Saturday, November 12, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

அடிமை நிலையை நீட்டிக்கக் கெஞ்சினார்! – கே.சி.லட்சுமி நாராயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 5

ன்றைய சென்னை மாகாணச் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி படுதோல்வி அடைந்த பிறகு, ஈ.வெ.ரா. அந்தக் கட்சியின் நிலையிலிருந்து சிறிது சிறிதாக மாறுபடத் தொடங்கினார். கருத்து வேற்றுமைகள் குறித்து அவர் பகிரங்கமாகவே பேச ஆரம்பித்தார்.

1940– ஆம் வருடம், பிப்ரவரி மாதம் 18 – ஆம் தேதியன்று சென்னையில் டாக்டர் சி.நடேச முதலியார் நினைவுக் கூட்டத்தில், ஈ.வெ.ரா. நிகழ்த்திய உரையில் ஒரு பகுதியைக் கீழே தந்துள்ளேன்.

“கட்சிக்கு (ஜஸ்டிக் கட்சிக்கு) பணம் கிடையாது. ஏனெனில் முன்பு ஒரு காலத்தில் நம்மைச் சார்ந்திருந்த பணக்காரர்கள் எல்லோரும் இன்று நம்முடன் உரையாட யோசனை செய்கிறார்கள். நமது கட்சிக்கு வந்தால் என்ன லாபம் உண்டு என்றும் கேட்கிறார்கள். மற்றும் சிலர் கட்சியை விட்டு ஓடிப்போனதுடன் இல்லாமல், கட்சியைத் தாக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.

“இன்றைய தினம் நமது (ஜஸ்டிஸ்) கட்சிக்கு ஏதாவது செல்வாக்கு இருக்குமானால், அது நமது கட்சியில் உள்ள அங்கத்தினர் காரணமாக ஏற்பட்டது அல்ல. அது நமது எதிரிகளுடைய (காங்கிரஸுடைய) குற்றம் குறைகளால் நமக்கு ஏற்பட்டுள்ளது ஆகும்.

“இந்தச் சக்தியின் மீது நாம் பலமான அஸ்திவாரம் போட்டு கட்டிடம் கட்ட வேண்டியது நம் முன்னால் இருக்கும் வேலை. அப்போதுதான் தேசம் முழுமைக்கும் தானே பிரதிநிதித்துவம் வைப்பதாகச் சொல்லும் காங்கிரஸின் வேஷத்தை நம்மால் கலைக்க முடியும்.

“தேர்தலில் நமக்கு ஜெயம் கிடைக்காது என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. 
“பிராமணரல்லாதவர் எல்லோரும் ஒன்றாகக் கூடிய போதிலும், நமது இயக்கத்தின் அடிப்படையான கொள்கையை மாற்றி அமைக்காவிட்டால், நம்மால் வெற்றி பெற முடியாது.

“.... தேர்தல்களில் ஜஸ்டிஸ் கட்சியின் பெயரால் அபேட்சகர்களாக நிற்பதற்கும் யாரும் முன்வருவது இல்லை.

“.... கடந்த 20 வருடங்களாக வாழ்விலும், தாழ்விலும் நாம் (அந்நிய) அரசாங்கத்தை ஆதரித்து வந்ததால், நமது பெருமையும், பெயரும், செல்வாக்கும் இன்று சீர்குலைந்து போயின.

“.... தற்போதுள்ள கவர்னர், காங்கிரஸின் மாயையில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷ் அரசாங்கமே அந்த வலையில்தான் விழுந்திருக்கிறது. இம்மாதிரியான படுமோசமான நிலைமை இத்தேசத்தில் ஒருநாளும் ஏற்பட்டது இல்லை.

