Monday, November 21, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் - 8 - சோ 
ர்மர் எப்பேற்பட்டவர்? ‘நூல் விலக்கிய செய்கைகள் அஞ்சும் நோன்பினோன்’ என்று பாரதியார் கூறுகிறார். அதாவது நூல்களினால் – வேதங்களினால் – விலக்கப்பட்ட செய்கைகள் எவையோ, அவற்றை நினைத்து பயப்படுகிறவர் அவர். அவற்றின் பக்கமே போகக் கூடாது என்று நினைப்பவர். சகுனியோ தனது சூதாட்டத்தை நியாயப்படுத்துகிறான் :

‘...தேர்ந்தவன் வென்றிடுவான் – தொழில்
தேர்ச்சியில்லாதவன் தோற்றிடுவான்
நேர்ந்திடும் வாட்போரில் – குத்து
நெறியறிந்தவன் வெலப் பிறனழிவான்
ஓர்ந்திடும் சாத்திரப் போர் – தனில்
உணர்ந்தவன் வென்றிட உணராதான்
சோர்ந்தழி வெய்திடுவான் – இவை
சூதென்றும் சதியென்றும் சொல்வாரோ?


வல்லவன் வென்றிடுவான் – தொழில்
வன்மையில்லாதவன் தோற்றிடுவான்
நல்லவனல்லாதான் – என
நாணமிலார் சொலும் கதை வேண்டா
வல் அமர் செய்திடவே – இந்த
மன்னர் முன்னே நினையழைத்து விட்டேன்
சொல்லுக வருவதுண்டேல் – மனத்
துணிவு இல்லையேல் அதுவும் சொல்லுக...’


அவனுக்கு சூதாட்டம் ஒரு சயன்ஸ். ‘பழிக்கவற்றை ஒரு சாத்திரம் எனப் பயின்றோன்’. அதாவது அதை ஒரு சாத்திரமாக, சயன்ஸாகப் படித்தவன். அவனுடைய பகடை, மாயப் பகடை அல்ல. அவனுடைய சூதாட்டத் திறன் அது. அவனுக்கு அது தர்மமாகப் போய்விட்டது. மன்னர் அழைத்தால், ஆட வர வேண்டும் – வந்துதான் ஆக வேண்டும் என்பது அவன் நினைத்த தர்மம்.

சகுனி ஒன்றும் சாதாரணமான ஆள் அல்ல. சமாதானமாகப் போய்விட வேண்டும் என்று துரியோதனனுக்கு எவ்வளவோ எடுத்துச் சொன்னவர்களில் அவனும் ஒருவன். துரியோதனன் அந்தப் பேச்சை ஏற்கவில்லை. பிறகு சகுனியும், துரியோதனனுக்காகப் போரிட்டான்.

இங்கே எது சரியானது? சூதாட்டம் நடந்தது சரியா, தவறா? இதை ஆராயப் புகுந்தால், ‘தர்மர் ஏன் அதற்கு இணங்கினார்?’ என்ற கேள்வி வரும். அவருக்கு சூதாட்டத்தில் ஒரு பலவீனம் உண்டு. தன்னால் வென்றுவிட முடியும் என்ற நினைப்பு அவருக்கு உண்டு. அதனால்தான் அவர் இணங்கினார்.

ஆனால் சூதாட்டத்தின் மூலம் பாண்டவர்களை அழித்துவிட வேண்டும் என்பது சகுனியின் திட்டம். அங்கே நேர்மைத் திறன் இல்லாததால், அதர்மம் புகுந்து விடுகிறது. 

இப்படி சிக்கல் நிறைந்திருப்பதால்தான், தர்மத்தின் பாதை மிகவும் சூட்சுமமானது என்று மஹாபாரதத்தில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஞானிகள் கூட அதை உணர்ந்து கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று வலியுறுத்தப்படுகிறது. 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன் 
(தொடரும்) 


தர்மம் – 9 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

6–7–2011 இதழ் தொடர்ச்சி... 

