Friday, October 28, 2011

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

“காமராஜைக் கொல்ல முயற்சி!” – கே.சி.லட்சுமி நாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 4

ஜீவானந்தம், அய்யாமுத்து போன்ற சிந்திக்கத் தெரிந்தவர்கள் வெளியேறி விட்ட பிறகு, ஈ.வெ.ரா.வின் சுயமரியாதை இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும், விடுதலைப் போர் வீரர்களுக்கு எதிராக வன்முறை வழிகளை ஆவேசத்துடன் பின்பற்றின.

கூட்டங்களில் கலகம் செய்வது, கற்களை வீசி எறிவது, பாம்புகளை விடுவது, கறுப்புக் கொடிகளைக் காட்டுவது, சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தடி கொண்டு தாக்குவது, ஆபாசச் சொற்களில் ஏசுவது... போன்ற வன்முறைக் காரியங்களை அவர்கள் செய்தார்கள். ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பரிபூரணமான தூண்டுதலும், ஆதரவும் அவர்களுக்கு இருந்தன.

“விடுதலைப் போர் வீரர்கள் வன்முறைக்கு ஆளானால் திருப்பித் தாக்கக் கூடாது” என்ற மகாத்மா காந்தியின் கட்டளை அப்படியே பின்பற்றப்பட்டது. இன்றைய தினம் இதை நம்புவது கடினம். ஆனால், இவ்வாறுதான் விடுதலைப் போர் வீரர்கள், அஹிம்சை நெறி பிறழாமல் ஒவ்வொரு சத்தியாக்கிரகத்தின் போதும் நடந்து கொண்டார்கள் என்பது வரலாறு.

ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் விடுதலைப் போர் வீரர்களை எதிர்த்துப் பல நூறு வன்முறை நிகழ்ச்சிகளை அரங்கேற்றினார்கள். இவற்றில் பலவற்றை ம.பொ.சி.யின் ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற ஆய்வு நூல் பட்டியல் இட்டுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்காகப் போராடிய பல காங்கிரஸ் தலைவர்கள், தமிழகத்திற்கு அவ்வப்போது இயக்கப் பணிகளை ஒட்டி வந்தார்கள். அவ்வாறு வந்த மகாத்மா காந்தி, நேருஜி, பாபு ராஜேந்திர பிரசாத், அபுல்கலாம் ஆஸாத்.... போன்ற தலைவர்களை ஜஸ்டிஸ் கட்சியினரும், சுயமரியாதை இயக்கத்தினரும் எதிர்த்து வன்முறை ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள். தேசியத் தலைவர்கள் அவற்றைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டார்கள்.

பட்டுக்கோட்டை நிகழ்ச்சி 
ந்தியாவின் விடுதலைக்காகப் போராடிய காங்கிரஸ் மகாசபையின் பொன்விழா நிகழ்ச்சி 1934– ஆம் ஆண்டில் நடந்தது. அந்த ஆண்டில் கட்சியின் தலைவராக பாபு ராஜேந்திர பிரசாத் விளங்கினார். அவர் விடுதலைப் போரில் பலமுறை சிறை சென்ற தீரர். அவர் காந்தியடிகளை முழுக்க முழுக்கப் பின்பற்றியவர்; அஹிம்சையின் வடிவமாகத் திகழ்ந்தவர்; தமது பெரும் செல்வத்தை அழித்து விடுதலை இயக்கத்தை வளர்த்தவர்.

இந்தியா விடுதலை அடைந்த பிறகு, பாபு ராஜேந்திர பிரசாத் இந்தியக் குடியரசுத் தலைவர் என்ற மிக உயர்ந்த பொறுப்பை வகித்தார். அவர் 1934– ஆம் ஆண்டில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்தார். அவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, அவரது சுற்றுப் பயண ஏற்பாடுகளை சர்தார் வேதரத்தினம் பிள்ளை செய்திருந்தார்.

பாபு ராஜேந்திர பிரசாத் பட்டுக்கோட்டை நகருக்குச் சென்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்நாட்களில் பட்டுக்கோட்டை நகரில் சுயமரியாதை இயக்கத்தினரும், ஜஸ்டிஸ் கட்சியினரும் வலிமையாக இருந்தார்கள். பாபு ராஜேந்திர பிரசாத்தும், வேதரத்தினம் பிள்ளையும் கண்ணியமற்ற ஒரு கூட்டத்தில் சிக்கிக் கொண்டார்கள்.

