Wednesday, January 11, 2012

இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

72 – க்கும், 26 – க்கும் திருமணம்! – கே.சி.லட்சுமிநாரயணன் 
இதுதான் திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு - 11

‘தி
ருவண்ணாமலையில் ராஜாஜியைத் தாம் சந்தித்துப் பேசியது தமது சொந்த விஷயம்’ என்று அண்ணாதுரைக்கும், ஜி.டி.நாயுடுவுக்கும் கோவை மாநாட்டில் கோபத்துடன் பதில் அளித்த ஈ.வெ.ரா., பிறகு அதே மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் தாமாகவே இந்த விஷயத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.

“எனக்குப் பின் கட்சிக்கும், என் சொந்தத்திற்கும் அடுத்த வாரிசு ஏற்படுத்த வேண்டும். இதை விரைவில் செய்யப் போகிறேன்” – என்று ஈ.வெ.ரா. கோவை மாநாட்டில் தமது உரையில் தெரிவித்தார். 1.6.1949 தேதிய ‘விடுதலை’ இதழில் அந்தப் பேச்சு வெளியானது.

அந்தப் பேச்சுக்கு வலு தரும் விதமாக, ‘விளக்கம்’ என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை ஈ.வெ.ரா. 19.6.1949 தேதி ‘விடுதலை’யில் கையொப்பமிட்டு எழுதினார்.

“இயக்க விஷயத்தில் எனக்கு, இதுவரை அலைந்ததுபோல் அலைய உடல்நலம் இடம் கொடுக்கவில்லை. என்னைப் போல் பொறுப்பு எடுத்துக் கொள்ளத்தக்க ஆள் யார் இருக்கிறார்கள் என்பதில், எனக்கு நம்பிக்கை உள்ளவர்கள் கிடைக்கவில்லை. ஆதலால், எனக்கு வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி, அவர் மூலம் ஏற்பாடு செய்து விட்டுப் போக வேண்டும் என்று அதிக கவலை கொண்டு இருக்கிறேன். இது பற்றி சி.ஆர்.(ராஜாஜி) அவர்களிடம் பேசினேன்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. கூறினார். அடுத்து ஈ.வெ.ரா. மற்றோர் அறிக்கையை வெளியிட்டார்.

“எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படிக்கான வாரிசாக ஒருவரை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமும் ஆகும். ஆகையால், நான் ஐந்தாறு வருடங்களாகப் பழகி, நம்பிக்கை கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் உண்மையான பற்றும், கவலையும் கொண்டு நடந்து கொண்டிருக்கிறதுமான மணியம்மையை எப்படியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு, அந்த வாரிசு உரிமையையும், தனிப்பட்ட தன்மையையும் சேர்த்து, மற்றும் 4, 5 பேர்களைச் சேர்த்து இயக்க நடப்பிற்கும், பொருள் பாதுகாப்பிற்குமாக ஒரு டிரஸ்ட் பத்திரம் எழுதி வைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். பத்திரம் எழுதப்படவிருக்கிறது. அது சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக என்று, நமது இஷ்டத்திற்கு விரோதமாகச் சில சொற்கள் பயன்படுத்த நேரிட்டால், அதனால் கொள்கையே போய்விட்டது என்றோ, போய்விடும் என்றோ பயப்படுவது உறுதியற்ற தன்மை ஆகும்” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. எழுதி இருந்தார்.

‘அந்த அறிக்கையில், ‘சட்டப்படி செல்லுபடி ஆவதற்காக’ என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தின் ரகசியத்தை அனைவரும் புரிந்து கொண்டார்கள். மணியம்மையைப் பெரியார் மணக்கப் போகிறார் என்பதுதான் அந்த வாசகத்தின் உண்மைப் பொருள் ஆகும்’ என்று, பல வருடங்களுக்குப் பிறகு, கருணாநிதி தமது ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் எழுதி இருந்தார். 
28.6.1949 தேதிய ‘விடுதலை’யில் மற்றொரு விளக்க அறிக்கையை ஈ.வெ.ரா. எழுதி வெளியிட்டிருந்தார்.

“என்னிடம் அன்பும், எனது நலத்தில் கவலையும் உள்ளவர்களுக்கும் சற்றுப் புரட்சியாகவும், திடுக்கிடக் கூடியதாகவும், இயக்கமே அழிந்து விடுமோ என்று பயப்படக் கூடியதாகவும், எனக்கு ஒரு கெட்ட பெயரும், இழிவும் ஏற்படக் கூடிய பெரிய தவறாகவும் கூடக் காணப்படுவதாகத் தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் ஈ.வெ.ரா. குறிப்பிட்டிருந்தார்.

