Monday, October 3, 2011

எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள்

தர்மம் – 2 – சோ
எங்கே பிராமணன்? - டெலிவிஷன் விளக்கங்கள் – 38

சென்ற இதழ் தொடர்ச்சி...

மஹாபாரதத்தில் கர்ணனை எடுத்துக் கொள்வோம். துரியோதனன் செய்த தவறுக்கெல்லாம் அவன் துணை போனான். ‘இதைச் செய் என்று துரியோதனன் கூற வேண்டிய அவசியமில்லை. இதைச் செய்தால் துரியோதனனுக்குப் பிடிக்கும் என்று நான் நினைத்தால் போதும். அதைச் செய்து விடுவேன்’ என்ற அளவுக்கு கர்ணன் போகிறான்.

அவனிடம் குந்தி வந்து எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்க்கிறாள். கிருஷ்ண பரமாத்மாவே மன்றாடுகிறார். ஆனால் அவர்களுடைய வேண்டுகோள்களை மறுத்து, துரியோதனன் பக்கமே கர்ணன் நிற்கிறான்.

இத்தனைக்கும், யுத்தத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதையெல்லாம் கர்ணன் விரிவாகவே எடுத்துச் சொல்கிறான். துரியோதனன் தரப்பில் உள்ள ஒவ்வொருவரும் எப்படி அடிபட்டு வீழப் போகிறார்கள் என்பதையெல்லாம் ஒரு ‘ட்ரெய்லர்’ காட்டுகிற மாதிரி அவன் காட்டுகிறான். ‘

‘இதெல்லாம் எனக்குத் தெரிகிறது; ஆனால், நான் துரியோதனன் பக்கம்தான் போரிடுவேன்’ என்று அவன் கூறிவிடுகிறான். அது அவனுடைய தர்மம். அவன் துரியோதனனுக்குப் பட்ட நன்றிக் கடன். அதைத் தீர்ப்பதை அவன் மிகப் பெரிய தர்மமாக நினைத்தான்.

கேள்வி : ராமாயணத்தில், விபீஷணன் நடத்தைக்கு இது பொருந்தாதே?

சோ : உண்மைதான். கர்ணனைப் போல விபீஷணன் நடந்து கொள்ளவில்லை. ராவணனிடத்தில் எவ்வளவோ எடுத்துச் சொன்னான்.

ஆனால் இவனுடைய அறிவுரைகளைக் கேட்ட ராவணன், இவனை அவமதித்தான்.

‘அப்படியானால் நான் போகிறேன்’ என்று சொல்லி, விபீஷணன் கட்சி மாறி விட்டான். இந்த நாட்டில் முதன் முதலாகக் கட்சி மாறியவன் விபீஷணனாகத்தான் இருக்க வேண்டும். அவன் இவ்வாறு செய்ததில் கொஞ்சம் சுயநலமும் கலந்துதான் இருந்தது.

அவன் ராவணனை விட்டு ராமரிடம் சென்றபோது தூரத்தில் இருந்து அவனைப் பார்த்த ஸுக்ரீவன் போன்றவர்கள், ‘அவனைக் கொன்றுவிட வேண்டும்’ என்று கூறுகிறார்கள்.

‘எதிராளியிடமிருந்து வருவதால், அவனிடமிருந்து ஆபத்துதான் வரும்’ என்று எண்ணி அவர்கள் இப்படிச் சொன்னார்கள்.

ஆனால் ராமரோ, அவனைப் பார்த்த உடனேயே, ‘இவனால் ஆபத்து கிடையாது; அவனைப் பார்த்தாலே தெரிகிறது. அவன் ராஜ்யத்தின் மீது நேசம் வைத்துள்ளவன்; அதனால்தான் நம்மிடம் வருகிறான்; ஆபத்து இல்லை’ என்று சொல்லி விடுகிறார்.

ஆனால், ராவணன் சபையில் எவ்வளவோ நல்லதை எடுத்துச் சொல்லியும் அது எடுபடாமல் போனதாலும், அங்கே தான் அவமதிக்கப்பட்டதாலும்தான் – விபீஷணன் வெளியேறி ராமரை சரணடைந்தான். அது அவன் கண்ட தர்மம்.

அதே ராமாயணத்தில் கும்பகர்ணன் என்ன செய்தான்? அவனும் ராவணனுக்கு எவ்வளவோ அறிவுரை சொன்னான்.