“கூட்டத்தினர் ராஜேந்திர பிரசாத்துக்கு எதிராக ஒரு பெரிய கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சாந்த சொரூபியான அவருடைய சட்டையைப் பிடித்து இழுத்துக் கிழித்தனர். கறுப்புக் கொடி ஏந்தியவர்கள் அவரைக் குச்சியால் குத்தினர்” என்று ‘சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாற்று நூல்’ வேதனையுடன் தெரிவிக்கிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க வேதாரண்யம் உப்புச் சத்தியாக்கிரகத்தை ராஜாஜி நடத்தியபோது, அவருக்கு வலதுகரமாக விளங்கியவர் வேதரத்தினம் பிள்ளை என்பதையும், பின்னர் அவருக்கு ‘சர்தார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்டது என்பதையும் இங்கே குறிப்பிடலாம்.

ஒழிக்க முயற்சி

காமராஜ் ஓர் எளிய குடும்பத்தில் தோன்றியவர். அவர் மிக இளம் வயதில் விடுதலை வேட்கை கொண்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கு கொண்டார். கட்சிப் பணிகளை நன்கு ஒருங்கிணைத்துப் பணிபுரிவதில் மிகவும் வல்லமை வாய்ந்தவர் என்று பலரும் காமராஜைப் பாராட்டிப் பேசலானார்கள். ஜஸ்டிஸ் கட்சியினருக்கு அவர் சிம்ம சொப்பனமாக விளங்கினார். 





காமராஜை தீர்த்துக் கட்ட நடந்த ஒரு கொடிய முயற்சியை, விடுதலைப் போராட்ட வீரரும், தமது குடும்பச் சொத்தை அழித்துத் தேசிய இயக்கத்தை வளர்த்தவரும், சென்னை மாகாண முதலமைச்சராக இருந்தவருமான பி.எஸ்.குமாரசாமி ராஜாவின் வாழ்க்கை வரலாற்று நூல் விவரிக்கிறது. அதனைப் படியுங்கள்:–

“ஒரு முறை விருதுப்பட்டி சந்தைக்குச் சென்ற வண்டிகள் இரவில் திரும்பி வருகிறபோது, ஊர் சாலையில் ஒரு மனிதர் மயக்கமுற்றுக் கிடப்பதைக் கண்ட வண்டிக்காரர்கள், ஓடோடி அருகில் சென்று பார்த்தபோது, சாலையில் கிடந்தவர், தலையில் அடிபட்டு வெளியேறிய ரத்தம் உடலெங்கும் பரவிப் பயங்கரமான தோற்றத்துடன் இருப்பதைப் பார்த்துப் பதறிப் போய் விட்டார்கள். மெல்லப் புரட்டிப் பார்த்தபோது, பி.எஸ்.கே. வீட்டிற்கு அடிக்கடி விருதுப்பட்டியிலிருந்து வருகின்ற விடுதலைப் போராட்ட வீரர் காமராஜ் என்பதை அடையாளம் தெரிந்து, திகைத்துப் பின், தூக்கி வண்டியில் கிடத்தினார்கள்.

“முதல் உதவியாக சில பச்சிலைகளைப் பறித்து வந்து அடிபட்ட இடத்தில் வைத்துக் கட்டினார்கள். வண்டியை விரைவாக ஓட்டினார்கள். ‘பளபள’வென விடிகிற நேரத்தில், பி.எஸ்.கே. வீட்டு முன்னர் வண்டியை நிறுத்தி விட்டு, உள்ளே சென்று தகவலைத் தெரிவித்ததும், ஓடி வந்தார் பி.எஸ்.கே.. வண்டியை நேராக மருத்துவமனைக்கு விடும்படி வேண்டினார். மருத்துவமனையில் ஏறத்தாழ நாற்பது நாள்கள் இருந்த காமராஜ், அங்கிருந்து ‘காங்கிரஸ் மாளிகை’க்கு வந்து ஒரு வாரம் தங்கியிருந்து, பின்னர் விருதுப்பட்டிக்குச் சென்றார். விருதுப்பட்டி ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள், விடுதலைப் போராட்டக் காங்கிரஸ் பணிகளை விருதுப்பட்டியில் விறுவிறுப்பாக ஆற்றிக் கொண்டிருக்கும் இளைஞர் காமராஜை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில், இத்தகைய இழிவான நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார்களென்பதைக் காங்கிரஸ் போராட்ட வீரர்கள் பின்னால் அறிந்து கொண்டனர்.”

– இவ்வாறு ‘பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாற்று நூல்” தெரிவிக்கிறது.
(அக்காலத்தில் விருதுநகரை விருதுப்பட்டி என்று அழைப்பது வழக்கம்.)

