித்தார். அவரது அன்றைய நெருங்கிய சகாக்களான சி.வி.எம்.அண்ணாமலை, சி.டி.டி.அரசு, க.அன்பழகன், ஈ.வெ.கி.சம்பத் முதலியவர்கள் விழாவுக்காகத் தீவிரமாகப் பணி ஆற்றினார்கள். நாவலர் சோமசுந்தர பாரதியார், பேராசிரியர் ரா.பி.சேதுப் பிள்ளை, ப.ஜீவானந்தம், கி.ஆ.பெ.விஸ்வநாதம், டி.செங்கல்வராயன், ம.பொ.சிவஞானம், மு.வரதராசன் முதலியவர்கள் அந்த விழாவில் பேசினார்கள். அண்ணாதுரை பொற்கிழியைப் பாரதிதாசனிடம் அளித்தார்.

அந்த விழா கட்சி சார்பற்ற முறையில் நடந்தது. ஈ.வெ.ரா. அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்கரித்தார்.
ஈ.வெ.ரா. அறிக்கை 
திராவிடர் கழகத்தில் இருந்த இளைஞர்களில் பலர் ஈ.வெ.ரா வுக்கு எதிராக அண்ணாதுரையை ஆதரித்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வுக்கும், அண்ணாதுரைக்கும் இடையே பனிப்போர் ஆரம்பமாகி நடந்து கொண்டிருந்தது. ‘கட்சியில் ஈ.வெ.ரா., சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறார்’ என்று அண்ணாதுரை தரப்பினர் பிரசாரம் செய்தார்கள். 

கட்சியில் ஈ.வெ.ரா.வின் பணிகள் முடிந்து விட்டன என்றும், இனிமேல் அவருக்கு ஓய்வு தந்து விடலாம் என்றும் 29.9.1946 ‘திராவிட நாடு’ இதழில் அண்ணாதுரை ஓரளவு மறைமுகமாகவும், ஓரளவு பகிரங்கமாகவும் எழுதினார். 

1947 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியன்று இந்தியா சுதந்திர நாடாக மலரும் என்று அன்றைய ஆங்கிலேய அரசினர் அதிகாரபூர்வமாகத் தெரிவித்தபோது, திராவிடர் கழகத் தலைவர் ஈ.வெ.ரா. ஓர் அறிக்கையை வெளியிட்டார். 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி வட ஆரியர்களின் ஆதிக்கம் உதயமாகும் நாள். அந்த நாள் திராவிடர்களுக்குத் துக்க நாள். எனவே, திராவிடர் கழகம் அந்த நாளைத் துக்க நாளாக அனுசரிக்கும்” என்று தெரிவித்த ஈ.வெ.ரா.வின் அறிக்கை ‘விடுதலை’ நாளிதழிலும், பிற இதழ்களிலும் பிரசுரமாயிற்று. 

அண்ணாதுரை கண்டனம் 
ஈ.வெ.ராவின் அறிக்கை வெளியானதும், அன்றைய திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணாதுரை கோபத்துடன் கொதித்தெழுந்தார். அவர் ஈ.வெ.ரா.வின் துக்க நாள் அறிக்கைக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்து, ஒரு நீண்ட கட்டுரையை 10.8.1947 தேதியிட்ட ‘திராவிட நாடு’ இதழில் வெளியிட்டார். 

ஈ.வெ.ரா.வை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து அண்ணாதுரை எழுதிய முதலாவது அறிக்கை அது ஆகும். அதற்கு முன்பாக அவர் மறைமுகமாகச் சில கண்டனங்களைத் தெரிவித்து இருந்தார் என்ற போதிலும், ஈ.வெ.ரா.வுடன் நேரடியாக மோதுவதற்கு அவர் தயாராகி விட்டதை அனைவருக்கும் எடுத்துக் காட்டுவதாக அந்தக் கண்டன அறிக்கை அமைந்தது. 

அண்ணாதுரையின் அந்த நீண்ட அறிக்கையின் சில முக்கியமான வாசகங்கள் கீழே தரப்படுகின்றன. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி இந்திய சுதந்திர தினம். புதிய இந்திய சர்க்காரின் அமைப்பு நாள். ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பாகிஸ்தான் வெற்றி நாள். புதிய பாகிஸ்தான் சர்க்கார் அமைப்பு நாள். “ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் ஒழியும் நாள். உலகிலே பேசப்படும் நாள். வரலாற்றிலே இந்நாள் இடம் பெறுகிறது. 

“ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி, பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவு நாள். புதிய சர்க்காரின் தொடக்க நாள். புதிய சர்க்கார் தத்தமது ஆட்சி வட்டாரங்களிலே நல்லாட்சி நடத்தியாக வேண்டுமென்று வலியுறுத்த, அதற்காகக் கிளர்ச்சி செய்ய, போராட, யாருக்கும் உரிமை உண்டு. பிரிட்டிஷ் ஆட்சி அன்றைய தினம் நீங்குகிறது என்பது மக்களுக்குள்ள இந்த உரிமையை அதிகப்படுத்துகிறது. 