ஆதரவு கிடையாது

“.... ஐரோப்பியர்கள் மட்டும் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்தால், நமக்குச் சரியான பலம் ஏற்பட்டு விடும். “தமிழ்நாட்டில் உள்ள பாமர மக்கள் திராவிட இயக்கத்தை ஆதரிக்கிறார்கள். ஆனால், மற்ற மாகாணங்களில் இந்த இயக்கத்துக்குக் கொஞ்சம் கூட ஆதரவு கிடையாது. டாக்டர் அம்பேத்கரும், இன்னும் சில நண்பர்களும் இந்த விஷயத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாதே என்று சொல்லி விட்டார்கள்.

“இந்தப் பொய்யான இந்திய தேசம், தேசியம், தேசிய லட்சியம் என்பதை எல்லாம் ஜனங்கள் விட்டு விட்டு, நமது திராவிட நாட்டின் விடுதலைக்குப் பாடுபடுவார்களேயானால் நமது இலட்சியம் கை கூடும். 
“ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பல பிரமுகர்களுக்கு இந்த எண்ணம் பிடிக்கவில்லை. இந்த அடிப்படையான இலட்சியத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால், நமது இயக்கம் வெற்றி பெறப்போவது இல்லை.”

– இவ்வாறு ஈ.வெ.ரா. பேசினார். ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்றும், திராவிட நாட்டின் விடுதலை என்ற இலட்சியம், ஜஸ்டிஸ் கட்சியில் உள்ள பலருக்கு ஏற்புடையதாக இல்லை என்றும் இந்த உரையில் அவர் பகிரங்கமாகக் குறிப்பிட்டார்.

அதே சமயத்தில், தமிழகத்தில் மட்டுமே திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்தது என்றும், மற்ற மாகாணங்களில் அந்த இயக்கத்திற்கு இம்மியளவு கூட ஆதரவு கிடையாது என்றும் ஈ.வெ.ரா. குறிப்பிட்டதையும் கவனிக்க வேண்டும்.

உண்மையில், ஈ.வெ.ரா. இந்த உரையை நிகழ்த்திய 1940– ஆம் ஆண்டில், தமிழகத்திலும் திராவிட இயக்கத்திற்கு ஆதரவு இருந்ததில்லை .

திராவிட என்ற சொல்

திராவிட, திராவிட நாடு, திராவிடர்கள் என்ற சொற்கள் ஜஸ்டிஸ் கட்சியினருக்கும், ஈ.வெ.ரா. குழுவினருக்கும் இடையே மோதல்களை உண்டாக்கின. ஆங்கிலேய அரசினர் பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் புகுத்திய ‘திராவிட’ என்ற சொல்லை ஈ.வெ.ரா., அண்ணாதுரை ஆகியோரும், அவர்களைச் சாந்தவர்களும் ஓர் அவசர ஆவேசத்துடன் வரவேற்றார்கள். தெற்கே உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும், வடக்கே உள்ள இந்தியர்கள் ஆரியர்கள் என்றும், காங்கிரஸ் மகா சபையின் விடுதலை இயக்கம் திராவிடர்கள் மீது ஆரியர்களின் ஆதிக்கத்தைத் திணிப்பதற்காக நடைபெற்றது என்றும், பகுத்தறிவுக்குச் சிறிதும் பொருத்தம் இல்லாத வகையில் அவர்கள் பேசவும் எழுதவும் தலைப்பட்டார்கள்.

‘திராவிட’ என்ற சொல்லை ஜஸ்டிஸ் கட்சியில் பலர் விரும்பவில்லை. 1941– ஆம் ஆண்டில் ‘திராவிட நாடு’ என்ற பெயரில் ஒரு வார இதழை அண்ணாதுரை ஆரம்பித்தார். ‘திராவிட’ என்ற பெயரை வைத்துக் கொண்டு பத்திரிகையை ஆரம்பிக்க வேண்டாம் என்றும், வேறு ஒரு பெயரில் பத்திரிகையை நடத்துவதே நல்லது என்றும் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம் அண்ணாதுரைக்கு ஆலோசனை கூறினார். 
‘நாம் வாழும் நாடு திராவிட நாடு, நம் இனம் திராவிட இனம் என்ற உணர்ச்சியை அண்ணாதுரை ஊட்டிக் கொண்டு வந்தார். இந்தச் சமயத்தில் நீதிக் கட்சியின் (ஜஸ்டிஸ் கட்சியின்) தலைவர்கள், தங்களைத் திராவிடர்கள் என்று கூறிக் கொள்ள வெட்கப்பட்டனர்’ என்று ‘தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை’ என்ற வாழ்க்கை வரலாற்று நூல் (1953), ஜஸ்டிஸ் கட்சியினருக்குப் பதில் அளிக்கும் வகையில் தெரிவித்தது.