கொல்ல முயற்சி

1935– ஆம் வருட டெல்லி சட்டசபைத் தேர்தலிலும், 1936–ஆம் வருடச் சென்னை மாகாணச் சட்டசபைத் தேர்தலிலும் விடுதலை இயக்கமான காங்கிரஸ் மகாசபை வேட்பாளர்களை ஆதரித்து சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

“அதனால் கோபம் கொண்ட ஜஸ்டிஸ் கட்சியினர், ம.பொ.சி.யை வீடு புகுந்து தாக்கிக் கொலை செய்ய முயன்றனர்.”
‘கொலை செய்ய முயற்சி’ என்ற துணைத் தலைப்பில், இந்த முயற்சி குறித்து ம.பொ.சி.யே, ‘எனது போராட்டம்’ என்ற அவரது நூலில் எழுதியிருக்கிறார்.

அந்த நூல் அவர் தி.மு.க.வினருடன் உறவு கொண்டிருந்த காலத்தில் எழுதப்பட்டது ஆகும்!

சுயமரியாதை இயக்கம் தொடர்பாக ஈ.வெ.ரா. தன் விருப்பப்படி காரியங்கள் நடத்திக் கொண்டிருந்தார். அதனை விரும்பாத சௌந்தர பாண்டியனும், அவரது சில தோழர்களும் சுயமரியாதைச் சங்கத்தைப் பதிவு செய்தார்கள். ‘ரிஜிஸ்டர்ட் சுயமரியாதை சங்கம்’ என்று அது அழைக்கப்பட்டது.

‘சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கொண்டது இல்லை’ என்று பி.டி.ராஜன் பகிரங்கமாகக் கூறினார். 1931– ஆம் ஆண்டில் சேலம் நகரில் சுயமரியாதைச் சங்கக் கூட்டத்தை அவர் ஆரம்பித்து வைத்துப் பேசினார். அவரது பேச்சு ஈ.வெ.ரா.வின் ‘குடியரசு’ இதழில் வெளியாயிற்று.

அப்போது அவர், “சுயமரியாதை இயக்கம் நாத்திக இயக்கம் இல்லை” என்று பிரடகனம் செய்தார்.

ஏற்கெனவே, ஜஸ்டிஸ் கட்சியில் மிகவும் கணிசமான ஒரு பிரிவினர், ஈ.வெ.ரா.வின் கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்க மறுத்தார்கள். ஈ.வெ.ரா.வுக்கும், ஜஸ்டிஸ் கட்சிக்கும் இடையே ஒரு முக்கியமான கருத்து வேறுபாடாக அது காணப்பட்டது.

பின்னர், சுயமரியாதை இயக்கத்திலும் இந்தப் பிரச்சனை கடுமையாக எழுந்தது. பி.டி.ராஜன் தீவிரமான ஆத்திகராகவே விளங்கினார். அந்நாட்களில் தமிழகத்தில் ஐயப்பன் வழிபாடு ஓர் இயக்கமாக அமைந்ததற்கு பி.டி.ராஜனின் பங்கே மிகவும் கணிசமானது என்று சொல்லுவார்கள். அவரது புதல்வர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன் நெற்றியில் திருநீறு, குங்குமத்துடன்தான் எப்போதும் காணப்படுவார். 

“இந்தியாவுக்குச் சுதந்திரம் வழங்கினாலும், சென்னை மாகாணத்தை மட்டும் பிரிட்டனின் அடிமை நாடாக வைத்திருக்க வேண்டும்” என்று கெஞ்சிய ஒரு தீர்மானத்தைத் திருவாரூரில் கூடி ஈ.வெ.ரா. நிறைவேற்றினார்! விவரம் அடுத்த வாரம்.

(தொடரும்)

ஆதார நூல்கள்: 

1. தியாகத் திருமகனார் பி.எஸ்.கே. (பி.எஸ்.குமாரசாமி ராஜா வாழ்க்கை வரலாறு) எழுதியவர்: ‘எழுத்துச் செம்மல்’ குன்றக் குடி பெரிய பெருமாள். வெளியிட்டோர்: அமரர் பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு விழாக் குழு, இராஜபாளையம் (1999).

2. மறைக்காட்டில் ஒரு மாணிக்கம் (சர்தார் வேதரத்தினம் பிள்ளை வாழ்க்கை வரலாறு) வெளியிட்டோர்: கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் வெளியீட்டுப் பகுதி, வேதாரண்யம் (1986).

3. எனது போராட்டம் (1007 பக்கங்கள்) எழுதியவர்: ம.பொ.சிவஞானம், வெளியிட்டோர்: இன்ப நிலையம், மயிலாப்பூர், சென்னை -4 (1974).