“நாட்டு மக்கள், அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுவதும், மக்களின் பிறப்புரிமையுமாகிய சுயராஜ்யத்துக்காக, தாங்கள் சரி என்று கொண்ட திட்டங்களின்படி நடந்து, அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை, சிறைவாசத்தை, தீவாந்தர சிட்சையை, தூக்கு மேடையைக் கூட மனமுவந்து ஏற்றுக் கொண்ட (விடுதலைப் போராட்ட) தியாகிகளுக்கு, வீரத்தை, தியாகத்தை, கொண்ட கொள்கைகளுக்காக கஷ்ட நஷ்டம் ஏற்க வேண்டும் என்ற கோட்பாட்டை மதிக்கும் திராவிடர் கழகத்தாராகிய நாம், வீர வணக்கம் செலுத்த வேண்டும். 

தியாகம் புரிந்தோமா? 
“எனவே, ஆகஸ்ட் பதினைந்தாம் தேதியின் முக்கியத்துவத்தை உணரவும், அந்நாள் நமது கழகம் என்ன விதமான போக்கு கொள்ள வேண்டும் என்பதைக் கவனிக்கவும், அதற்குப் பிறகு நமது வேலை முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்காகவும், நமது கழகத்தின் நிர்வாகக் கமிட்டியோ, முக்கியஸ்தர்களோ கூடி யோசித்திருக்க வேண்டும். 

“உலகம் முழுவதும் கூர்ந்து கவனிக்கும் ஒரு மகத்தான சம்பவத்தை, நமது கொள்கையை மட்டுமே அளவுகோலாகக் கொண்டு அளந்து பார்ப்பதோ, உதாசீனம் செய்வதோ சரியாகாது. அம்முறையில் ஏதும் செய்யப்படவில்லை. 

“அது நமக்குத் துக்க நாள் என்று நாம் கூறுகிறோம். சரியா? முறையா? ஒன்றுபடச் செய்யும் திட்டமா? காங்கிரஸ் எது செய்தாலும் எதிர்ப்பதே இவர்கள் வேலை என்று நம்மைப் பற்றிக் கூறப்படும் குற்றத்தை, நாமே வலியச் சென்று ஏற்றுக் கொள்ளும் செயல் அல்லவா இது? 

“நிர்வாகத் தலைவரின் (ஈ.வெ.ரா.வின்) அறிக்கை மறுநாளே வெளிவந்தது. அதிலே ஆகஸ்ட் 15 துக்க நாள் என்று குறிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி (சுதந்திர நாள்) நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் கூடாது என்று ‘விடுதலை’ அறிவித்தது. இந்தப் போக்கு விளக்கம் தருவதாகவோ, நமது எதிர்காலத்தைச் செம்மைப்படுத்தும் முறையாகவோ தோன்றவில்லை. 

“ஒரு திட்டத்துக்கு, ஒரு இன மக்களில் பெருவாரியானவர்கள் ஆதரவு இருக்கிறது என்பதை ஜனநாயக முறைப்படி, ஜனாப் ஜின்னா காட்டியே, வெற்றி பெற்றார். 

“அதுபோலவே, காங்கிரஸும், சுயராஜ்யக் கோரிக்கைக்குச் சகலரும் ஆதரவளிக்கிறார்கள் என்பதை, ஜனநாயக முறையான தேர்தல் முறைப்படியும், விடுதலைப் போர் நடத்தியும் காட்டி விட்டது. 

“நாம் ஆரம்ப கட்டத்தில், திட்டத்தை விளக்குவதில், அதற்கு ஆதரவு திரட்டுவதில் இருக்கிறோம். கிளர்ச்சி இல்லை, போர் இல்லை. இன்னமும், நமது உடலிலே இதற்காக தியாகத் தழும்பு ஏற்படவில்லை. குமரன் இல்லை, சிதம்பரம் பிள்ளை இல்லை! 


தீராத பழிச்சொல் 

“நம்முடைய வீர இளைஞர்கள் மீது இதுநாள் வரையில் சுமத்தப்பட்ட பழிச்சொல், நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் என்பது. 

“அந்த பிரிட்டிஷாரின் ஆட்சி முடியும்போது நாம் துக்கம் கொண்டாடுவது, இந்தப் பழிச் சொல்லை, நாமாகவே நம் மீது சுமத்தும்படி, அவர்களை வற்புறுத்தி அழைப்பதாகும். 

“காங்கிரஸார் பழி சுமத்தியதுபோல, நாம் பிரிட்டிஷாரின் அடிமைகள் அல்ல என்பதை விளக்க நமக்கு ஒரு நாள், கடைசி நாள், ஆகஸ்ட் 15. நாம் ஏன் அந்தச் சந்தர்ப்பத்தை இழந்து அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொள்ள வேண்டும்?” 

– இவ்வாறு அண்ணாதுரை அழுத்தந்திருத்தமாகக் கேள்விகளை எழுப்பினார். 

அண்ணாதுரையின் அறிக்கையை ஈ.வெ.ரா. அலட்சியப்படுத்தி ஒதுக்கி விட்டு, விடுதலைத் திருநாளைத் துக்க நாளாக அனுசரித்தார்; அழியாத பழிச் சொல்லைத் தேடிக் கொண்டார்! 

திராவிடக் கட்சிகளின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உருவாக்கிய ஒரு பெரிய நிகழ்ச்சி 1949– ஆம் ஆண்டில் அரங்கேறியது.