Monday, October 3, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – 1 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 37

குறிப்பு : வாசகர்களுக்கு, ஒரு வார்த்தை. இந்தப் பகுதியில், டெலிவிஷன் தொடரில் வந்ததை, வார்த்தை பிசகாமல், அப்படியே நாங்கள் பிரசுரிக்கவில்லை. முன்பு எழுதியது, சில மேடைகளில் பேசியது போன்றவையும் இந்தக் கட்டுரைகளில் சேர்க்கப்படுகின்றன; இது தவிர, டெலிவிஷனிலும், முன்பு எழுதியதிலும் விட்டுப் போன விஷயங்களும் இந்தத் தொடரில் சேர்க்கப்படுகின்றன.

– சோ

(இந்தப் பகுதியில் வெளியாகிற கேள்விகளை, ‘கேள்வி கேட்பவர்’ என்று குறிப்பிட்டே பிரசுரித்து வருகிறோம். ஜெயா டி.வி.யில் ஒளிபரப்பான ‘எங்கே பிராமணன்?’ தொடரில், இந்தக் கேள்விகளை எல்லாம் கேட்டு வந்த நண்பருக்கு வருத்தம். ‘நான் என்ன அனாமதேயமா?’ என்று அவர் கோபப்படுகிறார். ஆகையால், அவர் பெயர் மற்றும் படம், இந்த இதழில் பிரசுரமாகிறது; இது அவருக்காக...

இனி வருகிற வாரங்களில் அவருடைய பெயரும், படமும் பிரசுரம் ஆகாது; இது வாசகர்களுக்காக.)

நாராயண ஸ்வாமி

கேள்வி கேட்பவர் (நாணி எனப்படும் நாராயண ஸ்வாமி): ஹிந்து மதத்தில் கூறுகிற தர்மம் என்பது என்ன? சட்டமா? நியாயமா? ஏதாவது நெறிமுறையா? என்ன அது?

சோ : நீங்கள் குறிப்பிட்ட எல்லாமே தர்மம் என்ற சொல்லில் அடங்கும். அது மட்டுமல்ல. சாஸ்திரம் சொல்கிறபடி நடப்பது; நீதி; நேர்மையான செயல்; சத்தியம்... என்று பல விஷயங்கள் தர்மம் என்ற சொல்லில் அடங்கும். மற்ற மதங்களில் இப்படி ஒரு சொல் இல்லை. ‘ட்ருத்’ – ‘மொராலிட்டி’ – ‘எதிக்ஸ்’ – ‘லா’ – ‘ஜஸ்டிஸ்’ – ‘குட் காண்டக்ட்’ – ‘ஹானஸ்டி’ – ‘கம்பாஷன்’ – ‘சாரிட்டி’... என்று பல சொற்கள், மற்ற மதங்களிலும், மற்ற நாகரீகங்களிலும் கையாளப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய சொல் ‘தர்மம்’.

‘தர்மம்’ என்கிற வார்த்தை ஸம்ஸ்கிருதத்தில் ‘த்ரு’ என்ற வேரிலிருந்து வருகிறது. ஆதரிப்பதற்கும், காப்பாற்றுவதற்கும், தாங்குவதற்கும், வளர்ப்பதற்கும் கூறப்படுவது ‘த்ரு’. இந்த வேரிலிருந்துதான் தர்மம் என்கிற சொல் வருகிறது. அதாவது எது ஒன்று ஆதரிக்கப்பட வேண்டுமோ, எது ஒன்று காப்பாற்றப்பட வேண்டுமோ, எது ஒன்று வளர்க்கப்பட வேண்டுமோ – அதுதான் தர்மம்.

அதன் வீச்சு அசாத்தியமானது. அதுமட்டுமல்ல – ‘தர்மம்’ சூட்சுமமானது. அதாவது, பல சிக்கலான நேரங்களில் ‘இதுதான் தர்மம்’ என்று எடுத்த எடுப்பிலேயே ஆராயாமல் கூறிவிட முடியாது. தோற்றத்திற்கு தர்மம் போல் தெரிவது, உண்மையில் அதர்மமாக இருக்கலாம்; பார்வைக்கு அதர்மமாகத் தெரிவது, உண்மையிலேயே தர்மமாக இருக்கலாம். இதனால்தான், தர்மம் சூட்சுமமானது என்று சொல்லப்படுகிறது.

‘யுத்த தர்மம்’ என்று கூறுகிறோம். சாதாரண சமயங்களில், ஒருவனை தாக்குவதும், கொல்வதும் கூடாது. அது அதர்மம். ஆனால் யுத்தத்தில், அது தர்மம். போரில் வீரத்தைக் காட்டி பிறரை வீழ்த்துவது க்ஷத்ரிய தர்மம்.

இப்படியெல்லாம் பல கோணங்கள், அம்சங்கள் இருப்பதால்தான் தர்மம் எது என்பதை ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.

சரி, ‘எதுதான் தர்மம்?’ என்று கேட்டால், அதற்கும் தர்ம சாஸ்திரங்களிலேயே விளக்கம் இருக்கிறது. விருப்பு, வெறுப்பு அற்றவனாக, தவறான நடத்தை இல்லாதவனாக, எல்லோரையும் நேசிப்பவனாக உள்ள கற்றறிந்தவன், தன்னுடைய மனசாட்சிக்கு உகந்தவாறு எதை ஏற்கிறானோ, அது தர்மம்; அவன் எதை நிராகரிக்கிறானோ அது அதர்மம்.

கேள்வி : இந்த விளக்கம், முழுமையான தெளிவை ஏற்படுத்தி விடுகிறதா? எல்லா நேரங்களுக்கும் இது பொருந்தி விடுமா?

சோ : இந்த விளக்கம் கூட போதாதுதான். பல சமயங்களில் எது தர்மம் என்பதில் முரண்பாடுகள் ஏற்படத்தான் செய்யும்.