“என்னைப் பற்றியும், இயக்கத்தைப் பற்றியும், இயக்க நடப்பைப் பற்றியும், எனக்குப் பின்னும் ஓர் அளவுக்காவது இயக்கம் நடைபெற வேண்டும் என்பது பற்றியும் மிகக் கவலையுடனும், பற்றுடனும் சிந்தித்து நடக்க வேண்டியவனாகிறேன்” என்றும் அதில் எழுதி இருந்தார்.

மணியம்மையுடன் ஈ.வெ.ரா.வுக்கு நடக்கவிருந்த திருமணம் குறித்துக் கழகத் தோழர்களின் கவலையையும், வருத்தத்தையும் அகற்றும் ஒரு முயற்சியாக இந்த அறிக்கையை ஈ.வெ.ரா. வெளியிட்டார் என்று கருதலாம்.

அண்ணாதுரை கண்டனம்


1949-ஆம் ஆண்டு மே 14-ஆம் தேதியன்று திருவண்ணாமலையில் ராஜாஜியுடன் சந்திப்பு; 28.5.1949 அன்று கோவை மாநாட்டில் கேள்விகள்; பின்னர் ஈ.வெ.ரா.வின் அறிவிப்பு; 19.6.1949 ‘விடுதலை’யில் விளக்க அறிக்கை; பிறகு அந்த விளக்கத்திற்குப் பலம் தேட 28.6.1949 அன்று மற்றோர் விளக்க அறிக்கை – என்றெல்லாம் நிகழ்ந்து முடிந்ததும், திராவிடர் கழகத்தில் உள்ளபடியே ஒரு சுனாமி படு பயங்கரமாகத் தோன்றியது.

அப்போது ஈ.வெ.ரா.வுக்கு வயது 72; மணியம்மைக்கு வயது 26. 72 வயதுக் கிழவர், 26 வயது இளம் பெண்ணைத் திருமணம் என்ற பெயரில் சிதைத்து நாசமாக்கலாமா என்ற கேள்வி, கழக உறுப்பினர்களிடையே எழுந்தது.
அண்ணாதுரை 3.7.1949 தேதிய ‘திராவிட நாடு’ இதழில், ஈ.வெ.ரா.வின் இந்த அடாத நடவடிக்கை குறித்து நீண்டதொரு கட்டுரையை எழுதினார். ‘வெட்கப்படுகிறோம்! வேதனைப்படுகிறோம்! இல்லை; விரட்டப்படுகிறோம்’ – என்பது கட்டுரையின் தலைப்பு.

ஈ.வெ.ரா – மணியம்மை விவாகத்தைப் ‘பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை விவரித்தார்.

“காமப்பித்து கொண்டு அலையும் ஆண்கள் வயோதிகப் பருவத்திலே, வாலிபப் பெண்ணை சொத்து சுகம் கிடைக்கும் என்று ஆசை காட்டியோ, வேறு எந்தக் காரணம் காட்டியோ திருமணத்துக்குச் சம்மதிக்கச் செய்தால், மான ரோஷத்தில் அக்கறை உள்ள வாலிபர்கள் அந்தத் திருமணம் நடைபெற இடம் தரலாமா என்று ஆயிரமாயிரம் மேடைகளில் முழக்கம் இட்டவர் ஈ.வெ.ரா.” என்று சுட்டிக் காட்டிய அண்ணாதுரை, “இப்படிப்பட்ட அறிவுரையைப் புகட்டியவர், தமது 72-ஆம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால், கண்ணீரைக் காணிக்கையாகத் தருவது தவிர, வேறென்ன நிலைமை இருக்கும்!” என்று கேட்டார்.

சீர்திருத்த இயக்கம் என்று சொல்லிக் கொண்டு, 72-க்கும் 26-க்கும் திருமணம் நடத்துகிறார்களே என்று கேலி பேசுவதைக் கேட்டு, நெஞ்சு வெடிப்பதாகவும் அண்ணாதுரை குறிப்பிட்டார்.

“முத்தம் இடவந்த குழந்தையின் மூக்கைக் கடித்து எறியும் தாயை நாங்கள் கண்டதில்லை. தந்தையே! நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் செய்து எங்கள் தன்மானத்தை அறுத்து எறிவது ஏன்? என்ன குற்றம் இழைத்தோம்? ஏன், என்றும் அழியாத அவமானத்தைத் தேடித் தருகிறீர்?” என்று அடுக் கடுக்கான கேள்விகளை ஈ.வெ.ரா.வை நோக்கி அண்ணாதுரை எழுப்பினார்.

“எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும், சமர்த்தான விளக்கம் உரைத்தாலும், 72-26 – இதை மறுக்க முடியாதே! இது பொருந்தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே” என்று அண்ணாதுரை சுட்டிக் காட்டினார்.

ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்வதற்கும், இயக்கப் பணி புரிவதற்கும் திராவிடர் கழகத்தில் பெண்கள் ஏற்கெனவே இருந்தார்கள். ஈ.வெ.ரா.வின் சகோதரர் மகள்கள் – கிருஷ்ணசாமி நாயக்கரின் மகள் மிராண்டா சில மாநாடுகளில் கலந்து கொண்டு வேலை செய்தார். இவ்வாறு குடும்பப் பெண்களும், பிறரும் தயாராக இருந்த நிலையில் அவர்கள் யாருமே தேவைப்படவில்லை, மணியம்மை வர நேரிட்டது. அவர் கழகத்திற்குள் வந்ததும், ‘புயல் நுழைகிறது என்று கருதியவன் நான்; புல்லன் என்று தூற்றப்பட்டேன், அதனால்...’ என்று – அண்ணாதுரை, மணியம்மை பிரவேசித்தபோதே தாம் எதிர்த்ததை எடுத்துக் காட்டினார். 
மணியம்மை, ஈ.வெ.ரா.வின் வளர்ப்புப் பெண் என்று அறிமுகப் படுத்தப்பட்டார். அந்த வளர்ப்புப் பெண் இன்று ஈ.வெ.ரா.வின் மனைவி ஆகிறார் என்று கிண்டலுடனும், அண்ணாதுரை கூறினார்!

ஈ.வெ.ரா – மணியம்மை திருமண ஏற்பாடு திராவிடர் கழகத்தில் நிர்வாகப் பொறுப்பிலோ, அல்லது மாவட்ட அளவிலான பொறுப்புகளிலோ இருந்தவர்களில் எவருக்கும் தெரியாமல் ரகசியமாக நடைபெற்றது.

“முன்னாள் அமைச்சர் முத்தையா முதலியார் மற்றும் ஈ.வெ.ரா.வுக்குப் பணிவிடை செய்தவர்களில் முக்கியமான ஒருவராகிய சி.டி.டி.அரசு, ஈ.வெ.ரா.வுடன் நெருக்கமாக இருந்த என்.வி.நடராசன், ஈ.வெ.ரா. அண்ணன் மகனாகிய ஈ.வெ.கி.சம்பத், ‘விடுதலை’ ஆசிரியர் குருசாமி, பொருளாளர் கோவிந்தசாமி ஆகியவர்களில் எவருடனும் தமது திருமணம் குறித்து ஈ.வெ.ரா. பேசவில்லை; ஜாடைமாடையாகக் கூடப் பேசியதில்லை” என்று அண்ணாதுரை தமது கட்டுரையில் அம்பலப் படுத்தினார்.

இவர்களும், இவர்களைப் போன்ற பிறரும், ‘மோட்டாருக்குப் பெட்ரோல் வாங்கித் தருவது, ஆஃபீஸுக்குப் பேப்பர் வாங்குவது, நிதிக்குப் பணம் பெற்றுத் தருவது போன்ற அலுவல்களுக்கு மட்டுமே தேவைப்பட்டார்கள்’ என்றும், ‘இன்ன ஊரில், இன்ன இடத்தில் மாநாடு கூட்டு; அதற்கான ஏற்பாடு செய் என்று கூறிட மட்டுமே அவர்கள் தேவைப் பட்டார்கள்’ என்றும் கழக உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டதை, அண்ணாதுரை வலிமையாக சுட்டிக் காட்டினார்!

ஆதார நூல்கள் : 

1. பேரறிஞர் அண்ணா எழுதிய உள்ளம் வருந்திய நிகழ்ச்சிகள் - ‘திராவிட நாடு’ இதழ் கட்டுரைகளின் தொகுப்பு நூல். வெளியிட்டோர்: மீனா கோபால் பதிப்பகம், கதவு எண் 26, ஜோசப் காலனி, ஆதம்பாக்கம், சென்னை-88 (2000)

2. நெஞ்சுக்கு நீதி - கருணாநிதி - தினமணி கதிர் வெளியீடு, சென்னை-2.