தர்மத்தின் சூட்சுமம், ஞானிகளுக்கே கடினமான விஷயம் என்றால், நாம் எல்லாம் இதை எவ்வளவு ஆராய வேண்டியிருக்கும்? ஒரு சிறிய பிரச்சனையாக இருந்தாலும், அதில் எது தர்மம் என்பதை ஆராய்ந்துதான் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 

பகவத் கீதையில் அர்ஜுனன், கிருஷ்ணரிடம் கேட்கிறான் : 

கார்ப்பண்ய தோஷா பஹதஸ்வபாவ:
ப்ருச்சாமி த்வாம் தர்மஸம்மூட சேதா:
யச்ஸ்ரேயஸான் நிஸ்சிதம் ப்ரூஹி தன்மே
சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்.

பிறர் பரிதாபப்படத்தக்க நிலையை அடைந்து விட்ட நான், தர்மம் எது என்று அறியாமல் மிகவும் குழம்பிப் போய் கிடக்கிறேன். எது நல்லது என்று நிச்சயம் செய்து எனக்குச் சொல். உன்னுடைய சிஷ்யன் நான். உன்னையே சரணடைந்து கேட்கிறேன். 

கேட்பது யார்? அர்ஜுனன், தர்மபுத்திரருடைய தம்பி. தர்மபுத்திரரோ, தர்மத்தை முழுதும் உணர்ந்தவர். தர்மமே அவதாரமாக வந்துள்ளவர். அவருடைய தம்பி யுத்தகளத்தில் நின்று கொண்டு, ‘எது தர்மம் என்று எனக்குப் புரியவில்லை’ என்று குழம்புகிறான். 

அவனுக்கு தர்மத்தை விளக்கிச் சொல்வதற்காக 700 ஸ்லோகங்களுக்கு மேல் சொல்லி, பகவத் கீதையை உபதேசம் செய்த கிருஷ்ண பரமாத்மா, கடைசி கட்டத்தில் அவரிடம் என்ன சொல்கிறார்? 

இதி மே ஞானமாக்யாதம்
குஹ்யாத் குஹ்யதரம் மயா
விம்ருச்யை ஏதத் அசேஷேண
யதேச்சஸி ததா குரு. 

ரகசியங்களில் எல்லாம் மிகப் பெரிய ரகசியமான ஞானத்தை உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன். இதை நன்றாக விமர்சித்து – அதாவது ஆராய்ந்து – அதன் பிறகு நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய். 

அங்கே அந்த சுதந்திரம் அர்ஜுனனுக்குத் தரப்படுகிறது – ‘நீ என்ன நினைக்கிறாயோ, அதைச் செய்’. 

வேறு எந்த மதத்திலும் இதைப் பார்க்க முடியாது. ‘முழுவதும் அனலைஸ் செய்து, அதன் பிறகு எது சரி என்று தோன்றுகிறதோ, அதைச் செய்’. 

– இந்த அணுகுமுறையைக் கடைபிடிக்கத்தான் நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். ஒவ்வொரு விஷயத்திலும் நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளாமல், எது சரி என்று முழுமையாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். 

தர்மத்தைச் சார்ந்த விதிமுறைகள் மாறுதல் அடைகின்றன என்பதையும் பெரியவர்களே, தர்ம சாஸ்திரங்களில் கூறியிருக்கிறார்கள். ப்ரஹஸ்பதி தன்னுடைய தர்ம சாஸ்திரத்தில் ஒரு விஷயத்தை வலியுறுத்துகிறார். நிறைய தர்ம நூல்கள் இருக்கின்றன. எப்படி மனுஸ்ம்ருதி இருக்கிறதோ, அப்படி ப்ரஹஸ்பதியினுடைய ஸ்ம்ருதியும் இருக்கிறது. 

