Tuesday, February 17, 2009

தமிழ் அறிவோம்

தமிழ் தமிழ் என்று கூவி வியாபாரம் செய்யும் இக்காலத்தில் எது தமிழ், எது தமிழ் இல்லை என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

ர, ல, ட இந்த எழுத்துக்களில் ஆரம்பிப்பது தமிழ்ச்சொல்லே அல்ல.

உதாரணம் ரம்பம், லட்டு , டமாரம் போன்றவை. பெயர்ச்சொற்கள் வந்தாலும் அதன் முன் உயிரெழுத்து சேர்த்து தான் எழுத வேண்டும்.

உதாரணம்: இரவி, இலங்கை, அரங்கன். இது இலக்கணம்.

தமிழில் 247 எழுத்துக்கள் உள்ளன. ஆனால் 103 எழுத்துக்களில் தான் தமிழ் வார்த்தை ஆரம்பிக்க முடியும் என்பது நன்னூல் விதி.

ஆனால் இன்று தமிழ் தமிழ் என்று உயிர் விடும் எவ்வளவு பேர் இப்படி எழுதுகிறார்கள். அல்லது கொதித்து எழும் இளைஞர்கள் தான் இதை எல்லாம் கண்டு கொள்கிறார்களா? தங்கள் மொழியைப் பற்றிய அறிவே இவர்களுக்கு இல்லை. ஆனால் கொதித்து எழுந்திட மட்டும் தெரியும்.

தமிழ் என்று இன்றைய இளைஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் பாதி சொற்களுக்கு மேல் தமிழ் கிடையாது. தமிழ்ச்சொல்லே ஆனாலும் அதைக் கேள்வியே படாத தலைமுறை தான் இன்று உள்ளது. இருக்கட்டும். அது அவர்கள் இஷ்டம். ஆனால் ஒன்றும் தெரியாமல் உணர்ச்சிவசப்பட மட்டும் தெரிந்தால் அவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள்.

சில சொற்களைப் பார்போம். நல்ல பாம்பு. இது தமிழா இல்லையா?

இதில் என்ன சந்தேகம். நல்ல என்பதும் தமிழ் வார்த்தை. பாம்பு என்பதும் தமிழ் வார்த்தை. நல்ல பாம்பு என்பதும் தமிழாகத் தானே இருக்க வேண்டும்.

அது தான் இல்லை.

சரி. அது என்ன நல்ல பாம்பு. அது யாரையும் கடிக்காதா? அல்லது அது கடித்தால் உயிர் போகாதா? யாருக்கு நல்லது அந்த பாம்பு?

நல்ல என்றால் தெலுங்கில் கருப்பு என்று அர்த்தம். நல்ல பாம்பு என்றால் கருப்பு நிறமுள்ள பாம்பு அதாவது கருநாகம் என்று அர்த்தம்.

அதே போல் தான் நல்லெண்ணெய் என்ற சொல்லும். மற்ற எண்ணெய் எல்லாம் கெட்ட எண்ணெய் என்று அர்த்தமா ? எள்ளில் இருந்து எண்ணெய் எடுத்தால் அது கருநிறத்தில் இருக்கும். அதனால் அது நல்ல எண்ணெய். அதுவே நல்லது என்று பொருள் படும் தமிழ்ச்சொல்லாய் ஏற்கப்பட்டு பின் கூட்டு விதியால் நல்லெண்ணய் ஆகிவிட்டது.

மேலும் தமிழ் கற்போம்.