திருவாரூர் தீர்மானம்

மேலே தரப்பட்டுள்ள ஈ.வெ.ரா.வின் சொற்பொழிவு நிகழ்த்தப் பெற்ற ஆண்டு 1940 என்பதை மீண்டும் ஒரு முறை கவனிப்போம்.

இரண்டாம் உலக யுத்தம் 1939– ஆம் வருடம் செப்டம்பர் மாதம் தொடங்கியது. யுத்தம் சம்பந்தமாக காங்கிரஸ் மகாசபை விதித்த நிபந்தனைகளை அன்றைய பிரிட்டிஷ் அரசு ஏற்க மறுத்தது. உடனே மாகாணங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரி சபைகள் அனைத்தும், பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் மகாசபை தீர்மானித்தது. அந்த ஆணையை ஏற்று 1939 அக்டோபர் 28 – ஆம் தேதியன்று சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையிலான மந்திரி சபை ராஜினாமா செய்தது.

ஒருபுறம் இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது; மற்றொரு புறம் மாகாணங்களில் காங்கிரஸ் மந்திரி சபைகள் பதவி விலகி விட்டன; இன்னொரு புறம் காங்கிரஸ் மகாசபை இந்தியா முழுவதும் பெரியதொரு போராட்டத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான், ஜஸ்டிஸ் கட்சியின் கொள்கை மாற வேண்டும் என்று ஈ.வெ.ரா. பேச ஆரம்பித்தார்.

4.8.1940 அன்று திருவாரூர் நகரில் ஈ.வெ.ரா. தலைமையில் நடந்த ஜஸ்டிஸ் கட்சியின் பதினைந்தாவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒரு முக்கியமான தீர்மானம் கீழே தரப்படுகிறது.

“திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம், இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.” 
(‘நமது குறிக்கோள்’ – ‘விடுதலை’ வெளியீடு; 1948, பக்.34.)

இந்தத் தீர்மானம் தனிநாடு கோரவில்லை. பிரிட்டிஷ் இந்தியா மந்திரியின் நேர்ப் பார்வைக்குக் கீழ்ப்பட்ட ஒரு பகுதியாகச் சென்னை மாகாணம் அமைய வேண்டும் என்றுதான் இந்தத் தீர்மானம் வேண்டியது.

அதாவது, அண்டையில் உள்ள வட இந்தியாவிலிருந்து பிரிந்து, 6000 மைல்களுக்கு அப்பால் உள்ள பிரிட்டனுக்கு அடிமைப்பட்ட நிலையில் ‘தனிநாடு’ வேண்டும் என்றுதான் ஈ.வெ.ரா.வைத் தலைவராகக் கொண்டவர்கள் கேட்டார்கள்!

ஜஸ்டிஸ் கட்சி என்ற பெயரை அடியோடு மாற்ற, ஈ.வெ.ரா. தரப்பினர் நடவடிக்கைகளை எடுத்தார்கள். விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தென்னாட்டு இங்கர்சால் அண்ணாதுரை - எழுதியவர் - கலைச்செல்வன்.
வெளியிட்டோர்: கலைமன்றம், சென்னை-1 (1953). 
2. விடுதலைப் போரில் தமிழகம் - (இரண்டு தொகுதிகள்) எழுதியவர் ம.பொ.சி.
இது நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல் ஆகும்.