(தொடரும்) 

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்


தர்மம் – 10 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

நாரத ஸ்ம்ருதி, விஷ்ணு ஸ்ம்ருதி, ப்ரஹஸ்பதி ஸ்ம்ருதி, பராசர ஸ்ம்ருதி... என்று பல இருக்கின்றன.

ப்ரஹஸ்பதி ஸ்மிருதியில் ‘எந்தெந்த விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் மக்களால் வெறுக்கத் தக்கவை ஆகிவிடுகின்றனவோ, அவற்றை விட்டுவிட வேண்டும்; காலத்திற்கேற்ப, விதிமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்’ – என்று கூறப்பட்டிருக்கிறது.

அதாவது – தர்ம சாஸ்திரத்திலேயே விதிமுறைகள் மாறத்தக்கவை என்று வருகிறது.

ஆகையால் இந்த விதிமுறைகள் மாறுதலுக்கு உட்பட்டவைதான். தர்மம் என்கிற தத்துவம் ஒன்று – அது நிலையானது; ஆனால் அதற்குட்பட்ட விதிமுறைகள் மாறுதலுக்குரியவை.

ஆக, தர்மம் என்பது சாஸ்வதம். அது ஒருவன் தன் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், காரியங்களைச் செய்வது என்று கொள்ளலாம். அது சாஸ்வதமானது. 
ஆனால் பெரும் ஜன சமூகத்தில் புழங்கும்போது எது சரியானது, எது தவறானது, எது தர்மம் என்று நிச்சயிக்கிற விதிமுறைகள் மாறுதலுக்குட்பட்டவைதான்.

இன்னொரு அம்சத்தைப் பார்ப்போம்.

மஹாபாரதத்தில் கிருஷ்ணர் எப்படி யுத்தம் நடத்தினார்? எனக்குப் புரிந்த வரையில் கிருஷ்ணர் தர்ம யுத்தமே செய்யவில்லை. அதர்ம யுத்தம்தான் அவர் செய்தார்.

‘அஸ்வத்தாமா ஹத: குஞ்சர’ – அதாவது அஸ்வத்தாமா என்ற யானை இறந்தது என்பதைப் பிரித்துச் சொல்லி, துரோணரை வில், அம்புகளைக் கீழே போடுமாறு செய்தது; கர்ணனை பலவீனப்படுத்தியது; சூரியன் அஸ்தமனமாகிற மாதிரி தோற்றத்தை ஏற்படுத்தி, ஒருவனை மாய்த்தது...’ என்று பல கட்டங்களிலும் தந்திரங்களை அவர் கையாண்டார்.

அதனால்தான் துரியோதனன் அடிபட்டு கீழே விழுந்து கிடக்கும்போது கிருஷ்ணரைப் பார்த்து, ‘உனக்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்கிறான்.

மேலும் ‘உன்னை மக்கள் இகழ மாட்டார்களா? ஒவ்வொருவரையும் இந்தந்த வகையில் நீ வென்றிருக்கிறாய். இது உனக்குக் கூச்சத்தை ஏற்படுத்தவில்லையா?’ என்று கேட்கிறான்.

அப்படி துரியோதனன் கேட்டபோது, தேவ வாத்தியங்கள் முழங்கின. நாற்புறமும் நறுமணம் வீசியது. தேவர்கள் அவன் மீது பூமாரி பொழிந்தார்கள் – என்று வியாஸர் சொல்கிறார். ஏனென்றால் துரியோதனன் பேசியது உண்மை.
கிருஷ்ணரே கூட ‘அவன் கூறுவது உண்மை. முற்றிலும் தர்ம யுத்தத்தை நாம் நடத்தியிருந்தால், நாம் ஜெயித்திருக்க மாட்டோம்’ என்றே சொல்கிறார்.

ஆனால் அவர் ஏன் இப்படியெல்லாம் செய்தார்?

‘லார்ஜர் குட்’.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்

(தொடரும்) 




தர்மம் – 11 – சோ 
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் 

சென்ற இதழ் தொடர்ச்சி...

‘லார்ஜர் குட்’ – பெருமளவில் நன்மை – அனேகம் பேருக்கு நன்மை – என்கிற நியாயம் முக்கியமானது.

நியாயம் நிலைநாட்டப்படுவதற்கு, யுத்தத்தில் பாண்டவர்கள் ஜெயிக்க வேண்டும். அந்தப் பெரிய நன்மைக்காக அங்கே யுக்திகளை கையாள வேண்டியதாகப் போயிற்று. அந்தப் பெரிய நன்மையை நினைத்துப் பார்க்கும்போது, யுத்த தந்திரங்கள் அதர்மம் என்று நிராகரிக்கப்படத் தக்கதல்ல என்று ஆகிவிடுகிறது.

இந்த அளவுக்கு சிந்தனை, இந்த பூமியில் நடைமுறைக்கு ஏற்றவாறு இருந்திருக்கிறது.

யோக்கியர்களை, சமூக விரோதிகளை போலீஸ் துறை எப்படி நடத்த வேண்டுமென்றால், தயை தாட்சண்யமில்லாமல்தான் நடத்த வேண்டும். இப்படி ஓர் உரிமை தரப்படுவதால், சில தவறுகள் நேர்ந்து விடலாம். ஆனால், இப்படி நடந்து கொள்ள போலீஸாருக்கு உரிமை இருந்தால்தான், சமுதாயத்திற்கு நன்மை என்கிற – லார்ஜர் குட் – சாதிக்கப்படும்.

ஆகையால் ‘பெருமளவில் நன்மை’ என்பதை சமூக அளவிலும், ‘மனசாட்சியின்படி யோசித்து நடப்பது’ என்பதை தனிமனித அளவிலும், கொண்டு பார்க்கும்போது, எது சரியாக அமைகிறதோ, அதுதான் தர்மம். 
‘ஸ்வதர்மம்’ என்பது மனசாட்சியின்பாற்பட்டது. லார்ஜர் குட் என்ற ‘பெருமளவில் நன்மை’ என்பது சமுதாயத்தின் பாற்பட்டது. இவை இரண்டுக்கும் இணக்கமாக எது அமைகிறதோ, அது தர்மம். இதுதான் என் கருத்து.

எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால்தான் இதைச் செயலாற்ற முடியும். நமது நூல்களில் ஒற்றுமை மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

ரிக் வேதத்தில் ஒன்று வருகிறது :

ஸமானோ மந்த்ர: ஸமிதி ஸமானி
ஸமானம் மன: ஹை சித்தமேஷாம்
ஸமானம் மந்த்ரபி மந்த்ரேய வ:
ஸமானேன வா ஹவிஷா ஜுஹோமி.


உங்களுடைய வழிபாடு ஒத்த கருத்துடன் அமையட்டும். உங்களுடைய கூட்டங்கள் எல்லாம் ஒற்றுமையுடன் இயங்கட்டும். உங்களுடைய மனமும், எண்ணமும் ஒற்றுமையுடன் இருக்கட்டும். உங்கள் அனைவருக்கும் பொதுவாக இந்த ஆஹுதியைக் கொண்டு, நான் வழிபாட்டை நடத்துகிறேன்.

இதில் வர்ணம் எதுவும் கிடையாது. ஒட்டு மொத்தமான சமூகத்திற்குமாகச் சேர்த்து இது கூறப்படுகிறது. ஒற்றுமையும், சமத்துவமும் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகிறது. இந்த ஒற்றுமையை மனதில் கொண்டு, அதன் அடிப்படையில் ஒவ்வொருவரும், தனது மனசாட்சிக்கு ஏற்ப, பொது நன்மையை உத்தேசித்து செயல்பட்டால், அதுதான் தர்மமாகும் என்பது என் கருத்து.

தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்